A Promised Land

21 ஆகஸ்ட் 2018

புத்தெழுச்சிபெறும் வடக்கு - மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி


யாழ் குடாநாட்டின் மயிலிட்டி மீன்பிடித் துறைமுத்தினை மீண்டும் முழுஅளவில் இயங்க வைப்பதற்கான முதற்கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் இம்மாதம் 22 ஆம் திகதி ஜனதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.

80 களில் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் மூன்;றில் ஒருபகுதியினை பெற்றுக்கொடுத்த முன்னணி மீன்பிடித் துறைமுமாக இருந்த மயிலிட்டி உள்நாட்டு போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அரச படைகளிடம் சிக்கியது. பலாலி விமானப் படைத்தளத்தை சுற்றி முப்படைகளின் முகாம்கள் வேரூன்ற ஆரம்பித்ததிலிருந்து வலி வடக்கு பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டமையினால் பலாலி மயிலிட்டி வளலாய் காங்கேசந்துறை, ஊறணி, தெல்லிப்பளை போன்ற யாழ் குடாநாட்டின் கரையோர பாரம்பரிய வசிப்பிடங்களிலிருந்து அப்பகுதி மக்கள் வெளியேற நிப்பந்திக்கப்பட்டனர். 

அவ்வாறு வெளியேறிய மக்கள் பல காலங்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்த போதிலும் நீண்ட காலமாக அவர்களது பூர்வீக இடங்களுக்கு திரும்பும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆயினும் தாம் இழந்த நிலத்தினை மீளப்பெறும் முயற்சியில் உறுதியாக இருந்த அம்மக்களுக்கு 26 ஆண்டுகள் கடந்த நிலையிலேயே விமோசனம் கிடைத்தது. நாட்டின் பாதுகாப்பை பொறுத்த வரையில் கேந்திர முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாக இப்பிரதேசம் விளங்கியதால் இப்பிரதேசத்தை விடுவிப்பதற்கு படைத்தரப்பினை இணங்கவைப்பது மிகக் கடினமான காரியமாகவே இருந்தது. ஆயினும் மக்களின் சொந்த நிலங்களை மீண்டும் அவர்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக 27 ஆண்டுகளின் பின்னர் கடந்த வருடம் நடுப்பகுதியில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் மக்களின் உபயோகத்திற்காக பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பு கிட்டியது. 

ஆயினும் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் இருந்துவந்த அத்துறைமுகத்தை இயங்கவைக்க வேண்டுமாயின் முற்றுமுழுதாக புனரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை உணர்ந்த அரசாங்கம் அப்பணியினை மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுப்பதற்கு தீர்மானித்தது. இவ் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முற்றாக சேதமடைந்திருக்கும் துறைமுகத்தின் இறங்குதுறை மற்றும் ஐஸ் களஞ்சியம், எரிபொருள் களஞ்சியம் உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகளையும் செய்வதுடன் இப்பணிகளின் முதற்கட்டமாக தற்போதைய துறைமுகப் படுக்கையினை ஆழப்படுத்தல், 80 மீற்றர் நீளமான துறைமுக மேடைய அமைத்தல், வலை தயாரிக்கும் நிலையம், தகவல் பரிமாற்று நிலையம், மீனவ சனசமூக நிலையம், கண்காணிப்பாளர் அலுவலகம், மீனவர் சங்கக் கட்டிடம், நீர் மற்றும் மின்சார வசதி, மலசலகூட வசதி, சமிஞ்ஞை விளக்கு கோபுரங்கள் ஆகியன உருவாக்கப்பட இருக்கின்றன. 

அதன் இரண்டாம் கட்டமாக தற்போதைய துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் மீன் ஏலவிற்பனை நிலையம், கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் செயற்திட்டம், நிர்வாக கட்டிடம், மின் பிறப்பாக்கிகள், ரேடார் கட்டுப்பாட்டுப் பிரிவு, உணவகம், அலுவலகர்கள் தங்குமிட வசதி மற்றும் உள்ளக வீதிப் புனரமைப்பு ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. 
இந்நிர்மாணப் பணிகளின்போது அரச மற்றும் அரச படைத்தரப்பினர்களுடன் இத்துறைமுகத்தின் பயனாளிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் மயிலிட்டி துறைமுகத்தை இலங்கை மீன்பிடித் துறையின் ஒரு முக்கிய கேந்திர நிலையாக மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைப்பதுடன் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இழந்த வாழ்க்கையை மீளவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும். 

30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இன்னல்களை சந்தித்த சமூகத்தை விடிவைநோக்கி கொண்டு செல்வதற்கான பல வாய்ப்புகள் தற்போது ஆங்காங்கே உருவாகி வருகின்றன. அன்று தனிமனித விருப்பு வெறுப்பே நம்நாட்டின் அரசியல் என்றிருந்த நிலைமாறி மற்றவர்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் மதித்தே முடிவுகளை எடுக்க வேண்டுமென்ற சிந்தனை இன்றைய அரச தலைமைத்துவத்திடம் இருப்பதே அதற்கு காரணமாகும். அதனாலேயே பல தசாப்தங்களாக கனவாக இருந்துவந்த பல விடயங்கள் ஒவ்வொன்றாக நனவாகி வருகின்றன என்பதை தமிழ்ச் சமூகம் உணர்ந்து கொள்வது அவசியமாகும். தமிழ் சமூகத்தின் எதிர்காலம் இந்த சிந்தனை மாற்றத்திலேயே தங்கியிருக்கின்றது. 

கடல் வளம் என்பது ஒரு நாட்டுக்கு கிடைக்கும் இயற்கையின் மாபெரும் கொடையாகும். ஒரு தீவு தேசம் என்றவகையில் எமது நாட்டைச்சுற்றி வளமான கடற்பரப்பு அமைந்திருப்பது நம்மவர்களின் பாக்கியமே. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடகிழக்கு பிரதேசம் நாட்டின் மொத்த கடற்பரப்பின் பெரும்பகுதியினை கொண்டிருப்பதால் தமிழ் சமூகத்தின் இருப்பு மீது இந்த கடலின் தாக்கம் மிக அதிகமானதாக இருந்து வருகின்றது. 

அந்தவகையில் நமது நாட்டுக்கும் வடபகுதி மீனவ சமூகத்திற்கும் பொருளாதார ரீதியில் பாரிய பங்களிப்பை செய்துவந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மூன்று தசாப்தங்களின் பின்னராவது அப்பகுதி மீனவ சமுதாயத்திடம் மீண்டும் கிடைக்கப் பெறுவதன் மூலம் மிகுந்த பயனை அடையக் கூடியதாக இருக்கும். குறிப்பாக 2015 ஆம் ஆண்டுக்கு முன் சர்வதேச மீன் ஏற்றுமதியில் எமக்கு விதிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் தடை நீங்கி மீன் ஏற்றுமதிக்கான ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த நிலையில் அதனை சிறந்த முறையில் உபயோகப்படுத்திக் கொள்ள வடபுல மீனவ சமூகம் முன்வருமாக இருப்பின் அதனால் அடையக்கூடிய பயன் மிகப்பாரியதாக இருக்கும். இத்தகைய வாய்ப்புக்களை சாதகமாக்கிக் கொள்வதற்கு உள்நாட்டு அதிகாரிகளும் புலம்பெயர் தமிழ் சமூகமும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் வடபகுதியையும் அம்மக்களின் பொருளாதாரத்தையும் சிறந்த நிலைமைக்கு கொண்டுவருவதற்கு அது ஏதுவாக அமையும். 

அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்தவாறு வெறுமனே அடையாள அரசியலை முதன்மைப்படுத்துவதற்கு பதிலாக அடையாளத்துவ அரசியலுடன் இணைந்ததான அபிவிருத்தி அரசியலை முன்னெடுப்பதற்கு வடபுல தமிழ் சமூகம் முனையும் பட்சத்திலேயே இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களின் உரிய பலனை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தோடு அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பொருளாதார கட்டமைப்பு இன்றியமையாததாக அமைகின்றது என்பதை புரிந்து கொள்வதன் மூலம் தமிழ் சமூகம் தமக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களை சாதகமாக பயன்படுத்த முன்வரவேண்டும்.

(யாழ் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெறுவதை முன்னிட்டு தமிழ்மிரர் பத்திரிகையில் ஆகஸ்ட் 21வெளிவந்த  )