A Promised Land

Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 டிசம்பர் 2014

4th Agenda Short Film Festival - 2014



கடந்த 12- 14ம் திகதிவரை கொழும்பில் 4வது முறையாக நேற்று இடம்பெற்று முடிந்த
அஜண்டா 14 குறும்திரைப்பட விழாவில் முதன்முறையாக 20க்கும் மேற்பட்ட தமிழ்க் குறும்படங்கள் பங்குபற்றியிருந்தன அதில் விமல்ராஜின் “திரைக்கதையில் அவள்” கலிஸின் “குரும்பை” றினோசனின் “ஆனந்தி” மாதவனின் “அப்பால்” சமிதனின் “நான் நீ அவர்கள்”, சிவராஜின் "பை" ஆகிய குறும்படங்கள் திரையிடலுக்காக தெரிவுசெய்யப்பட்டு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன.  அத்தோடு சிங்கள தமிழ் என்ற வேறுபாடு இல்லாமல் குறும் திரைப்படங்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.


குறும்திரைப்பட விழாவின் நேற்றைய இறுதிநாளான நேற்று 14.12.2015 இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக இலங்கையின் திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக 45 வருடங்களுக்கு முன்னர் “காகமும் மனிதர்களும்” என்ற குறும்படத்தினை இயக்கி இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற சுகதபால செனரத் யாப்பா கலந்து சிறப்பித்தார். அத்தோடு சுவிஸ்லாந்தின் உயஸ்தானிகர், கனடாவின் உயஸ்தானிகர், Goethe Institute Director உட்பட பல வெளிநாட்டு உள்நாட்டு பிரமுகர்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்தோரும் கலந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு வருடமும் இந்த திரைப்பட விழாவை அனோமா ராஜகருணா மற்றும் அவருடைய அஜண்டா 14 நிறுவனம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவின் நடுவர்களாக திரைப்பட இயக்குனர் தர்மசிரி பண்டாரநாயக்க, ஒளிப்பதிவாளர் எம்.டி. மகிந்தபால, திரைப்பட விமர்சகர் காமினி வியாங்கொட, திரைப்பட விமர்சகர் முரளீதரன் மயூரன், இந்தியாவின் Documentary Filmmaker Ein Lal  ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.


மாதவனின் “அப்பால்” குறும்படம் Most Gender Sensitive Short film  பிரிவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அப்பால் திரைப்படத்துடன் இன்னும் இரு சிங்கள குறுந் திரைப்படங்கள் விருதுக்கு முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் 24 வயதுக்க்கு குறைந்த குறும்பட இயக்குனர்களில் சிறந்த இயக்குனரை தெரிவு செய்து வழங்கப்படும் Most Promising short film maker விருதனையும் “அப்பால்” குறும்படத்தை இயக்கியமைக்காக மாதவன் பெற்றுக்கொண்டார். அதேவேளை சிறந்த அனிமேசன் குறும் திரைப்படத்திற்கான விருதினை “Good boys land” குறும்படத்தை இயக்கிய Lahiru Samarasinghe பெற்றுக்கொண்டார். மனித உரிமை தொடர்பில் பேசப்பட்ட குறும்திரைப்படத்திற்கான விருதினை “A very short film about killing” குறும்திரைப்படத்தினை இயக்கிய சுமுது அத்துகொரளை பெற்றுக்கொண்டதோடு இவர் இயக்கிய மற்றுமொரு குறும் திரைப்படமான “Hole in the wall” இந்த ஆண்டுக்கான சிறந்த குறும் திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதேவேளை இந்த ஆண்டுக்கான “Jury” விருது “Beyond the Reality” குறும்திரைப்படத்திற்காக சுஜித் ராஜபக்ச பெற்றுக்கொண்டார். விருது வென்றவர்களுக்கு ஒவ்வொரு விருதுடனும் தலா 20 ஆயிரம் ரூபா பணப்பரிசில்களும் சிறந்த குறும் படத்திற்கு 150 ஆயிரம் ரூபா பணப்பரிசும் மேலதிகமாக வழங்கப்பட்டதுடன் சிறந்த குறும்படத்திற்கா விருதுவென்ற சுமித் அத்துக்கொரளையின் அடுத்த படத்தயாரிப்பிற்கு துணைபுரிவதாக அஜண்டா 14 திரைப்படவிழா சார்பாக உறுதி வழங்கப்பட்டது.






Mathavan Maheswaran receiving "Most Promising short film maker" Award from Director Ilango Ramanathan & Goethe Institute Director


   
Lahiru Samarasinghe receiving "Best Animation Short Film Award" 


Mathavan Maheswaran receiving "Most Gender Sensitive Short film" Award from Canadian High Commissioner & Nimalka Fernando 
 
Sujith Rajapakse receiving "Jury Award" from Ein Lal & Dharmasiri Bandaranayake



Sumudu Athukorala receiving "Best Short Film of the Year" from Filmmaker Asoka Handagama & Anoma Rajakaruna



Mr.Sugadapala Senarath Yappa honored by Anoma Rajakaruna & the Agenda 14 team. 


Pictures by Chamath Hasanka

30 அக்டோபர் 2014

இயக்குனர் முருகதாஸ் ஒரு கதைத்திருடனா?

அண்மையில் வெளிவந்த கத்தி படத்தினுடைய கதையினை தன்னுடையதுதான் என்று கோபி என்ன சமூக ஆர்வலர் உரிமை கோரியிருககின்றார். அவருடைய நேர்காணல் ஒன்றனை இன்று பார்த்தேன். பாவம் அந்த சமூகத்தை நேசிக்கும் படைப்பாளி. அவருடைய தெளிவான பேச்சு, சமூகத்தின்மீது அவருக்கு இருக்கின்ற பற்று, கத்தி படம் தொடர்பாக முருகதாஸைப் பார்த்து அவர் கேட்கின்ற ஆணித்தரமான கேள்விகள், இவற்றைப் பார்க்கும்போது இந்த கத்திபடத்தினை முருகதாஸ் கோபியிடமிருந்து களவாடியிருக்கின்றார் என்பதற்கு மேலும் சான்றாகின்றது

கஜினியும் அதற்கு பின்பு வந்த முருகதாஜின் படங்கள் எல்லாமே வேறுபடங்களை உல்டா செய்து எடுக்கப்பட்டவைதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல இதுவரையும் தன்னுடைய படங்கள் எதிலுமே கம்யூனிசம் பற்றி வாயே திறக்காத இந்த வியாபாரி முருகதாஸ் சமூகநலனை முன்னிறுத்தி அதுவும் கம்யூனிஸ கருத்துக்களுடன் ஒரு படம் எடுத்து வெளியிடும்போது அவரை சந்தேகத்துடனே பார்க்க வேண்டியிருக்கின்றது. (அந்தக் கம்யூனிஸ கருத்தும் கோபியினுடையதாம்.) முருகதாஸ் தான் ஒரு நேர்மையாளனாக இருந்திருந்தால் கோபிக்கு எதிராக வழக்குப்போட்டிருக்கவேண்டும் அப்படிச் செய்யாமல் இது பணத்திற்காக நடைபெறும் ஏமாற்று முயற்சி என்று அறிக்கை விட்டிருக்கின்றார் இந்த முருகதாஸ்.

முருகதாஸ் ஒரு நேர்மையானவராக கம்யூனஸித்திற்கு ஆதரவானவராக இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கமாட்டார். இயக்குனர் என்பதையும் தாண்டி வியாபாரி என்ற நிலையிலேயே இயங்கிவரும் முருகதாஸ் இப்படிப்பட்ட ஒரு கதையினை யோசித்திருக்கமாட்டார் என்று புலப்படுகின்றது.

உண்மையிலேயே கோபியினுடைய கதை திருடப்பட்டிருந்தால் முருகதாஸ் தண்டிக்கப்படவேண்டும் அத்தோடு அதற்கான விலையினை கொடுக்கவேண்டும் அப்போதுதான் இனிவரும் காலங்களிலாவது பல உதவி இயக்குனர்களுடைய கதை திருடப்படாமல் பாதுகாக்கப்படும்.


கஜினி படத்தின் ஒரிஜினல் படமான மொமென்ரோ படத்தின் இயக்குனர் விரைவில் இந்தியா வருகின்றாராம். முருகதாஸ் அவருடைய படத்தின் கதையினை திருடியதையும் யாராவது அந்த இயக்குனரின் காதில் போட்டுக்கொடுங்கள். அந்தக் கதையினை திருடியதற்காகவும் முருகதாஸ் மீது சட்டநடவடிக்கை எடுக்கட்டும்.

முருகதாஸ் புகழ்பாடும் விஜய் டிவியும் சமூக பிரச்சனைகளை வெளிக்கொண்டுவரும் நீயாநானா கோபிநாத்தும் இந்த கதைத்திருட்டைப் பற்றி நீயா நானா செய்வார்களா இல்லாவிட்டால் வழமைபோலவே வாங்குறதை வாங்கிக்கொண்டு ஜால்ரா அடிப்பார்களா என்பது பலருடைய எதிர்பார்ப்பு.


கோபியினுடைய நேர்காணல்


27 அக்டோபர் 2014

சினிமா என்பது வெறும்பொழுதுபோக்கு ஊடகம் மாத்திரமா?


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்ற ரீதியிலேயே இந்தியர்கள் சினிமாவை அணுகுகின்றார்கள். ஆனால் சினிமா என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு ஊடகமா என்ற கேள்வியினை கேட்கவேண்டிய நேரம் இது. சினிமா என்றால் பொழுதுபோக்கு ஊடகம் என்ற மாயையை தவறான எண்ணத்தினை மக்கள் மத்தியில் புகுத்தியவர்கள் யார்? ஏன் அவ்வாறு மாற்றினார்கள் என்பதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் புதைந்து கிடக்கும் என்பதுதான் உண்மை.

சினிமா என்பது ஒரு இனத்தின் அரசியலைப் காத்திரமாக பேசும் கலை. உண்மையிலே கலை என்பது காலத்தின் கண்ணாடி. ஒரு இனத்தின் வாழ்வியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்தவும் அரசுகளையும் அதிகாரத்தவர்களையும் கேள்விகேட்கக்கூடிய ஒரு மிகப்பலம்வாய்ந்த ஊடகம். இந்த சினிமா என்ற மிகமுக்கியமான அசையும் காட்சி ஊடகம் 20ம் நூற்றாண்டின் லுமினஸ் சகோதரர்களின் மிகமுக்கியமான கண்டுபிடிப்பு. இந்த சினிமாவால் பல அரசுகளே ஆட்டம் கண்டிருக்கின்றன. பல இயக்குனர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் பலர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றார்கள் அத்தோடு படைப்புக்கள் அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலக சினிமா வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றால் ஏன் இவ்வளவு மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்ன கேள்வி இயல்பாகவே சினிமா தொடர்பாக சாதாரண அறிவுள்ள ஒருவருக்கு எழவேண்டும்

இந்தியாவில் சினிமாவை அரசியல் காரணங்களுக்காக பொழுதுபோக்கு ஊடகமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். ஒரு நல்ல சினிமா என்பது பார்வையாளனுடைய சிந்தனையை இன்னொருகட்டத்திற்கு தூண்டிவிடவேண்டும். அதுவே நல்ல சினிமா. தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டங்களில் நடிகர்கள் பெரிய திரையில் சண்டைபிடிப்பார்கள் பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள். ஆனால் இன்று நடப்பது என்ன இரசிகர்கள் நடிகர்களுக்காக பிரிந்து தங்களுக்கிடையில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் நடிகர்கள் அமைதியாக இவற்றை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு காரணம் யார்? யார் இதற்கு பொறுப்புகூறவேண்டும்? இன்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் என்று கேட்டால் 70 களில் 80 களில் வெளிவந்த படங்களையே பெரும்பாலானோர் கூறுவார்கள் காரணம் என்ன அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்கள் தரமானவையாகவும் காத்திரமான படைப்புக்களாகவும் இருந்தன. இன்று வெளிவரும் திரைப்படங்கள் வெறும் வன்முறையினையையும் ஹீரோயிசத்தையும் பெண்களின் உடலையும் சதையையும் முன்னிறுத்தியே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் புதிய சில இளம் இயக்குனர்கள் நம்பிக்கை தருகின்றனர் ஆனாலும் அவர்களும் எவ்வளவுநாள் இந்த மாயையை தாக்குப்பிடிப்பார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

இந்தியாவில் கலையை கொலைசெய்து இன்று அதை வியாபாரமாக்கிவிட்டார்கள். ஒருசில நாட்களில் பலநூறுகோடி சம்பாதிக்கும் வழியாகவே சினிமாவை பயன்படுத்துகின்றார்கள். பார்வையாளர்களுடை பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  இவற்றை செய்வது வியாபாரிகளுக்கு இலகுவாக இருக்கின்றது. ஒரு சில சமூகப்பொறுப்புள்ள இயக்குனர்களைத்தவிர மற்ற எல்லோருமே இயக்குனர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு வியாபாரிகளாகவே இன்று திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்றால் மாத்திரமே நல்ல காத்திரமான சினிமாவை நாங்கள் பார்க்கமுடியும்.



vathees@gmail.com

26 அக்டோபர் 2014

இனி அவனுக்கு மீண்டும் விருது

முதலாவது ஹிரு கோல்டன் விருதுகள் 2014 விழா நேற்று கொழும்பில் இடம்பெற்றது இந்த முதலாவது விருதுவழங்கும் விழாவில் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த விழாவில் பொலிவூட் நாயகர்கள் விவேக் ஒப்ராய் பிபாஷாபாசு அனில் கபூர் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.



இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் 2012ல் இலங்கையில் தலைசிறந்த இயக்குனாரன அசோக ஹந்தகமவின் நெறியாள்கையில் வெளிவந்த “இனி அவன்” தமிழ்த் திரைப்படத்துக்கு 5 விருதுகள் கிடைத்திருந்தது. இந்தப்படத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் சிறந்த நடிகருக்கான விருதினையும், நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் அஜித் ராமநாயக்க சிறந்த படத்தொகுப்புக்கான விருதினையும் அசோக ஹந்தகம சிறந்த இயக்குனருக்கான விருதினையும் பெற்றனர். அத்தோடு சிறந்த படமாக இனி அவன் திரைப்படமும் விருது பெற்றது.                                                      
                                                                                                                         Asoka Handagama




                                                       விருது வென்ற தர்ஷன் மற்றும் நிரஞ்சனி


இனி அவன் திரைப்படம் 2012ம் ஆண்டு கான்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டதோடு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ரொரொண்டோ, பேர்ளின், டோக்கியோ, போன் பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இலங்கையின் சினிமாவில் ஒரு தமிழன் சாதிக்கின்றான் எனும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது

20 அக்டோபர் 2014

ஐய்யய்யோ கத்தி(கள்)... இதுதான் றியல் கத்தி

தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதாவென்று பதறியடிச்சு ஓடிந்த அனைவருக்கும் நன்றிகள்

இங்கே நான் பகிரும் இந்த வீடியோ இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுவென்ற குறும் திரைப்படம். இதனுடைய பெயர் கத்திகள். இதை 2008ம் ஆண்டு என்னுடைய நண்பர் ஆனந்த ரமணன் இயக்கியிருந்தார்.

13 அக்டோபர் 2014

கத்தி யாருக்கு ஷார்ப்? விஜய்கா அல்லது லைக்காவுக்கா?



கத்தி படம் விஜய் இரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம். ஆனால் தற்போது சினிமா இரசிகர்கள் எல்லோராலும் வெளிவருமா இல்லை என ஆவலோடு எதிர்பார்க்கப்படும் படம். உண்மையில் கத்தி படத்திற்கு என்னதான் பிரச்சனை? ஏன் இவ்வளவு தடை முயற்சிகள் அந்தப் படத்திற்கு? என்னுடைய ஊகங்கள் கீழே...

1. லைக்கா மொபைல் என்னும் பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் சினிமாவில் காலூன்றுவதை தடுத்தல்.

2. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடவேண்டும் அரசியல் ஆசையில் துடித்துக்கொண்டிருக்கும் விஜய்க்கு அரசியல் மட்டத்திலிருந்து கொடுக்கபபடும் நெருக்கடியில் இதுவும் ஒன்று. 

மேலே கூறிய இரு பிரதான காரணங்களிலிலும் முதலாவது காரணமே இந்தக் கத்தி படத்திற்கு ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு காரணமாக இருக்கவேண்டும் என கருதவேண்டியிருக்கிறது.

சினிமா என்பது கலை என்ற ஒரு விடயத்தினையும் தாண்டி இந்தியாவில் சினிமா என்பது 100% வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.                                  இந்த வியாபாரத்தில் பைனான்ஸியர் தயாரிப்பாளர் தொடக்கம் தியட்டர் முதலாளிவரை குறுகிய காலத்தில் அதிகளவு இலாபத்தினை பார்த்துவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருப்பவர்கள். சாதாரணமாக இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் பைனான்ஸியர்களை அணுகுவார்கள். அவர்களும் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து பணத்தை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவார்கள். தயாரிப்பாளர் அதற்குப் பின்னர் படத்தை தயாரிப்பார். ஆரம்பிக்கும்போதே படத்தை திரையிடும் காலத்தினையும் தீர்மானித்துவிடுவார்கள். எல்லாமே பக்காவாக பிளான் பண்ணப்பட்டுத்தான் நடந்துகொண்டிருக்கின்றது. இதில் குறிப்பிட்ட திகதியில் படம் வெளிவராவிட்டால் படத்தின் தயாரிப்பளருக்கு சிக்கல்தான். (விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு வந்த பிரச்சனையும் அதுதான்)

இப்படி இந்திய சினிமா ஒருவரோடு ஒருவர் இணைந்த முறையில் ஒரு மாபியா ஆகவே இயங்கிக்கொண்டு வந்திருக்கின்றது இங்கே இதற்கும் கத்தி பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.
பல்லாயிரக்கணக்கான மில்லியன் முதலீட்டுடன் செயற்பட்டுவரும் லைக்கா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிக்க வரும்போது ஏற்கவே இருந்த பைனான்ஸியர், தயாரிப்பாளர் என்ற ஒன்றுக்குள் ஒன்று பின்னப்பட்ட வலையமைப்பினை இந்த பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தங்கியிருக்கத்தேவையில்லை. நேரடியாகவே எத்தனை கோடிகளையும் முதலிட அவர்கள் தயாராகவிருப்பார்கள். காரணம் அவர்களில் இருக்கும் தாராள பணப்புழக்கம். இதனால் ஏற்கனவே இருந்த நடைமுறைகள் சிறிது சிறிதாக ஆட்டம் காணத் தொடங்கும் இவ்வாறு இடம் பெற்றால் ஏற்கனவே சினிமா மூலம் கொள்ளை இலாபம் கண்டு சுவை பிடிபட்ட முதலாளிகளுடைய இருப்புக்கு அரம்பத்தில் பெரிதாக சிக்கல் இல்லாவிட்டாலும் லைக்காவின் வரவு பல புதிய பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவில் சினிமாவில் நேரடியாக முதலிட வாய்ப்புக்களை உருவாக்கிவிடும் இது முதலாளிகளில் இருப்பினை கேள்விக் குறியாக்கிவிடும். ஆகவே லைக்காவின் வரவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும அல்லது பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் குடுத்துதமிழ் சினிமாவில் முதலிட நினைக்கின்ற ஏனைய பல்தேசிய நிறுவனங்களுக்கு பயத்தினை ஏற்படுத்தவேண்டும் இதன்மூலம் அவர்களை உள்ளே வரவிடாமல் செய்யவேண்டும். இந்தப் பின்னணிதான் கத்தி படத்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கு காரணம். இதற்கு இந்தப் பிரச்சனைகளுக்கு பின்னாலிருப்பவர்கள் கண்டுபிடித்த காரணங்கள்தான் லைக்கா நிறுவனம் இலங்கை அரசுடனும் ராஜபக்ஷ குடும்பத்துடனும் மிகவும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனம் என்ற கருத்தினை முன்வைத்து பிரச்சனைகளை வலுவாக்கியதுதான்.

ஆனால் அந்தோ பாவம் தமிழ் சினிமா இரசிகர்கள். ஏற்கனவே நடிகர்களுக்காக பிரிந்துநின்று அடிபடும் அவர்களை இருபகுதியும் நன்றாக பயன்படுத்துகின்றார்கள். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி லைக்கா நிறுவனத்தின் எதிரிகளும் புகுந்து விளையாடுகின்றார்கள் ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு அப்பால் இந்தப் பிரச்சனைகளால் லைக்கா நிறுவனத்திற்கு இலவசமாக தங்களது நிறுவனத்தினைப் பற்றிய விளம்பரம் கிடைத்திருக்கின்றது. கத்தி பிரச்சனைக்கு முன்னர் லைக்கா பற்றி தெரிந்தும் அவர்களுடைய சேவையினை பயன்படுத்தாமல் இருந்தவர்கள் இப்போது லைக்கா நிறுவனத்தின் சிம் அட்டைகளை பாவித்து இந்தியாவுக்கு மிகக்குறைந்த செலவில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்களாம்.

ஆக மொத்தத்தில் கத்தி விஜய்கும் முருகதாசுக்கும் ஷாப்பா வேலை செய்கிறதோ இல்லையோ லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கு நல்ல ஷார்ப்பாகவே வேலை செய்கின்றது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று இதைத்தான் சொல்றது.

fb - வதீஸ் வருணன்- 

யாழ்தேவி... ஒரு உணர்வுபூர்வமான உறவுப்பாலம்



ஒரு நாட்டின் போக்குவரத்து என்பது அந்த நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். எந்தவொரு நாட்டில் போக்குவரத்து மேம்பட்டு காணப்படுகின்றது அந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாகவோ அல்லது அபிவிருத்தியினை வேகமாக எட்டுவதற்கு பயணித்துக் கொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே கருதமுடியும். 

இலங்கையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலமாக இருப்பது என்னவென்று கேட்டால் ஒன்று ஏ9 பிரதான வீதி மற்றையது யாழ்தேவி புகையிரதம். இந்த இரண்டு போக்குவரத்து சேவையிலும் புகையிர சேவையானது மிகவும் புகழ்வாய்ந்தது. வடற்கிற்கும் தெற்குக்கும் இடையிலான உண்மையான உறவுப்பாலம் எதுவென கேட்டால் யாழ்தேவி புகையிரதத்தினைத்தான பலரும் கூறுவார்கள். உண்மையும் அதுதான். 

1956ம் ஆண்டு வடக்கிற்கான பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி 1990களில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் 2009 யுத்தம் முடிவுற்றதன் பின்னர் சிறிது சிறிதாக பளை வரை பயணித்த புகையிரத சேவை இன்று முதல் 13.10.2014 யாழ்ப்பாணம்வரை தனது சேவையினை 14 ஆண்டுகளிற்கு பின்னர் ஆரம்பிக்கின்றது. இந்திய அரசின் நிதியுதவியிலேயே இந்த புகையிரதசேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவையினை இன்று ஆரம்பித்து வைக்க இருக்கின்றார். 

90களின் பிற்பகுதியில் பிறந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பலரும் இன்றைக்கு பிற்பாடு புகையிரதத்தினை நேரில் பார்க்கும் வாய்ப்பினைப் பெறப்போகின்றார்கள். அது ஒரு உணர்வு பூர்வமான தருணமாக இருக்கப் போகின்றது. அத்தோடு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பிரயாணங்களை இது மேலும் இலகுபடுத்தப் போகின்றது. 

யாழ்ப்பாணத்திற்கு புகையிரதசேவை வருவதானது யாழ்ப்பாணத்திற்கு சாதகமான பல விடயங்களையும் பாதகமான பல விடயங்களையும் கொண்டுவரப் போகின்றது. இவற்றையெல்லாம் தாண்டி 2 தசாப்தங்களுக்கு மேலானா வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலாக ஒரு இடைவெளியினை இது இல்லாமல் செய்யப்போகின்றது என்பது முற்றிலும் உண்மை. 




06 ஜனவரி 2014

என்னுடைய முதல் குறும்படம் "தவறிப் பிறந்த தரளம்"


Synopsis 

இலங்கையின் வடக்கில் 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளக்குடியமர்வுகள் இடம்பெற்ற பின்பும் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உளவில் ரீதியான தாங்கங்களிலிருந்து இன்னும் மீண்டுவரவில்லை. யுத்தகாலத்தில் ஏற்பட்ட சிறுவயதுத் திருமணங்கள் பல ஆயிரக்கணக்கான சிறுவர்களை இந்த உருவாக்கியிருந்தது. அப்படியான சிறுவயது திருமணம் மூலம் பிறந்த ஒரு சிறுவன் போரின் உளவியல் தாக்கங்களிலிருந்து விடுபடாமல் பெற்றோருடன் வசித்துவருகின்றான். இதேவேளை அந்தச் சிறுவனுடைய பெற்றோருக்கிடையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக எவ்வாறு சிறுவன் பாதிக்கப்படுகின்றான் அதிலிருந்து வெளிய வருகின்றான் என்பதையும் இந்தக் குறும்படம் கூறமுயற்சி செய்கின்றது.


As resettlement initiatives take place in the North of Sri Lanka, following the end of the war in 2009, the children who were affected psychologically due to the war have still not recovered from their trauma. Additionally, child marriages that took place during war-time gave birth to many children in broken homes. This film follows the story of a young boy, who suffers from Post Traumatic Stress Disorder (PTSD) after the war. He is the only child of young parents who were forced into marriage as children. This short film explores how he is affected by marital problems between his parents and how he attempts to escape his living hell.




Cast and Crew

அம்மா - பிரியா
மகன் - பிரகாஸ்
அப்பா - தர்மலிங்கம்
பெண் - தனுசியா

இளைஞர்கள் - சுலக்ஷன்
                         நில்ருக்ஷன்
                         என்.சுலக்ஷன்

எழுத்து இயக்கம் - வதீஸ் வருணன்

ஒளிப்பதிவு - சமந்த தசநாயக்க

படத்தொகுப்பு ஒலிச்சேர்க்கை - சசங்க சஞ்சீவ

தயாரிப்பு - வதீஸ் வருணன் | விப்லன் ஒணோராஜ்