A Promised Land

07 செப்டம்பர் 2018

28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்படும் மயிலிட்டி பாடசாலை



விடுவிக்கப்பட்ட பாடசாலையின் தற்போதைய தோற்றம்

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் கல்வியின் பங்கு இன்றியமையாத இன்றைய நவீன உலகில் கல்வி புகட்டும் பல பாடசாலைகள் இன்னும் பாதுகாப்பு படைகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் துன்பகரமானதொரு நிலைமையே இலங்கையின் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பகுதியில் காணப்படுகின்றது. 

ஏறத்தாள முப்பது வருட அகிம்சைப் போராட்டமும் முப்பதுவருட ஆயதப் போராட்டமும் நம்நாட்டுத் தமிழர்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் பாரியளவு தாக்கத்தை செலுத்தியிருந்தாலும் கல்வியில் அந்தளவிற்கு பெரியளவான தாக்கத்தினை செலுத்த முடியவில்லை என்பதனை வடக்கு கிழக்கின் தொடர்ச்சியான சிறந்த கல்வி பெறுபேறுகள் கட்டியம் கூறி நிற்கின்றன. 
இந்த வகையிலேயே முப்பது வருட ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களை தமது சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேறச் செய்தது மாத்திரமல்லாது அவர்களுடைய இடங்களில் பாதுகாப்பு படையினரின் முகாம்களுடன் கூடிய உயர் பாதுகாப்பு வலையங்களை உருவாக்கியிருந்தது. இந்த உயர் பாதுகாப்பு வலையங்களுக்குள் மக்களின் நிலங்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை சிக்கிக் கொண்டன. 

இந்த நிலையிலேயே அண்மையில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் உணர்வு பூர்வமான சில கோரிக்கைகளை விடுத்திருந்தார். அவற்றில் முதன்மையானது மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் விடுவிப்பு. 

யுத்த காலத்தில் பாதுகாப்பு படைகள் கைவசப்படுத்திய பொதுமக்களுடைய காணிகள் அவர்களுக்கு மீளவும் வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உடனடியாகவே அந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை அழைத்து இந்தப் பாடசாலை விடுவிப்பு தொடர்பில் கேட்டறிந்ததுடன் உடனடியாகவே இராணுவத் தளபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாடசாலையை விடுவிப்பதற்கான உத்தரவினையும் வழங்கியதுடன் அந்த நிகழ்வில் உரையாற்றும் போது இன்றும் இரண்டு வாரங்களில் மயிலிட்டி பாடசாலை விடுவிக்கப்படும் என்று அப்பகுதி மக்களின் உற்காச கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே செப்டெம்பர் 06 ஆந் திகதி மயிலிட்டி வடக்கு கலைமகள் வித்தியாலயம் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது யாழ் மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் இதுவரையும் விடுவிக்கப்படாதிருந்த பொதுமக்களின் காணிகளின் ஒரு தொகுதியும் அன்றைய தினம் விடுவிக்கப்பட இருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்திருக்கின்றமையானது எதிர்பார்ப்புக்களுடனிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் இராணுவக் கட்டளை தளபதியுடன் பாடசாலை விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடும் ஜனாதிபதி 
1818 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷனரி சபையினைச் சேர்ந்த டானியல் பூவர் என்பவரால் 33 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையை 1963 இல் அரசு பொறுப்பேற்று கொண்டாலும் தொடர்ந்தும் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரிலேயே 1975 ஆம் ஆண்டுவரை இயங்கி வந்திருந்தது. 1975 ஆம் ஆண்டு தமிழ் அரசியல் தலைவரான தந்தை செல்வா அவர்களினாலேயே இந்தப் பாடசாலைக்கு மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் எனப் பெயர் சூட்டப்பட்டது. 
931 மாணவர்களுடனும் 26 ஆசிரியர்களுடனும் இயங்கிவந்த இப்பாடசாலை 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக வேறு இடத்தில் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும் பின்னர் 87 ஆம் ஆண்டே மீண்டும் சொந்த இடத்தில் மீள் இயங்க தொடங்கியபோதும் மாணவர்களின் எண்ணிக்கை 871 ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. 

1990 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பமான உள்நாட்டுப் போர் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் திகதி மயிலிட்டி மக்கள் இடப்பெயர்வை சந்தித்ததன் காரணமான இப்பாடசாலை சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியலயத்தில் மாலை நேரப் பாடசாலையாக 123 மாணவர்களுடனும் 12 ஆசிரியர்களுடனும் இயங்கியது. மாலை நேரப் பாடசாலையாக அங்கு இயங்கியதன் காரணமாக மாணவர்களின் வரவு சரிபாதியாக வீழ்ச்சியடையவும் பின்னர் சுன்னாகம் வினைல்ஸ் தனியார் கல்வி நிலையத்தில் காலை நேர பாடசாலையாக இயங்கத் தொடங்கியது. 

தற்போதைய பாடசாலை இயங்கிவரும் நிலை
பின்னர் 1993 ஆம் ஆண்டு இப்பாடசாலை தனது தனித்துவத்தினை இழந்து மல்லாகம் மகா வித்தியலயத்துடன் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களால் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல பாடசாலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன் அவை கூட்டுப் பாடசாலைகளாகவே தற்காலிக கொட்டகைகளில் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. 1996 ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் தற்காலிக கொட்டகைகளை அமைத்து இயங்கிவரும் இப்பாடசாலைக்கு ஜனாதிபதி அவர்களின் உத்தரவிற்கமைய தற்போது விடிவு கிடைத்திருக்கின்றது. 

தற்போது பாடசாலை இயங்கிவரும் ஒரு கட்டிடம்

மயிலிட்டி கிராமத்தின் ஒரு பகுதி ஏற்கனவே பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தும் பாடசாலை பகுதி இதுவரை விடுவிக்கப்படாதிருந்தமை காரணமாக மயிலிட்டியில் மீளக்குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பேரூந்துகளில் சுன்னாகத்திற்கு பிரயாணம் செய்தே தமது கல்வியினை தொடரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கும் தமது சொந்த ஊரிலேயே தமது காலடிக்குள் இருக்கும் பாடசாலையில் கல்வியினை தொடரக்கூடிய வாய்ப்பு கிட்டியிருப்பது அம்மக்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியினை தோற்றுவிக்கும்.  


ஆனாலும் இந்தப் பாடசாலையினை உடனடியாக மீளவும் இயங்கவைப்பதற்கு தற்போதிருக்கும் முக்கிய சவால், பாசாலைக்கு தேவையான வளங்களை உடனடியாக பெற்றுக் கொடுப்பதேயாகும். இதற்குரிய நடவடிக்கைகளை யாழ் மாவட்ட அரச அதிபரும் மீள்குடியேற் அமைச்சரும் மேற்கொள்ள வேண்டும். பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியில் அரசாங்கத்தின் பங்கு மிக்கியமானதாக காணப்படும் அதேவேளை உள்ளுரிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களுக்கும் சிறியளவேனும் பங்கு இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத ஒன்று. அதையுணர்ந்து அவர்களும் ஆக்கபூர்வமான பங்களிப்பினை இந்தப் பாடசாலை சமூகத்திற்கு வழங்கவேண்டும். 

தற்காலிக வகுப்பறை கட்டிடம்
இதேவேளை காங்கேசந்துறை, மயிலிட்டி மற்றும் பலாலி பிரதேசங்களில் இன்னும் விடுவிக்கப்படாமல் ஆறு பாடசாலைகள் காணப்படுகின்றன. காங்கேசந்துறை மகா வித்தியாலயம், காங்கேசந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலை, மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை, வசாவிளான் சி.வேலுப்பிள்ளை வித்தியாலயம், பலாலி மேற்கு அமெரிக்கன் மிஷன் வித்தியாலயம் மற்றும் சித்திவிநாயகர் வித்தியாலயம் ஆகியனவே வலிகாமம் வடக்கு பிரதேத்தில் இன்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படும் பாடசாலைகளாகும். 

இதற்கு முன்னர் இருந்த எந்த அரச தலைவரும் தமிழ் மக்கள் மீது கொண்டிருக்காத கரிசனையை தற்போதைய அரச தலைவர் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி இலங்கையின் முழு சிறுபான்மை மக்களுக்குமே வரப்பிரசாதம். மூன்று தசாப்த கோர யுத்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு அபிவிருத்தி மிகவும் அத்தியாவசியம். ஆகவே தமது குறுகிய சுய இலாபங்களுக்காக அடையாள அரசியலை மட்டுமே முன்னெடுத்து பிரச்சினைகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட முயற்சிக்கும் பிரிவினரின் கபடத்தனங்களை இனங்கண்டு அடையாள அரசியலுடன் இணைந்த அபிவிருத்தியினையும் முன்னெடுக்க தேவையான அழுத்தங்களை மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் வழங்கவேண்டிய பொறுப்பு தமக்கு இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டிய தருணம் இதுதான் என்பதை தமிழ் மக்கள் புரிந்து செயற்பட வேண்டும்.  

(கடந்த 06 ஆம் திகதி யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த எனது கட்டுரை)