A Promised Land

30 அக்டோபர் 2014

இயக்குனர் முருகதாஸ் ஒரு கதைத்திருடனா?

அண்மையில் வெளிவந்த கத்தி படத்தினுடைய கதையினை தன்னுடையதுதான் என்று கோபி என்ன சமூக ஆர்வலர் உரிமை கோரியிருககின்றார். அவருடைய நேர்காணல் ஒன்றனை இன்று பார்த்தேன். பாவம் அந்த சமூகத்தை நேசிக்கும் படைப்பாளி. அவருடைய தெளிவான பேச்சு, சமூகத்தின்மீது அவருக்கு இருக்கின்ற பற்று, கத்தி படம் தொடர்பாக முருகதாஸைப் பார்த்து அவர் கேட்கின்ற ஆணித்தரமான கேள்விகள், இவற்றைப் பார்க்கும்போது இந்த கத்திபடத்தினை முருகதாஸ் கோபியிடமிருந்து களவாடியிருக்கின்றார் என்பதற்கு மேலும் சான்றாகின்றது

கஜினியும் அதற்கு பின்பு வந்த முருகதாஜின் படங்கள் எல்லாமே வேறுபடங்களை உல்டா செய்து எடுக்கப்பட்டவைதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல இதுவரையும் தன்னுடைய படங்கள் எதிலுமே கம்யூனிசம் பற்றி வாயே திறக்காத இந்த வியாபாரி முருகதாஸ் சமூகநலனை முன்னிறுத்தி அதுவும் கம்யூனிஸ கருத்துக்களுடன் ஒரு படம் எடுத்து வெளியிடும்போது அவரை சந்தேகத்துடனே பார்க்க வேண்டியிருக்கின்றது. (அந்தக் கம்யூனிஸ கருத்தும் கோபியினுடையதாம்.) முருகதாஸ் தான் ஒரு நேர்மையாளனாக இருந்திருந்தால் கோபிக்கு எதிராக வழக்குப்போட்டிருக்கவேண்டும் அப்படிச் செய்யாமல் இது பணத்திற்காக நடைபெறும் ஏமாற்று முயற்சி என்று அறிக்கை விட்டிருக்கின்றார் இந்த முருகதாஸ்.

முருகதாஸ் ஒரு நேர்மையானவராக கம்யூனஸித்திற்கு ஆதரவானவராக இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கமாட்டார். இயக்குனர் என்பதையும் தாண்டி வியாபாரி என்ற நிலையிலேயே இயங்கிவரும் முருகதாஸ் இப்படிப்பட்ட ஒரு கதையினை யோசித்திருக்கமாட்டார் என்று புலப்படுகின்றது.

உண்மையிலேயே கோபியினுடைய கதை திருடப்பட்டிருந்தால் முருகதாஸ் தண்டிக்கப்படவேண்டும் அத்தோடு அதற்கான விலையினை கொடுக்கவேண்டும் அப்போதுதான் இனிவரும் காலங்களிலாவது பல உதவி இயக்குனர்களுடைய கதை திருடப்படாமல் பாதுகாக்கப்படும்.


கஜினி படத்தின் ஒரிஜினல் படமான மொமென்ரோ படத்தின் இயக்குனர் விரைவில் இந்தியா வருகின்றாராம். முருகதாஸ் அவருடைய படத்தின் கதையினை திருடியதையும் யாராவது அந்த இயக்குனரின் காதில் போட்டுக்கொடுங்கள். அந்தக் கதையினை திருடியதற்காகவும் முருகதாஸ் மீது சட்டநடவடிக்கை எடுக்கட்டும்.

முருகதாஸ் புகழ்பாடும் விஜய் டிவியும் சமூக பிரச்சனைகளை வெளிக்கொண்டுவரும் நீயாநானா கோபிநாத்தும் இந்த கதைத்திருட்டைப் பற்றி நீயா நானா செய்வார்களா இல்லாவிட்டால் வழமைபோலவே வாங்குறதை வாங்கிக்கொண்டு ஜால்ரா அடிப்பார்களா என்பது பலருடைய எதிர்பார்ப்பு.


கோபியினுடைய நேர்காணல்


27 அக்டோபர் 2014

சினிமா என்பது வெறும்பொழுதுபோக்கு ஊடகம் மாத்திரமா?


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற ரீதியிலேயே இந்தியர்கள் சினிமாவை அணுகுகின்றார்கள். ஆனால் சினிமா என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு ஊடகமா என்ற கேள்வியினை கேட்கவேண்டிய நேரம் இது. சினிமா என்றால் பொழுதுபோக்கு ஊடகம் என்ற மாயையை தவறான எண்ணத்தினை மக்கள் மத்தியில் புகுத்தியவர்கள் யார்? ஏன் அவ்வாறு மாற்றினார்கள் என்பதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் புதைந்து கிடக்கும் என்பதுதான் உண்மை.

சினிமா என்பது ஒரு இனத்தின் அரசியலைப் காத்திரமாக பேசும் கலை. உண்மையிலே கலை என்பது காலத்தின் கண்ணாடி. ஒரு இனத்தின் வாழ்வியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தவும் அரசுகளையும் அதிகாரத்தவர்களையும் கேள்விகேட்கக்கூடிய ஒரு மிகப்பலம்வாய்ந்த ஊடகம். இந்த சினிமா என்ற மிகமுக்கியமான அசையும் காட்சி ஊடகம் 20ம் நூற்றாண்டின் லுமினஸ் சகோதரர்களின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. இந்த சினிமாவால் பல அரசுகளே ஆட்டம் கண்டிருக்கின்றன. பல இயக்குனர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் பலர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றார்கள் அத்தோடு படைப்புக்கள் அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றால் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்ன கேள்வி இயல்பாகவே சினிமா தொடர்பாக சாதாரண அறிவுள்ள ஒருவருக்கு எழவேண்டும்

இந்தியாவில் சினிமாவை அரசியல் காரணங்களுக்காக பொழுதுபோக்கு ஊடகமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஒரு நல்ல சினிமா என்பது பார்வையாளனுடைய சிந்தனையை இன்னொருகட்டத்திற்கு தூண்டிவிடவேண்டும். அதுவே நல்ல சினிமா. தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டங்களில் நடிகர்கள் பெரிய திரையில் சண்டைபிடிப்பார்கள் பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள். ஆனால் இன்று நடப்பது என்ன இரசிகர்கள் நடிகர்களுக்காக பிரிந்து தங்களுக்கிடையில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் நடிகர்கள் அமைதியாக இவற்றை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் யார்? யார் இதற்கு பொறுப்புகூறவேண்டும்? இன்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் என்று கேட்டால் 70 களில் 80 களில் வெளிவந்த படங்களையே பெரும்பாலானோர் கூறுவார்கள் காரணம் என்ன அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்கள் தரமானவையாகவும் காத்திரமான படைப்புக்களாகவும் இருந்தன. இன்று வெளிவரும் திரைப்படங்கள் வெறும் வன்முறையினையையும் ஹீரோயிசத்தையும் பெண்களின் உடலையும் சதையையும் முன்னிறுத்தியே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் புதிய சில இளம் இயக்குனர்கள் நம்பிக்கை தருகின்றனர் ஆனாலும் அவர்களும் எவ்வளவுநாள் இந்த மாயையை தாக்குப்பிடிப்பார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

இந்தியாவில் கலையை கொலைசெய்து இன்று அதை வியாபாரமாக்கிவிட்டார்கள். ஒருசில நாட்களில் பலநூறுகோடி சம்பாதிக்கும் வழியாகவே சினிமாவை பயன்படுத்துகின்றார்கள். பார்வையாளர்களுடை பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  இவற்றை செய்வது வியாபாரிகளுக்கு இலகுவாக இருக்கின்றது. ஒரு சில சமூகப்பொறுப்புள்ள இயக்குனர்களைத்தவிர மற்ற எல்லோருமே இயக்குனர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு வியாபாரிகளாகவே இன்று திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்றால் மாத்திரமே நல்ல காத்திரமான சினிமாவை நாங்கள் பார்க்கமுடியும்.



vathees@gmail.com

26 அக்டோபர் 2014

இனி அவனுக்கு மீண்டும் விருது

முதலாவது ஹிரு கோல்டன் விருதுகள் 2014 விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது இந்த முதலாவது விருதுவழங்கும் விழாவில் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த விழாவில் பொலிவூட் நாயகர்கள் விவேக் ஒப்ராய் பிபாஷாபாசு அனில் கபூர் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.



இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் 2012ல் இலங்கையில் தலைசிறந்த இயக்குனாரன அசோக ஹந்தகமவின் நெறியாள்கையில் வெளிவந்த “இனி அவன்” தமிழ்த் திரைப்படத்துக்கு 5 விருதுகள் கிடைத்திருந்தது. இந்தப்படத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் சிறந்த நடிகருக்கான விருதினையும், நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் அஜித் ராமநாயக்க சிறந்த படத்தொகுப்புக்கான விருதினையும் அசோக ஹந்தகம சிறந்த இயக்குனருக்கான விருதினையும் பெற்றனர். அத்தோடு சிறந்த படமாக இனி அவன் திரைப்படமும் விருது பெற்றது.                                                      
                                                                                                                         Asoka Handagama




                                                       விருது வென்ற தர்ஷன் மற்றும் நிரஞ்சனி


இனி அவன் திரைப்படம் 2012ம் ஆண்டு கான்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதோடு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ரொரொண்டோ, பேர்ளின், டோக்கியோ, போன் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இலங்கையின் சினிமாவில் ஒரு தமிழன் சாதிக்கின்றான் எனும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது

23 அக்டோபர் 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கோற்பட்டறை நாயா?


மேலே தலைப்பில் குறிபிபட்ட விடயம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளிப்படையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்த விடயம். இலங்கையின் கடந்த வார பீக் செய்திகள் எல்லாம் யாழ்ப்பாணத்திற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விஜயமும் யாழ்தேவியின் மீள்வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புறக்கணிப்பும்தான்.



இலங்கை ஜனாதிபதி தன்னுடைய அரசியல் செல்வாக்கை தென்னிலங்கையில் அதிகரித்துக்கொள்ளவும் அடுத்த ஆண்டில் இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை கருத்தில் கொண்டுமே தன்னுடைய யாழ் விஜயத்தினை ஏற்பாடு செய்திருக்கின்றார் என்பது பலருடைய கருத்து. அங்கே இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டங்களில் அவர் தெரிவித்த கருத்துக்களும் மேலுள்ள கூற்றுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவுமே காணப்பட்டது. யாழ்தேவி பயணத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தயை ஊடகங்கள் முதன்மையாக காட்டியிருந்தாலும் அதையும் தாண்டி பல செயற்திட்டங்களை அவர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தார். அவற்றில் பாடசாலைகளுக்கு ஆய்வுகூடங்கள் மற்றும் பல திட்டங்கள் என்பவை அடங்கும். இவை பெரிதாக ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் ஏற்றுக்கூடியவையா? 



இதேவேளை வடக்கு மாகாண சபையினை தன்னுடைய கையில் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதியின் இந்த யாழ் விஜயத்தினை வெளிப்படையாகவே புறக்கணித்திருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ எம்பிக்களோ வடமாகாணசபை உறுப்பினர்களோ யாருமே எந்த வித நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவில்லை. ஆனால் வடமாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.


யுத்தம் முடிந்த பின்னர் மனித சிவில் உரிமைகள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை மற்றும் இராணுவ பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இதுபோன்ற நிலையில் மகிந்தவின் விஜயம் அரசியலை அடிப்படையாக கொண்டது ஆகவேதான் இவ்விஜயத்தினை புறக்கணிக்கின்றோம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்திக்கூட்டத்தில் பங்குபற்றாமல் விட்டது விமர்சிக்கவேண்டிய ஒன்று. சிவில் உரிமைகள் கிடைக்கவில்லை எனப்போரடுவது ஏற்கத்தக்கதுதான் ஆனால் அதைக்காட்டி மக்கள் வாழம் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்குபற்றாமல் இருப்பது விமர்சிக்க வேண்டியது.


வடக்கின் காப்பட் வீதிகளில் தாங்கள் சொகுசாக பயணிக்க சொகுசு வாகனங்களை அரசாங்கத்திடம் கேட்டு வாங்குவதில் வடமாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இருக்கின்ற ஆர்வம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பெற்றுக் கொள்வதற்கு அல்லது பெற்றுக் கொடுப்பதற்கு இல்லாமல் இருக்கின்றது. 


என்ன நடந்தாலும் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் டக்ளசுக்கு வாக்களிக்கமாட்டார்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பான (இலங்கை தமிழரசு கட்சி) தமக்கே வாக்களிப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கையினை வைத்துக்கொண்டு தமிழரசு கட்சியினர் எழுந்தமானமாக செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் எவ்வளவுநாள்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பின்னாலே போவார்கள் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் தமிழர்கள் தாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றார்கள். வேறு வழிகள் இல்லாத காரணத்தினால் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.


இலங்கைத் தமிழரசு கட்சியின் தமிழீழ கனவில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் அழிந்துபோனது அப்பாவி மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும்தான். அந்த அழிவு போர் எம்மோடே போகட்டும் எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு வேண்டாம் என்பதுதான் இன்று இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பு. அதற்கு இன்றைய நவீனகால அரசியலை சமாளிக்கும் திறனுடைய பலமான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் அணியொன்று தமிழர்களுக்கு தேவை. அதுதான் காலத்தின் கட்டாயம்கூட. அவ்வாறு ஒரு இளைய அணியொன்று  அரசியலில் எழுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இறுதி செய்யப்படு புதிய அரசியல் எழுற்சி ஒன்று ஏற்படும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில் தமிழர்கள் இன்று இருக்கின்றார்கள். காரணம் இன்றைய நாட்டின் சூழல் பலமான இளைஞர் அணியொன்றை அரசியலில் கட்டியெழுப்ப சந்தர்ப்பத்தினை வழங்குமா என்பது முக்கியமான கேள்வி. அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிதான் இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

கத்தி... தமிழர்களுக்கு நிலத்தடி நீரின் அருமை இனியாவது புரியுமா?

கத்தி படம் பார்த்துவிட்டேன். தனிப்பட்ட ரீதியில் எனக்கு இந்தப் படம் பிடித்திருக்கின்றது காரணம் படத்தினுடைய பிரதான கரு. (இந்த கதையினை கோபி என்பவரிடமிருந்துமுருகதாஸ் 4 வருடங்களுக்கு முன்னர் களவாடியுள்ளாராம். அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளும் நடைபெற்றதாம். 

அடுத்த உலகப்போர் என்ற ஒன்று வருமானால் அது நீருக்காகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் பொதுவாக கூறுகின்றார்கள். அது உண்மையும்கூட. நிலத்தடி நீர் என்ற மிக்பெரிய கருவினை மைய்யமாக வைத்து இந்தக் கதை முருகதாஸினால்(??????) எழுதப்பட்டிருக்கின்றது. இலங்கையில் இருக்கின்றவர்களுக்கு நிலத்தடி நீர் தொடர்பான அறிவு எந்தளவுதூரம் இருக்கு என்று எனக்குத் தெரியாது ஆனால் காலம்கடந்து வந்திருந்தாலும் இந்தப் படம் நிலத்தடி நீர் தொடடர்பாக  தமிழ்நாட்டின் சமூகமட்டத்தில் ஒரு பரவலான கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு கீழேயுள்ள எஞ்சியுள்ள நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும்

விஜய் இந்த Powerful கதையினை தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியிருக்கின்றார் படத்தில் வன்முறையினையையும் ஹீரோயிஸத்தையும்  தவிர்த்திருக்கலாம்

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு Corporate  கம்பனி இன்னுமொரு Corporate கம்பனிக்கு எதிராக எப்போதும் வேலைசெய்யாது ஆனால் லைக்கா என்ற மிகப்பெரிய Corporate கம்பனி இந்த குளிர்பான மற்றும் மெதேன் வாயு உற்பத்தியில் ஈடுபடும் உலகலாவிய ரீதியில்மிகப் பலம்பொருந்திய Corporate நிறுவனங்களுக்கு எதிரான கதையினைகூறும் படத்தை எடுத்திருப்பதுதான் ஆச்சரியமளிக்கின்றது.

விஜய் என்ற நடிகனை தவிர்த்து எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உலகளவில் இருக்கப்போகும் இந்த நிலத்தடிநீர்ப் பிரச்சனையினை காலதாமதமாக கையிலெடுத்திருந்தாலும் கோபி என்றவரிடம் இந்த கதையினை களவாடி இந்த கதையினை இயக்குனர் முருகதாசு  இயக்கியிருக்கின்றார்.

இந்த திரைப்படம் சமூகமட்டத்தில் அதுவும் குறிப்பாக இந்தியாவின் கிராமங்கள் நகரங்களில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை தோற்றுவிக்கவேண்டும் அதனூடாக மிகவும் பெறுமதிவாய்ந்த அத்தியாவசியமான நீர் அதுவும் நிலத்தடி நீர் தொடர்பான விளிப்புணர்வு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பது நிலத்தடி நீர் பாதுகாக்கப்படவேண்டும் என்று சிந்திக்கின்ற என்னுடைய அவா.

*இந்தக் கதையினை சொந்தமாக எழுதிய கோபி என்ற அந்த சமூக சிந்தனைவாதிக்கு  ஒரு சல்யூட் (இது தொடர்பான கோபியினுடைய நண்பரின் பேஸ்புக் பதிவு - http://goo.gl/F0L5sq)

*கதையினை களவாடிய முருகதாஸிற்கு ஒரு *^*&#@#%$@ 

22 அக்டோபர் 2014

ஒரு மனிதனின் நடத்தையில் செல்வாக்கு செலுத்துபவை

உகண்டாவை ஆட்சி செய்த இடி அமீனைப் பற்றி பிரபு சங்கர் எழுதிய புத்தகத்தை 3வது முறையாகவும் வாசித்து முடித்திருக்கின்றேன். இதற்கு காரணம் சாதரணமாக இருந்த ஒருவன் பின்னர் இராணுவ வீரனாகி இராணுவ கொமாண்டர் ஆகி பின்பு உகண்டாவினுடைய தலையெழுத்தையே மாற்றியிருக்கின்றான் என்றால் அது எப்படி சாத்தியம் என்ற தேடல்தான் மட்டுமல்லாது அவனுடைய கொடூர செயல்களுக்கு பின்னால் இருந்த காரணிகளை ஆராய வேண்டும் என்ற ஆவலும்தான்.


ஒருவனுடைய குணவியல்புகளை தீர்மானிப்பதில் அவனது குடும்பம் அவனது குல கோத்திரம் மற்றும் அவன்சார்ந்த இனக்குழுவினரது வாழ்க்கைமுறை மற்றும் அவர்களுடைய கலை கலாச்சாரம் இவை எல்லாமே அடங்குகின்றது. இடி அமீன் ஒரு மோசமான மனித மாமிசம் சாப்பிடும் சர்வதிகாரியாக பல அட்டூழியங்களை செய்த ஒரு கொடுங்கோலனாக இருப்பதற்கு காரணமும் அவனுடைய இனக்குழுவின் வாழ்க்கை முறையே என்பது புலனாகின்றது. அவனுடைய இனக்குழுவில் இரத்தம் குடிப்பது கொலை செய்வது போன்றவை பெரிய வியமாக காணப்படவே இல்லை. சிறுவயதுமுதலே அவற்றை நேரிலே கண்டுவந்திருந்த அவனுக்கு உகண்டாவின் ஆட்சியினை கைப்பற்றியவுடன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எவ்வளவு கொடூரமான செயல்களை செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்வதற்கு இலகுவாக முடிந்தது. அவன் மனித மாமிசம் உண்டதற்குகூட அவர்களது இனக்குழுவில் நடைமுறையில் இருந்து மூட நம்பிக்கையே இதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.


ஒரு மனிதனுடைய நடத்தையில் அவனைச் சார்ந்த சமூகம் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றது என்பதுதான் உண்மை. சமூகம் என்னும் போது அவனுடைய குடும்பமும் அடக்கம்.

20 அக்டோபர் 2014

ஐய்யய்யோ கத்தி(கள்)... இதுதான் றியல் கத்தி

தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதாவென்று பதறியடிச்சு ஓடிந்த அனைவருக்கும் நன்றிகள்

இங்கே நான் பகிரும் இந்த வீடியோ இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுவென்ற குறும் திரைப்படம். இதனுடைய பெயர் கத்திகள். இதை 2008ம் ஆண்டு என்னுடைய நண்பர் ஆனந்த ரமணன் இயக்கியிருந்தார்.

14 அக்டோபர் 2014

How Old Are You?


மேலே உள்ள தலைப்பு அண்மையில் மலையாள சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இரண்டு நாட்களுக்கு முன்னம் இந்தத் திரைப்படத்தினைப் பார்த்தேன். படம் பிடித்துப் போய்விட்டது. இன்றுதான் அதைப்பற்றி கிறுக்குவதற்று நேரம் கிடைத்தது. இது அந்தப் படத்தினைப் பற்றி விமர்சனம் அல்ல அந்தப் படம் தொடர்பாக நான் கிறுக்கியவை. 


தெற்காசியாவில் அதுவும் இலங்கை மற்றும் இந்தியாவில் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகங்க கட்டமைப்புக்களுடன்தான் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். பெண்கள் மனைவி என்ற ஸ்தானத்தை திருமணத்தின் மூலம் பெற்றுக்கொண்டு கணவனுக்கு சேவை புரிபவளாகளும் பிள்ளைகளை பெற்று பராமரிப்பவளாகவுமே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கின்றாள். படித்து வேலையில் இருப்பவர்கள்கூட இந்த ஆணாதிக்க சமூகத்தின் இறுக்கமான கட்டமைப்புக்களுக்குள் சிக்குண்டு தங்களுடைய கனவுகளை குடும்பத்திற்காக மூட்டைகட்டி ஒரு மூலையில்போட்டுவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். விதிவலக்காக பல பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து வெளியே வந்து பெண்களுக்கான உரிமைகளை குடும்பத்திலும் சமூகத்திலும் வென்றெடுக்க போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் சில பெண்கள்  ஏனைய பெண்களுக்கு கட்டமைப்பிலிருந்து வெளியே வருவதற்கு முன்மாதியாகவும் இருக்கின்றார்கள். இது ஒரு மிகப்பெரிய பரந்துபட்ட தலைப்பு. இந்தத் தலைப்பினை பிரதான கருப்பொருளாக எடுத்துக்கொண்டு பெண்களுக்கு சமூகக் கட்டமைப்புகளிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு ஆரம்ப்பப் புள்ளியை அல்லது ஒரு உந்துசக்தியை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் இந்த “How Old Are You?”. 



வருவாய் துறை அலுவலகத்தில் சாதாரண கிளாக்காக பணிபுரியும் நிருபமாவின் கணவன் ராஜீவ்ஆகாசவானிவானொலி அறிவிப்பாளன். அவனுடைய நீண்டகால கனவு  அயர்லாந்து நாட்டுக்கு சென்று குடியேற வேண்டும் என்பதே. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள். நிருபமா தனது கும்பமே தனக்கு எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவள். அவளுடைய வயதை காரணம்காட்டி அயர்லாந்து செல்வதற்கான விண்ணப்பம் நிராகரிககப்படுகின்றது. அதேவேளை எதிர்பாராத விதமாக நிருபமா தன்னுடைய மகள் ஊடாக கேட்ட ஒரு கேள்வி காரணமாக இந்தியாவின் ஜனாதிபதி நிருபமாவை சந்திக்க விருப்பப்படுகின்றார். ஜனாதிபதியினை சந்திக்கச்செல்லும் நிருபமா எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் அவருடன் பேசமுடியாமல் போய்விடுகின்றது. இதன் காரணணமாக அவர் சமூகவலைத்தளங்களில் கேலிக்கு உட்படுகின்றாள். இதேவேளை நிருபமாவின் கணவனுக்கும் மகளுக்கும் அயர்லாந்து செல்வதற்கான விசா கிடைக்கின்றது. இருவரும் நிருபமாவை விட்டுவிட்டு அயர்லாந்து பயணிக்கின்றனர். பின்னர் நிருபமாவினுடைய பள்ளித்தோழி ஒருவரை சந்திக்கும் நிருபமா அதன்மூலம் கல்லூரிக்காலங்களில் அவள் ஒரு சிறந்த ஆளுமையுள்ள ஒருத்தியாக இருந்ததையும் தற்போது திருமணம் முடித்து குடும்பத்துக்காகவே வாழும் ஒரு சாதாரண பெண்ணாக மாறிவிட்டதையும் காண்கின்றாள். மீண்டும் நிருபமாவினுடைய ஆளுமையை வெளியே கொண்டுவர அந்த நண்பி முயற்சிக்கின்றாள். அதிலே வெற்றியும் அடைகின்றாள். இதன் பின்னர் நிருபமா சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்புக்களை முன்னெடுக்கும் நிலைக்கு உயரும் நிலையினை அடியும்போது அயர்லாந்திலிருக்கும் கணவன் ஊர் திரும்பி அவளுக்கு அயர்லாந்து செல்ல விசா கிடைத்துவிட்தென்றும் மகளுக்கு சரியான உணவு இல்லை ஆகவே நிருபமா வந்தால்எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகின்றான். அவள் குடும்பத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அயர்லாந்து போகின்றாளா அல்லது தொடர்ந்தும் இந்தியாவிலே இருந்து தன்னுடைய கனவுகளை நனவாக்கின்றாள் என்பதுதான் படத்தினுடைய சாராம்சம். 


கேரளாவில் மட்டுமல்ல பொதுவாக தெற்காசியாவுக்கும் பொதுவான இந்த பரந்துபட்ட தலைப்பினை மிக அழகாக Bobby Sanjay திரைக்கதையாக்க அதை திரைப்படமாக கொடுத்திருக்கின்றார் இயக்குனர் Rosshan Andrrews
இந்தப்பட்ம் ஆணணாதிக்க கட்டமைப்புக்குள் சிக்கி தன்னுடைய கனவுகளையும் ஆசைகளையும் மூலையில் போட்டு வைத்திருக்கும் பெண்கள் தங்களுடைய நிலையினை உணரவும் பெண்கள் சாதிப்பதற்கு அவர்களுடைய வயது ஒன்றும் பெருட்டே இல்லை என்பதையும் 140 நிமிடங்களுக்குள் மிக அழகாக காட்டியிருக்கன்றார் இயக்குனர். இதில் நிருபமா கதாபாத்திரத்திற்கு வரும் மஞ்சு வாரியர் தன்னுடைய நடிப்பினால் நிருபமா பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார். அத்தோடு சமூகத்தில் காணப்படும் மிகப்பெரிய சிக்கலுடைய பெண்கள் அடக்குமுறை மற்றும் ஆணாதிக்க மனோநிலை மற்றும் கட்டமைப்பு பிரச்சனையை மிக எளிதாக இந்தப் படத்தின்மூலம்  காட்டி அவற்றை தகர்த்துக்கொண்டு பெண்கள் சமூக மட்டத்திற்கு எவ்வாறு உயரலாம் என்பதை இந்தப்படம் மிகத்தெளிவாக காட்டியிருக்கின்றது. கட்டாயம் மலையாளம் பேசுவோர் மாத்திரமல்லாது எல்லா மொழி பேசுபவர்களும் பார்க்கவேண்டிய ஒரு மிகச்சிறந்த படம். 


13 அக்டோபர் 2014

கத்தி யாருக்கு ஷார்ப்? விஜய்கா அல்லது லைக்காவுக்கா?



கத்தி படம் விஜய் இரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம். ஆனால் தற்போது சினிமா இரசிகர்கள் எல்லோராலும் வெளிவருமா இல்லை என ஆவலோடு எதிர்பார்க்கப்படும் படம். உண்மையில் கத்தி படத்திற்கு என்னதான் பிரச்சனை? ஏன் இவ்வளவு தடை முயற்சிகள் அந்தப் படத்திற்கு? என்னுடைய ஊகங்கள் கீழே...

1. லைக்கா மொபைல் என்னும் பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் சினிமாவில் காலூன்றுவதை தடுத்தல்.

2. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடவேண்டும் அரசியல் ஆசையில் துடித்துக்கொண்டிருக்கும் விஜய்க்கு அரசியல் மட்டத்திலிருந்து கொடுக்கபபடும் நெருக்கடியில் இதுவும் ஒன்று. 

மேலே கூறிய இரு பிரதான காரணங்களிலிலும் முதலாவது காரணமே இந்தக் கத்தி படத்திற்கு ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு காரணமாக இருக்கவேண்டும் என கருதவேண்டியிருக்கிறது.

சினிமா என்பது கலை என்ற ஒரு விடயத்தினையும் தாண்டி இந்தியாவில் சினிமா என்பது 100% வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.                                  இந்த வியாபாரத்தில் பைனான்ஸியர் தயாரிப்பாளர் தொடக்கம் தியட்டர் முதலாளிவரை குறுகிய காலத்தில் அதிகளவு இலாபத்தினை பார்த்துவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருப்பவர்கள். சாதாரணமாக இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் பைனான்ஸியர்களை அணுகுவார்கள். அவர்களும் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து பணத்தை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவார்கள். தயாரிப்பாளர் அதற்குப் பின்னர் படத்தை தயாரிப்பார். ஆரம்பிக்கும்போதே படத்தை திரையிடும் காலத்தினையும் தீர்மானித்துவிடுவார்கள். எல்லாமே பக்காவாக பிளான் பண்ணப்பட்டுத்தான் நடந்துகொண்டிருக்கின்றது. இதில் குறிப்பிட்ட திகதியில் படம் வெளிவராவிட்டால் படத்தின் தயாரிப்பளருக்கு சிக்கல்தான். (விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு வந்த பிரச்சனையும் அதுதான்)

இப்படி இந்திய சினிமா ஒருவரோடு ஒருவர் இணைந்த முறையில் ஒரு மாபியா ஆகவே இயங்கிக்கொண்டு வந்திருக்கின்றது இங்கே இதற்கும் கத்தி பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.
பல்லாயிரக்கணக்கான மில்லியன் முதலீட்டுடன் செயற்பட்டுவரும் லைக்கா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிக்க வரும்போது ஏற்கவே இருந்த பைனான்ஸியர், தயாரிப்பாளர் என்ற ஒன்றுக்குள் ஒன்று பின்னப்பட்ட வலையமைப்பினை இந்த பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தங்கியிருக்கத்தேவையில்லை. நேரடியாகவே எத்தனை கோடிகளையும் முதலிட அவர்கள் தயாராகவிருப்பார்கள். காரணம் அவர்களில் இருக்கும் தாராள பணப்புழக்கம். இதனால் ஏற்கனவே இருந்த நடைமுறைகள் சிறிது சிறிதாக ஆட்டம் காணத் தொடங்கும் இவ்வாறு இடம் பெற்றால் ஏற்கனவே சினிமா மூலம் கொள்ளை இலாபம் கண்டு சுவை பிடிபட்ட முதலாளிகளுடைய இருப்புக்கு அரம்பத்தில் பெரிதாக சிக்கல் இல்லாவிட்டாலும் லைக்காவின் வரவு பல புதிய பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவில் சினிமாவில் நேரடியாக முதலிட வாய்ப்புக்களை உருவாக்கிவிடும் இது முதலாளிகளில் இருப்பினை கேள்விக் குறியாக்கிவிடும். ஆகவே லைக்காவின் வரவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும அல்லது பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் குடுத்துதமிழ் சினிமாவில் முதலிட நினைக்கின்ற ஏனைய பல்தேசிய நிறுவனங்களுக்கு பயத்தினை ஏற்படுத்தவேண்டும் இதன்மூலம் அவர்களை உள்ளே வரவிடாமல் செய்யவேண்டும். இந்தப் பின்னணிதான் கத்தி படத்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கு காரணம். இதற்கு இந்தப் பிரச்சனைகளுக்கு பின்னாலிருப்பவர்கள் கண்டுபிடித்த காரணங்கள்தான் லைக்கா நிறுவனம் இலங்கை அரசுடனும் ராஜபக்ஷ குடும்பத்துடனும் மிகவும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனம் என்ற கருத்தினை முன்வைத்து பிரச்சனைகளை வலுவாக்கியதுதான்.

ஆனால் அந்தோ பாவம் தமிழ் சினிமா இரசிகர்கள். ஏற்கனவே நடிகர்களுக்காக பிரிந்துநின்று அடிபடும் அவர்களை இருபகுதியும் நன்றாக பயன்படுத்துகின்றார்கள். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி லைக்கா நிறுவனத்தின் எதிரிகளும் புகுந்து விளையாடுகின்றார்கள் ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு அப்பால் இந்தப் பிரச்சனைகளால் லைக்கா நிறுவனத்திற்கு இலவசமாக தங்களது நிறுவனத்தினைப் பற்றிய விளம்பரம் கிடைத்திருக்கின்றது. கத்தி பிரச்சனைக்கு முன்னர் லைக்கா பற்றி தெரிந்தும் அவர்களுடைய சேவையினை பயன்படுத்தாமல் இருந்தவர்கள் இப்போது லைக்கா நிறுவனத்தின் சிம் அட்டைகளை பாவித்து இந்தியாவுக்கு மிகக்குறைந்த செலவில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்களாம்.

ஆக மொத்தத்தில் கத்தி விஜய்கும் முருகதாசுக்கும் ஷாப்பா வேலை செய்கிறதோ இல்லையோ லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கு நல்ல ஷார்ப்பாகவே வேலை செய்கின்றது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று இதைத்தான் சொல்றது.

fb - வதீஸ் வருணன்- 

யாழ்தேவி... ஒரு உணர்வுபூர்வமான உறவுப்பாலம்



ஒரு நாட்டின் போக்குவரத்து என்பது அந்த நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். எந்தவொரு நாட்டில் போக்குவரத்து மேம்பட்டு காணப்படுகின்றது அந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாகவோ அல்லது அபிவிருத்தியினை வேகமாக எட்டுவதற்கு பயணித்துக் கொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே கருதமுடியும். 

இலங்கையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலமாக இருப்பது என்னவென்று கேட்டால் ஒன்று ஏ9 பிரதான வீதி மற்றையது யாழ்தேவி புகையிரதம். இந்த இரண்டு போக்குவரத்து சேவையிலும் புகையிர சேவையானது மிகவும் புகழ்வாய்ந்தது. வடற்கிற்கும் தெற்குக்கும் இடையிலான உண்மையான உறவுப்பாலம் எதுவென கேட்டால் யாழ்தேவி புகையிரதத்தினைத்தான பலரும் கூறுவார்கள். உண்மையும் அதுதான். 

1956ம் ஆண்டு வடக்கிற்கான பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி 1990களில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் 2009 யுத்தம் முடிவுற்றதன் பின்னர் சிறிது சிறிதாக பளை வரை பயணித்த புகையிரத சேவை இன்று முதல் 13.10.2014 யாழ்ப்பாணம்வரை தனது சேவையினை 14 ஆண்டுகளிற்கு பின்னர் ஆரம்பிக்கின்றது. இந்திய அரசின் நிதியுதவியிலேயே இந்த புகையிரதசேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவையினை இன்று ஆரம்பித்து வைக்க இருக்கின்றார். 

90களின் பிற்பகுதியில் பிறந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பலரும் இன்றைக்கு பிற்பாடு புகையிரதத்தினை நேரில் பார்க்கும் வாய்ப்பினைப் பெறப்போகின்றார்கள். அது ஒரு உணர்வு பூர்வமான தருணமாக இருக்கப் போகின்றது. அத்தோடு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பிரயாணங்களை இது மேலும் இலகுபடுத்தப் போகின்றது. 

யாழ்ப்பாணத்திற்கு புகையிரதசேவை வருவதானது யாழ்ப்பாணத்திற்கு சாதகமான பல விடயங்களையும் பாதகமான பல விடயங்களையும் கொண்டுவரப் போகின்றது. இவற்றையெல்லாம் தாண்டி 2 தசாப்தங்களுக்கு மேலானா வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலாக ஒரு இடைவெளியினை இது இல்லாமல் செய்யப்போகின்றது என்பது முற்றிலும் உண்மை. 




07 அக்டோபர் 2014

மெட்ராஸ் - கொண்டாடப்படவேண்டிய படமல்ல


இது விமர்சனமல்ல ரௌத்திரம்
அண்மையில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. இதன் காரணமாக திரைப்படத்தினைப் பார்த்தேன். தமிழ் சினிமாவின் தலைவிதியை எண்ணி நான் நொந்துகொண்டேன்
தமிழ் சினிமா குட்டைக்குளிருந்து வெளியேவரமுடியாமல் வெளியே வந்துவிட்டதுபோல் மாயையை ஏற்படுத்திக் கொண்டு வந்திருக்கிறது இந்தத் திரைப்படம். மற்ற வியாபார தமிழ் சினிமாவைப்போலவே இந்திரைப்படத்திலும் கொலை, வெட்டுக்குத்து, அடிதடி, அரசியல், துரோகம் எல்லாமே அப்படியே பிடித்துவைத்த பிள்ளையார் போல குடியிருக்கிறது
புதிதாக இருப்பது, ஹீரோயிசம் காட்டாது ஒவ்வொருவரா கொலை செய்துவிட்டு இறுதியில் சிறுவர்களுக்கு பாடமெடுக்கும் கார்த்தியும் கதைக்களமான "வட சென்னையும்" மட்டும்தான்.
வழமையாக தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் பஞ்ச வனம்பேசி 100 பேரை அடித்து வீழ்த்தி பார்வையாளனுக்குள்ளும் வன்முறையை புகுத்தி வீடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் நடைமுறை இருந்துகொண்டிருந்தது. இந்தப்படத்தில் சிறிது வித்தியாசமாக கதாநாயகன் ஹீரோயிசம் காட்டாது படம் நெடுகிலும் கொலைசெய்துகொண்டு பார்வையாளர்களுக்குள் சத்தமில்லாது வித்தியாசமான வன்முறை சிந்தனையினை தூண்டி விட்டிருக்கின்றார் இயக்குனர். அட்டக்கத்தி என்ற நல்ல ஒரு திரைப்படத்தினை கொடுத்த Pa Ranjith தானா இந்த படத்தை எடுத்தது என்று மீண்டும் என்னுள்ளே கேள்வியை எழுப்ப வைத்துவிட்டது இந்தப் படம்.
*இன்று ஒரு செய்தி பார்த்தேன். சமூக மாற்றத்துக்கான விருது மெட்ராஸ் படத்திற்கு வழங்கப்போகின்றார்களாம். என்ன கொடுமையான ஒரு அறிவிப்பு இது. வன்முறைக் கலாச்சாரத்தினை வித்தியாசமான முறையில் மக்களுக்குள் புகுத்திய இப்படத்திற்கு சமூக மாற்றத்திற்கான விருது கொடுத்து தவறான முன்மாதிரியை தமிழ் சினிமாவுக்கு காட்டப்போகின்றார்கள் என்ற வருத்தம்தான் எனக்கு.
கலையினை கட்டாயக் கொலைசெய்து வியாபாரமாக மாறிவிட்ட தமிழ் சினிமாவின் முடிவு எவ்வாறு இருக்கும்?