A Promised Land

28 ஆகஸ்ட் 2008

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-5



ஜல்லிக்கட்டு

ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக்
குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும்
வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.


ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை
அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத்
தழுவிப் போரிட்டு அடக்குவதால் 'கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக்
கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின்
ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் (மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு
முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்) இடம் பெற்றது. ஏறு
தழுவலுக்கும், குரவைக் கூத்திற்கும்
தொடர்பிருந்தது (சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 17-18). குரவைக் கூத்து ஏறு
தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின்
மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு
தழுவுவதற்குத் துண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர்
வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண
வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர்
பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில்
இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய ஜல்லிக்கட்டு விளங்குகிறது.




ஏறு தழுவதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து
மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம் பெற்றது. தற்போது ஜல்லிக்கட்டில்
ஆயர் மட்டுமின்றி பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். ஏறு தழுவுதலில் உள்ளது
போன்றே ஜல்லிக்கட்டு கள்ளர், மறவரிடையே பெண் கொடுப்பதற்கான தேர்வு களனாக
உள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டில் வென்றவர் பண முடிப்பினைப் பரிசாகப் பெறுதல்
பெரும்பான்மையாக உள்ளது. ஜல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள்
மாட்டுப்பொங்கல் நாளன்று விழாப் போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா
தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு கிராமிய
தேவதைகளின் வழிப்பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை,
வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சி
காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும்.
இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டுகிறோம் என்பதே
வேண்டுகோளாய் அமைகிறது.


ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்ஸிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான
தேசியப் பொழுதுப் போக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை
அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டி சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப்
போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் ஜல்லிக்கட்டும் ஒன்று போலத்
தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-4




இளவட்டக்கல்

இது ஒரு திறன் சோதிக்கும் விளையாட்டாகும். மறவர் இனத்தவர் மணவினை கொள்வதற்கு
இவ்விளையாட்டைப் பயன்படுத்துவர். முறைப் பெண்ணினைத் திருமணம் செய்வதற்கும்
விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் இத்திறன் சோதிக்கும் விளையாட்டு
தேர்வு நிலையாக உள்ளது. ஒரு பெண்ணினைப் பலரும் விரும்புவர். அப்போது பெண்ணின்
தந்தை'யார் இளவட்டக் கல்லினைத் துக்கி உயர நிறுத்துகிறாரோ? அவருக்கு என்
பெண்ணைத் தருவேன்' என்று அறிவித்து விடுவார்.


விழாக்காலத்தில் ஊருக்குப் பொதுவான இடத்தில் இதற்கான போட்டி நடைபெறும்.
போட்டியில் கலந்து கொள்பவர் இளவட்டக் கல்லைத் துக்கித் தலைக்கு மேலே
பிடித்துக் கீழே போட வேண்டும். இவ்வாறு செய்தவர் வென்றவராகக் கருதப்படுவார்.
கிராமத்துப் பெரியவர் இதற்குப் பஞ்சாயத்துக்காரராக முன்னிற்பார். இவர் கூறும்
நடுநிலைத் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். பண்டைக் காலத்திய மக்களுக்குக்
கையினால் பெரிய கல்லினைத் துக்குவதும் நகர்த்துவதும் வாழ்க்கையோடு சேர்ந்த
தேவையாய் இருந்தது. நாகரிக வளர்ச்சியில் அத்தேவை இல்லாமல் போகவே, அதுவே
உடல்திறன் காட்டும் விளையாட்டாக வளர்ந்தது.


மறவர் இனத்தவர் பணம், நகை போன்றவைகளை முதன்மையாக கருதுவது இல்லை. பெண்ணை
மணந்து கொள்கின்றவன் உடல்திறன் உடையவராக இருக்க வேண்டுமென்பதையே விரும்புவர்.
அவ்வடிப்படையில் இன்றளவும் அவர்களிடையே நிலை பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் மதுரை மாவட்டத்திலும் அதன் சுற்றுபுறங்களிலும் இவ்விளையாட்டு நிலவி வருகிறது.

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-3



மாட்டு வண்டிச் சவாரி

இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட சிறு தட்டுவண்டியினை இப்பந்தய விளையாட்டில்
பயன்படுத்துவர். குறிப்பிட்ட துரத்தினை இத்தட்டு வண்டியின் மூலம் முதலில்
கடந்து திரும்பி வருவது பந்தயத்தின் நோக்கமாக உள்ளது. கிராமிய தேவதைகளின்
வழிப்பாட்டு விழாவினை ஒட்டி இவ்விளையாட்டும் நடைபெறும்.


பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வண்டிக்கும் இரண்டு பேர் இருக்கலாம்.
ஒருவர் வண்டியினை ஓட்டுபவர். இன்னொருவர் உதவியாளர். ஓட்டுபவருக்கு உதவியாளர்
திறமையுள்ளவராக அமைய வேண்டும். ஏனெனில் ஓட்டுபவர் வண்டியில் உட்கார்ந்து
கொண்டு காளைகளை விரட்டி ஓட்டிக் கொண்டிருப்பார். உதவியாளர் வண்டியில் ஏறாமல்
பின் தொடர்ந்து ஓடி வர வேண்டும். மாட்டின் வேகத்தினை அதிகப்படுத்த ஓட்டுபவர்
பல உத்திகளைக் கையாள்வார். கூர் ஆணி வைத்த தார்க்குச்சியினைக் கொண்டு மாட்டின்
குதப்பகுதியில் குத்துவார். வலி தாங்காத காளைகளும் வேகமாக ஓடும்.


பந்தயத்தில் கலந்து கொள்ள நினைப்பவர் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், கலந்து கொள்ளும் வண்டிகளின் எண்ணிக்கையில் வரையரையேதுமில்லை.
பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்குக பரிசுகளை வழங்குவார்.
குதிரைப் பந்தயத்திற்கு நகரத்தார் எவ்வளவு முதன்மை கொடுக்கின்றனரோ அது போல
கிராமத்தார் மாட்டுப் பந்தயத்திற்கு முதன்மை கொடுக்கின்றனர்.

27 ஆகஸ்ட் 2008

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-2


சடுகுடு

இவ்விளையாட்டு பலிஞ்சடுகுடு எனவும், பலீன் சடுகுடு எனவும் வழக்கில் வழங்கப்
பெறும். பலிஞ்சப்பளம் என ஆந்திராவிலும், வங்காளத்திலும், குடுடுடூ என
மகாராட்டிரத்திலும் அழைக்கப்பட்டு வருகிறது.

பழந்தமிழ்நாட்டில் அரசர்களிடையே நிரைகளைக் கவருபவர் (வெட்சித்திணை) கவரப்பட்ட
நிரைகளை மீட்பவர் (கரந்தைத் திணை) என இரு கட்சியினர் இருந்தனர். இது
தரப்பினருக்குமிடையே அவரவர் நாட்டின் எல்லைக் கோடு அமைந்திருக்கும். நிரை கவர
வருபவர்களை வரவிடாமல் வீரர்கள் காவல் காத்து நிற்பர். காவலைக் கடந்து
நிரையினைக் கவர்ந்து வருதல் வேண்டும். நிரைகளை (மாட்டு மந்தையை) கவர வருபவர்
தம்மை வளைத்துப் பிடிக்கும் எதிர்கட்சி வீரரிடம் போரிட்டுத் திரும்ப மீள்வர்.
மீறிவந்து தம் நாட்டு எல்லையினை அடைந்து விட்டால் எதிர்படையினர் ஒன்றும் செய்ய
இயலாது. மாறாக, எல்லைக் கோட்டை அடையும் முன் பிடிபட்டு விட்டால்
சிறையிலிடப்படுவார். போர் முடிந்தவுடன் சிறைபட்ட வீரர் மறுபடியும் தம் நாட்டை
அடைவர். நிரைகவர அல்லது நிரை மீட்கச் சென்றதால் ஏற்பட்ட போரின் முடிவு வெற்றி
அல்லது தோல்வியில் முடிவுறும். போருக்கு செல்வதற்கு முன் தங்கள் பக்கமே
வெற்றி கிட்ட வேண்டுமென்று இருதரப்பினருமே காளியை வணங்கினர். இச்சமயம்
சடுகுடுப்பை அல்லது குடுகுடுப்பை என்ற பறையால் ஒலியெழுப்பி, பலி கொடுத்து
வழிபட்டனர். இப்போர்ச் செயல் பாட்டின் தொடர்ச்சியால் பலிஞ்சடுகுடு என்ற பெயர்
கொண்ட விளையாட்டு பழந்தமிழரிடையே உருவானது. இன்றும் தமிழ்நாட்டு கிராமங்களில்
விளையாடப்படுகிறது. வரையறுக்கப்பட்ட ஆடுகளத்தில் இருகட்சியினரையும் பிரிக்கும்
விதமாய் நடுக்கோடு வரையப்பட்டிருக்கும். விளையாடுகையில் சடு...குடு...குடு
என்றோ கிராமத்துப் பாடல்களையோ, வேறு நையாண்டிப் பாடல்களையோ மூச்சை
அடக்குவதற்காகப் பாடுவது மரபாக உள்ளது. நடுக் கோட்டிலிருந்து பாடிப் போகிறவரை
எதிர்கட்சிக்காரர்கள் பிடித்து விட்டால் அவர் களத்திலிருந்து வெளியேறி
விடவேண்டும். பாடிப்போனவர் எதிர்க்கட்சிக்காரரைத் தொட்டு விட்டு பிடிபடாமல்
மூச்சடக்கி வந்து நடுக்கோட்டினைத் தொட்டு விட்டால், தொடப்பட்டவர்
களத்திலிருந்து வெளியேறிக் கொள்ள வேண்டும். பாடிப்போகிறவர் பாடும்
பாடல்களுக்கு எடுத்துக்காட்டுகள் கீழ்வருமாறு:


(1) சடுகுடு மலையிலே ரெண்டாளு
அதிலே ஓராளு குண்டாளு
அக்கா புருஷன் கோமாளி
தங்கச்சி புருஷன் தக்காளி..... தக்காளி


(2) நான்தான் ஒப்பன்டா
நல்லமுத்து பேரண்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரெண்டா
தங்கச் சிலம்பெடுத்து
தாலிக்கட்ட வாரென்டா...வாரென்டா
ஆடவர் விளையாட்டான சடுகுடு சிறுவர்களிடையேயும் இடம் பெறுகிறது. பழந்தமிழர்
காலத்திலிருந்து விளையாடப் பெறும் சடுகுடுவின் தொடர்ச்சியாய் தற்போதைய
விளையாட்டான கபடி விளங்குகிறது. கபடி விளையாட்டு இப்போது உலகம் முழுவதும்
விளையாடப்படுகிறது. விளையாடுகையில் மூச்சினை அடக்குவதற்கு கபடி....கபடி என்ற
பொருளற்ற சொல் பாடப்படுவதால் இவ் விளையாட்டு கபடி என்று பெயர் பெற்றது. உலகப்
பொதுவான விதிமுறைகள் கொண்டு கபடி விளையாட்டு திகழ்கிறது.

மூளை திறம்பட செயல்பட தூக்கம்



மூளை திறம்பட செயல்பட தூக்கம் *

மனித வாழ்க்கைக்கு தூக்கம் எவ்வளவு அவசியம் என்பதை அனைவருமே உணர்வர்.
தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து அறியும் அதேவேளையில், அதன் பின்னணியில்
உள்ள அதிசயங்களை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் இருந்தால் மட்டுமே அடுத்த நாள் நமது மூளையானது
வளைந்து கொடுத்து வேலை செய்யும் திறனைப் பெறும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.


பாலூட்டிகளுக்கும், பறவைகளுக்கும் தூக்கம் என்ற ஓய்வு முக்கியம் என்பதை
தெரிவிக்கும் ஆய்வு, எந்தவொரு உயிரினமும் ஓய்வெடுக்கவில்லை என்ற தகவல் இல்லை என
கூறுகிறது.

டொல்பின் மீன்கள் கூட ஒரு கண்ணை மூடியவாறு, மூளையின் பாதியளவு ஓய்வுடன்
தூங்குவதாகத் தெரிய வந்துள்ளது.

டொல்பின்களைப் பொருத்தவரை எந்தநேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்ற
போதிலும் தேவையான செயல்பாடு தவிர, சிறிது நேரம் ஓய்வை அனுபவிக்கும் என்றும்
அந்த ஆய்வு கூறுகிறது.

24 ஆகஸ்ட் 2008

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தங்கப் பதக்கம். எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு நிகழ்கால கனவு...........




ஒலிம்பிகில் கிரிக்கெட் விளையாட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் ,ஆதரவும் வலுத்துகொண்டு வருகிறது.

இனி வரும் கலங்களிலாவது ஒலிம்பிகில் கிரிக்கெட் சேர்த்து கொள்ளப்பட்டு அதில் இலங்கை அணி தங்கபத்கம் ஒன்றை வெற்றி கொள்ள வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுவோம்

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!சிரிக்க (மட்டுமே)

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு
பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க்
கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க
தலையில் [ அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான்
ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான்
சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி
உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு
பார்ப்பீங்க தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து
எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும்
இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க.
ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ. சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு
எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு
வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ
இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று
உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச
குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி
குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-
ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ்
அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க..
தண்ணியைப் போட்டுட்டு , தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க
நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

இஸ்ரேலில் அதிசயம்: இறந்த குழந்தை உயிர்பிழைத்தது

இஸ்ரேலில் அதிசயம்: இறந்த குழந்தை உயிர்பிழைத்தது

இஸ்ரேல் நாட்டில் இறந்து விட்டதாகக் கூறி
சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்று 5 ம்ணி நேரத்திற்கு பின்
உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்தது.


இஸ்ரேலைச் சேர்ந்தவர் ஃபைஸா மெக்டோப். இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் அவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.


வடக்கு இஸ்ரேலில் உள்ள வெஸ்டர்ன் கலிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
அவருக்கு அபார்ஷன் செய்யப்பட்டது.


கருவில் உள்ள சிசுவுக்கு 5 மாதங்களே ஆகியிருந்ததால் 600 கிராம் எடை கொண்ட
பெண்குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. என்றாலும் அந்தக் குழந்தை இறந்து விட்டதாக
ம்ருத்துவர்கள் அறிவித்து, சடலங்களை வைக்கும் அறைக்கு (சவக்கிடங்கு) கொண்டு
செல்லப்பட்டது.


சுமார் 5 மணி நேரம் குளிரூட்டப்பட்ட சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அந்தக்
குழந்தையை உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்ற போது, குழந்தையின்
உடலில் அசைவு இருப்பதைப் பார்த்தனர்.


இதையடுத்து உறவினர்கள் மருத்துவர்களின் உதவியை நாடியபோது, அந்தக் குழந்தை
உயிருடன் இருப்பது தெரிய வந்தது.


இதற்கிடையே சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உதவி இயக்குனர் மோஷ் டேனியல்
கூறுகையில், ``இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. மருத்துவ
உலகிற்கே விந்தையாக அமைந்துள்ளது. என்றாலும் இதுகுறித்து விசாரணை
மேற்கொள்ளப்படும்'' என்றார்.

23 ஆகஸ்ட் 2008

நீடூழி வாழ...


நீடூழி வாழ... நாள் தவறாமல் ஓடுவீர்!


நீடுழி வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள், சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, ஆரோக்கியத்துக்குத் தேவையான வழிமுறைகளை கடைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது இயல்பு.

ஆனால், ஆரோக்கியம் மீது அக்கறையுள்ளவர்களில் பலரும் எளிமையான உடற்பயிற்சிகளைக் கூட செய்வதற்கு தயங்குவதை பார்க்கலாம்.

இத்தகைய நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலிஃபோனியாவிலுள்ள ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஒருவர் நீடுழி வாழ வேண்டுமானால், நாள்தோறும் தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பது தெரிய வருகிறது.

அன்றாடம் ரன்னிங்கில் ஈடுபடுவதால், இதய நோய் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்வதுடன், புற்றுநோய் மற்றும் அல்ஸீமர் போன்ற நரம்பு நோய்கள் வராமலும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 20 ஆண்டுகளாக, தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவோரை கண்காணித்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-1


சிலம்பம் :

சிலம்ப விளையாட்டு கம்பு விளையாட்டென்றும், நெற்றிப்பொட்டுக் கம்பு விளையாட்டென்றும், உயில் சிலம்பு என்றும் அழைக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் சிலம்பம் என அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு, மராட்டிய நாட்டில் லாட்டி என்றும், குஜராத்தில் டால்லக்கடி என்றும், வங்காள நாட்டில் லாடிகீலா என்றும், கர்நாடகாவில் தண்டா வரிசை என்றும், ஆந்திராவில் கரடி ஆட்டம் என்றும், கேரளாவில் நெடுவடி என்றும் அழைக்கப் படுகிறது. சிலம்புதல் என்றால் ஒலித்தல் என்று பொருளாகும். கையிலுள்ள கம்பினை அடித்து ஒலியெழுப்பி விளையாடப்
பெறுவதால் இவ்விளையாட்டு சிலம்பு என்று பெயர் பெற்றது.

சிலம்ப விளையாட்டு பயிற்சி நிறைந்த வீரவிளையாட்டு ஆகும். இதற்கான பயிற்சியைத் தருபவர் சிலம்ப வாத்தியார் என்றழைக்கப்படுகிறார். சிலம்ப வாத்தியார் நம்பிக்கையானவர்க்கு மட்டும் சிலம்ப விளையாட்டைக் கற்றுத் தருவார். இவ்வாறு ரகசியக்கலையாக சிலம்ப விளையாட்டு போற்றப்படுவதால், இவ்விளையாட்டு வளர்ச்சியடையவில்லை எனலாம். விளையாட்டில் ஈடுபடுவதற்கு நீளமான கம்பு வேண்டும். விளையாடுபவரின் உயரத்திற்களவாய்க் கம்பின் நீளம் இருக்கும். பெரும்பாலும் மூங்கில் கம்புகளையே பயன்படுத்துவர்.

கம்பு வீசுந்திறன், காலடி எடுத்து வைக்கும் முறை, வேகமாகச் செயல்படும் திறமை இம்மூன்றும் சிலம்ப விளையாட்டின் அடிப்படைக் கூறுகளாக உள்ளன. இக்கூறுகள் அனைத்தையும் கைவரப் பெற்றவர் 'வீடுகட்டுதல்' என்ற முறையில் தேர்ச்சி அடைந்தவராகிறார். பகைவர் கம்பு தன் உடல் மேல் படாத வண்ணம் தன் கம்புவீச்சுத் திறமையால் தடுத்தலை வீடுகட்டுதல் என்றும், கோட்டை கட்டுதல் என்றும் சொல்வர். விளையாட்டின் துவக்கத்தில் வணக்கம் செலுத்துதல் என்ற முறை உண்டு. முதலில் இறைவணக்கமும், அடுத்து குருவணக்கமும் இடம் பெறும். போட்டி விளையாட்டாக இருந்தால், எதிர்த்து விளையாடக் கூடியவர்க்கும் வணக்கம் செலுத்துவர். இது தமிழர் விளையாட்டின் சிறப்பு முறையாக வழங்கி வருகிறது.

எதிரியின் கம்பு தன் உடல் மேல் படாமல் தடுத்தல், தன்னுடைய கம்பினால் எதிரியின் உடலைத்தொடுதல் ஆகிய செயல்களைக் கொண்டு வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. கம்பின் நுனியில் வண்ணப் பொடியினைத் தடவியிருப்பர். சிலம்பம் போட்டியில் விளையாடுபவர்களின் உடலில் எத்தனைத் தடவைகள் கம்பின் நுனி பட்டிருக்கிறது என்பதனை வண்ணப் பொடியின் துணைக் கொண்டு கணக்கிட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பர். தமிழகத்தில் சிலம்ப விளையாட்டு தற்காப்பு கலையாகவும், வீரவிளையாட்டாகவும், விழாக் காலங்களில் கேளிக்கையாட்டமாகவும், பாடல்பாடியும் விளையாடப் பெறுகிறது.

22 ஆகஸ்ட் 2008

குசேலன்: இப்படி ஆயிடுச்சே!

விநியோகஸ்தர்களின் போர்க்கொடியைத் தொடர்ந்து, திரையரங்க உரிமையாளர்களும் குசேலனுக்குக் எதிராக கொடி தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். தியேட்டரில் இருந்து எம்.ஜி. கொடுத்து (அதாவது முன்பணம்) திரையிடப்பட்ட குசேலன், அந்த எம்.ஜி யை நெருங்கக்கூட முடியாதபடி வசூல் செய்ய, பலத்த நஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறார்களாம் அவர்கள்.
காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரப் பொதுக்குழு சென்னையில் நடந்தது. இதில் போடப்பட்ட தீர்மானங்கள் சற்று அதிரடியாகவே இருக்கின்றன. தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினியே தலையிட்டு வாங்கித் தர வேண்டும். அப்படிப் பிரச்சனை சுமுகமாக முடியாவிட்டால் பிரச்சினை முடிகிறவரை கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிடும் படங்களை வாங்க மாட்டோ ம் என்று தீர்மானம்.
இப்படி அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்களுக்குச் சரி சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்ட பணத்தை மீண்டும் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குருநாதரின் கஷ்டத்தைச் சரி செய்யலாம் என்று நினைத்து ஒரு காரியம் செய்ய, அது இரட்டைத் தலைவலியில் முடிந்துவிட்டதே என்று வருந்துகிறாராம் ரஜினி.

வணக்கம்

இந்த பதிவை இன்று நான் ஆரம்பிக்கும் போது தமிழில் மட்டும் தான் எழுதுவது என நினைத்திருக்கிறேன்