A Promised Land

22 ஏப்ரல் 2018

Beyond the Clouds!



புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியுள்ள ஹிந்தித் திரைப்படம்தான் இந்த Beyond the Clouds! இவர் இந்தியாவின் மும்பையை களமாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என அறிந்தபோதே இந்தப்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் என்றுள் இயல்பாகவே ஏற்பட்டது. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இருந்த இன்னுமொரு காரணம் இப்படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். 

தாரா மற்றும் அமீர்
மும்பையின் ஒரு  அடையாளமாகத் திகழும் டோபி காட் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அக்காவுக்கும் (தாரா) தம்பிக்குமிடையிலான (அமீர்) உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் மும்பையின் மறுபக்கத்தையும், நல்லதொரு வாழ்க்கையை எப்படியாவது அடைந்துவிட ஓடிக்கொண்டிருக்கும் அந்நகரத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் அழகாக பிரதிபலிக்கின்றது. அத்தோடு மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிமாநில மக்களையும் இந்தப்படம் விட்டுவைக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ் மனிதன் ஒருவரே இப்படத்தின் கதையின் திருப்புமுனையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றார் என்பது சிறப்பு அம்சமாக இருக்கிறது.  

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலை காரணமாக பிரியும் தாராவும் அமீரும்  எதிர்பாராமல் சந்திக்கும் சூழ்நிலையில் இக்கதை என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. தாராவோ பாலியல் தொழில் செய்தாவது  வாழ்க்கையை வென்றுவிடவேண்டுமென்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமீரோ போதைப்பொருள் கடத்தியாவது பணக்காரனாகிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடிக் கொண்டிருக்கிறான். 

தாரா, தன்னை பலாத்காரமாக அடைய நினைக்கும் ஒருவனை, தான் தப்பிப்பதை  நோக்காகக் கொண்டுதாக்கும் சந்தர்ப்பத்தில் அவன் மரணப் படுக்கையில் விழவும் அவள் சிறைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றாள். மரணப் படுக்கையில் விழுந்தவன் அதிலிருந்து மீண்டு வாய்திறந்தால் மட்டுமே அவள் சிறையிலிருந்து வெளிவர முடியும் என்கின்ற நிலையில் எப்படியாவது மரணப்படுக்கையிலிருந்து அவனைக் காப்பாற்றி வாய் பேச வைக்கும் முயற்சியில் அமீர் ஈடுபடத் தொடங்கும் போதுதான் மரணப்படுக்கையில் விழுந்தவனின் குடும்பம் தமிழ் நாட்டிலிருந்து மும்பை வந்து அமீருக்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கின்றது. 

படத்தின் காட்சி ஒன்று

அதிக கதாபாத்திரங்களை கட்டமைத்து கதையின் கருவை சிதறவிடாது, கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பினூடு சாதாரண மக்களின் உணர்வுகளை இயக்குனர் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாரா சிறையிலிருந்து வெளியில் வந்தாளா? அமீர் அந்தத் தமிழ்க் குடும்பத்தால் என்னவானான் என்பதை இயக்குனர் மிகுந்த உணர்வுபூர்வமாக  இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார். 

ஒளிப்பதிவும் இசையும் இப்படத்திற்கு மேலும் வலுச் சேர்க்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. சில இடங்களில் கமரா கோணங்கள் பார்வையாளனை அப்படியே கட்டிப்போடுகின்றது. அதேபோல் பின்னணி இசையும் கதைக்கு தேவையான அளவு சிறப்பாக இருக்கின்றது. 

இதில் நாயகனாக நடிக்கும் இஷான் உள்ளிட்ட பலர் புதுமுகங்கள். அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். தாராவாக நடிக்கும் மலையாள நடிகையான மாளவிக்கா மோகனன் தனது நடிப்பால் அனைவரையும் கவர்கின்றார். ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைளை பெற்றுள்ள இத்திரைப்படம் கொழும்பில் MC Colombo - Platinum திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தை நீங்களும் ஒருமுறை பார்த்துவிடுங்கள். 

படப்பிடிப்பின் போது இயக்குனர் மஜித்
நடிகை மாளவிக்காவுக்கு காட்சியினை விபரிக்கிறர்

படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டின் போது
இயக்குனர் மஜித், இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் நடிகர்கள்



18 ஏப்ரல் 2018

விக்ரம்...!




நடிகர் விக்ரம்!, தன்னுடைய அபரிமிதமான அர்ப்பணிப்பான  நடிப்பால் தமிழ் சினிமா இரசிகர்களை மட்டுமல்லாது உலக சினிமா இரசிகர்களையும் கவர்ந்தவர்.  ரசியில்லா நடிகர் என தமிழ் சினிமா ஓரங்கட்டியபோது அது தவறு என கண்முன் நிரூபித்துக் காட்டிய ஒரு கலைஞன். இயக்குனர் பாலாவால் சேது படத்தின் மூலம் செதுக்கப்பட்ட முத்து. வலகது கை செய்வதை இடது கை அறியாமல் இருக்கட்டும் என்று ஒரு பண்டையகூற்று எம்மத்தியில் இருக்கின்றது. அதற்கேற்றது போலவே  சத்தமில்லாமல் பலருக்கு உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் ஒரு நல்ல மனிதன். நடிகர் கமலஹாசனுக்கு பின்னர் நான் விரும்பும் நடிகன். இப்படி நான் இரசிக்கும் நடிகர் விக்ரமைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 

நேற்று (ஏப்ரல் 17) விக்ரமின் பிறந்தநாள். 

விக்ரம் என்றவுடன் எனக்கு உடனேயே ஞாபகம் வருவது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் இயக்குனர் பாலாவின் "இவன் தான் பாலா"  புத்தகத்தில் விகரம் தொடர்பில் இயக்குனர் பாலா சிலாகித்து எழுதியிருக்கும் குறிப்புக்கள்தான் காலத்தால் அழியதவை. 

பாலா தனது சேது படத்தின் படப்பிடிப்பு சினிமா தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் நின்று போனதால் மனமுடைந்து போயிருந்த நேரத்தில் தன் பிரச்னையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத விக்ரம் ஒருநாள் பாலவிடம் வந்து ‘வீட்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு பாலா. ராதிகா ஒரு டெலிஃபிலிம் பண்ணக் கூப்பிடறாங்க. போனா, கொஞ்சம் பைசா கிடைக்கும்!’’ என்று கேட்கவும் அதில் நடிப்பதற்கு உடனேயே விக்ரமை பாலா அனுப்பி வைத்திருக்கிறார். விக்ரம் அந்த டெலிஃபிலிம் முடித்துவிட்டு  திரும்பி வந்தபோது சம்பளமாக கிடைத்த அறுபதாயிரம் ரூபாவையும் கொண்டுவந்து ‘பாலா, நீங்களும் பணத்துக்கு சிரமப்படறீங்கதானே. அறுபதாயிரம் ரூபா குடுத்தாங்க. இதுல எனக்கு பாதி, உங்களுக்குப் பாதி’’ என வலுக்கட்டாயமாக பாலவின் கையில் திணித்துவிட்டுப் போயிருக்கிறார். 

தன்னுடைய கஸ்டத்திலும் மற்றவருடைய கஸ்டத்தையும் புரிந்துகொண்டு உதவி செய்த நல்ல மனம் கொண்ட விக்ரம் இன்று இந்தளவு தூரம் உயர்ந்திருப்பது அவரது மனிதத்தன்மைக்கு இயற்கை கொடுத்த பரிசே! 

மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்! 

பிதாமகன் விக்ரமுடன் இயக்குனர் பாலா

17 ஏப்ரல் 2018

ஆர்யா செலக்ட் பண்ணியது இவரையா?



மிகவும் பரபரப்பாக கடந்த பல வாரங்களாக இடம்பெற்றுவந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆரியா தனது வருங்கால மனைவியாக யாரையும் தெரிவு செய்யவில்லை என்று தெரியவந்திருக்கிறது. 

இதனால் இந்நிகழ்சியை தவறாமல் பார்த்தவர்கள் தற்போது ஆரியாவை திட்டித் தீர்ப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. அதிலும் ருவிட்டரில் கடுமையாக ஆரியாவை திட்டி தீரக்கிறார்கள். அந்த ருவீட்களில் சில உங்களுக்காக







1968 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம்!

இலங்கையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களுக்காக மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை (மே தினம்) மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்து  மே மாதம் 7 ம் திகதியை விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் கையொப்பம் இட்டிருந்தார். 

இதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே தனது கருத்தினை பதிவு செய்துள்ளதோடு அவர்கள் தமது மே தின ஊர்வலங்களை மே மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப் போவாக தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் இதேபோன்றொரு நிலைமை இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னமும் ஏற்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெசாக் போயா தினமாக அமைந்ததால் அன்றை நாளில் மே தின ஊர்வலங்களை நடத்தாமல் மே மாதம் 2 ஆம் திகதி அவற்றை நடத்துவதற்கு அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தீர்மானித்தது. 

இதற்கு அப்பேதிருந்த கட்சிகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் உடன்பட்டிருந்தன. ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியோ தாம் மே மாதம் முதலாம் திகதியே தமது மே தின ஊர்வலத்தை நடத்துவோம் என சபதமிட்டிருந்தனர். 

அதன்படி மே மாதம் முதலாம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து கொம்பனி வீதியில் அமைந்திருந்த டிமெல் மைதானத்தை நோக்கி சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஊர்வலம் நாடுமுழுவதிலுமிருந்த கலந்துகொண்டிருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பெரும்திரளான உறுப்பினர்களன் ஆதரவாளர்களுடன் ஆரம்பமாகியது.  

ஆனாலும் அவர்களுடைய ஊர்வலம் ஆரம்பமாகி சிலநூறு மீட்டர்கள் செல்ல முன்னரே பொலிசாரின் சுற்றிவளைப்பு தாக்குதலுக்கு உள்ளாகியது. பொலிசாரின் அந்த தாக்குதலால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மே தின ஊர்வலம் கலைந்து போனது. 

இந்த மே தின ஊர்வலத்த்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய இளம் உறுப்பினராக இருந்த தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் கலந்து கொண்டிருந்தார் என்பது விசேட அம்சமாகும். அவரும் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவாறு அடுத்தநாள் பொலன்னறுவை சென்று சேர்ந்ருந்தார்.