A Promised Land

20 அக்டோபர் 2014

ஐய்யய்யோ கத்தி(கள்)... இதுதான் றியல் கத்தி

தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதாவென்று பதறியடிச்சு ஓடிந்த அனைவருக்கும் நன்றிகள்

இங்கே நான் பகிரும் இந்த வீடியோ இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுவென்ற குறும் திரைப்படம். இதனுடைய பெயர் கத்திகள். இதை 2008ம் ஆண்டு என்னுடைய நண்பர் ஆனந்த ரமணன் இயக்கியிருந்தார்.

14 அக்டோபர் 2014

How Old Are You?


மேலே உள்ள தலைப்பு அண்மையில் மலையாள சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இரண்டு நாட்களுக்கு முன்னம் இந்தத் திரைப்படத்தினைப் பார்த்தேன். படம் பிடித்துப் போய்விட்டது. இன்றுதான் அதைப்பற்றி கிறுக்குவதற்று நேரம் கிடைத்தது. இது அந்தப் படத்தினைப் பற்றி விமர்சனம் அல்ல அந்தப் படம் தொடர்பாக நான் கிறுக்கியவை. 


தெற்காசியாவில் அதுவும் இலங்கை மற்றும் இந்தியாவில் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகங்க கட்டமைப்புக்களுடன்தான் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். பெண்கள் மனைவி என்ற ஸ்தானத்தை திருமணத்தின் மூலம் பெற்றுக்கொண்டு கணவனுக்கு சேவை புரிபவளாகளும் பிள்ளைகளை பெற்று பராமரிப்பவளாகவுமே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கின்றாள். படித்து வேலையில் இருப்பவர்கள்கூட இந்த ஆணாதிக்க சமூகத்தின் இறுக்கமான கட்டமைப்புக்களுக்குள் சிக்குண்டு தங்களுடைய கனவுகளை குடும்பத்திற்காக மூட்டைகட்டி ஒரு மூலையில்போட்டுவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். விதிவலக்காக பல பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து வெளியே வந்து பெண்களுக்கான உரிமைகளை குடும்பத்திலும் சமூகத்திலும் வென்றெடுக்க போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அதில் சில பெண்கள்  ஏனைய பெண்களுக்கு கட்டமைப்பிலிருந்து வெளியே வருவதற்கு முன்மாதியாகவும் இருக்கின்றார்கள். இது ஒரு மிகப்பெரிய பரந்துபட்ட தலைப்பு. இந்தத் தலைப்பினை பிரதான கருப்பொருளாக எடுத்துக்கொண்டு பெண்களுக்கு சமூகக் கட்டமைப்புகளிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு ஆரம்ப்பப் புள்ளியை அல்லது ஒரு உந்துசக்தியை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் இந்த “How Old Are You?”. 



வருவாய் துறை அலுவலகத்தில் சாதாரண கிளாக்காக பணிபுரியும் நிருபமாவின் கணவன் ராஜீவ்ஆகாசவானிவானொலி அறிவிப்பாளன். அவனுடைய நீண்டகால கனவு  அயர்லாந்து நாட்டுக்கு சென்று குடியேற வேண்டும் என்பதே. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள். நிருபமா தனது கும்பமே தனக்கு எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவள். அவளுடைய வயதை காரணம்காட்டி அயர்லாந்து செல்வதற்கான விண்ணப்பம் நிராகரிககப்படுகின்றது. அதேவேளை எதிர்பாராத விதமாக நிருபமா தன்னுடைய மகள் ஊடாக கேட்ட ஒரு கேள்வி காரணமாக இந்தியாவின் ஜனாதிபதி நிருபமாவை சந்திக்க விருப்பப்படுகின்றார். ஜனாதிபதியினை சந்திக்கச்செல்லும் நிருபமா எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் அவருடன் பேசமுடியாமல் போய்விடுகின்றது. இதன் காரணணமாக அவர் சமூகவலைத்தளங்களில் கேலிக்கு உட்படுகின்றாள். இதேவேளை நிருபமாவின் கணவனுக்கும் மகளுக்கும் அயர்லாந்து செல்வதற்கான விசா கிடைக்கின்றது. இருவரும் நிருபமாவை விட்டுவிட்டு அயர்லாந்து பயணிக்கின்றனர். பின்னர் நிருபமாவினுடைய பள்ளித்தோழி ஒருவரை சந்திக்கும் நிருபமா அதன்மூலம் கல்லூரிக்காலங்களில் அவள் ஒரு சிறந்த ஆளுமையுள்ள ஒருத்தியாக இருந்ததையும் தற்போது திருமணம் முடித்து குடும்பத்துக்காகவே வாழும் ஒரு சாதாரண பெண்ணாக மாறிவிட்டதையும் காண்கின்றாள். மீண்டும் நிருபமாவினுடைய ஆளுமையை வெளியே கொண்டுவர அந்த நண்பி முயற்சிக்கின்றாள். அதிலே வெற்றியும் அடைகின்றாள். இதன் பின்னர் நிருபமா சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்புக்களை முன்னெடுக்கும் நிலைக்கு உயரும் நிலையினை அடியும்போது அயர்லாந்திலிருக்கும் கணவன் ஊர் திரும்பி அவளுக்கு அயர்லாந்து செல்ல விசா கிடைத்துவிட்தென்றும் மகளுக்கு சரியான உணவு இல்லை ஆகவே நிருபமா வந்தால்எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகின்றான். அவள் குடும்பத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அயர்லாந்து போகின்றாளா அல்லது தொடர்ந்தும் இந்தியாவிலே இருந்து தன்னுடைய கனவுகளை நனவாக்கின்றாள் என்பதுதான் படத்தினுடைய சாராம்சம். 


கேரளாவில் மட்டுமல்ல பொதுவாக தெற்காசியாவுக்கும் பொதுவான இந்த பரந்துபட்ட தலைப்பினை மிக அழகாக Bobby Sanjay திரைக்கதையாக்க அதை திரைப்படமாக கொடுத்திருக்கின்றார் இயக்குனர் Rosshan Andrrews
இந்தப்பட்ம் ஆணணாதிக்க கட்டமைப்புக்குள் சிக்கி தன்னுடைய கனவுகளையும் ஆசைகளையும் மூலையில் போட்டு வைத்திருக்கும் பெண்கள் தங்களுடைய நிலையினை உணரவும் பெண்கள் சாதிப்பதற்கு அவர்களுடைய வயது ஒன்றும் பெருட்டே இல்லை என்பதையும் 140 நிமிடங்களுக்குள் மிக அழகாக காட்டியிருக்கன்றார் இயக்குனர். இதில் நிருபமா கதாபாத்திரத்திற்கு வரும் மஞ்சு வாரியர் தன்னுடைய நடிப்பினால் நிருபமா பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார். அத்தோடு சமூகத்தில் காணப்படும் மிகப்பெரிய சிக்கலுடைய பெண்கள் அடக்குமுறை மற்றும் ஆணாதிக்க மனோநிலை மற்றும் கட்டமைப்பு பிரச்சனையை மிக எளிதாக இந்தப் படத்தின்மூலம்  காட்டி அவற்றை தகர்த்துக்கொண்டு பெண்கள் சமூக மட்டத்திற்கு எவ்வாறு உயரலாம் என்பதை இந்தப்படம் மிகத்தெளிவாக காட்டியிருக்கின்றது. கட்டாயம் மலையாளம் பேசுவோர் மாத்திரமல்லாது எல்லா மொழி பேசுபவர்களும் பார்க்கவேண்டிய ஒரு மிகச்சிறந்த படம். 


13 அக்டோபர் 2014

கத்தி யாருக்கு ஷார்ப்? விஜய்கா அல்லது லைக்காவுக்கா?



கத்தி படம் விஜய் இரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம். ஆனால் தற்போது சினிமா இரசிகர்கள் எல்லோராலும் வெளிவருமா இல்லை என ஆவலோடு எதிர்பார்க்கப்படும் படம். உண்மையில் கத்தி படத்திற்கு என்னதான் பிரச்சனை? ஏன் இவ்வளவு தடை முயற்சிகள் அந்தப் படத்திற்கு? என்னுடைய ஊகங்கள் கீழே...

1. லைக்கா மொபைல் என்னும் பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் சினிமாவில் காலூன்றுவதை தடுத்தல்.

2. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிடவேண்டும் அரசியல் ஆசையில் துடித்துக்கொண்டிருக்கும் விஜய்க்கு அரசியல் மட்டத்திலிருந்து கொடுக்கபபடும் நெருக்கடியில் இதுவும் ஒன்று. 

மேலே கூறிய இரு பிரதான காரணங்களிலிலும் முதலாவது காரணமே இந்தக் கத்தி படத்திற்கு ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு காரணமாக இருக்கவேண்டும் என கருதவேண்டியிருக்கிறது.

சினிமா என்பது கலை என்ற ஒரு விடயத்தினையும் தாண்டி இந்தியாவில் சினிமா என்பது 100% வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றது.                                  இந்த வியாபாரத்தில் பைனான்ஸியர் தயாரிப்பாளர் தொடக்கம் தியட்டர் முதலாளிவரை குறுகிய காலத்தில் அதிகளவு இலாபத்தினை பார்த்துவிட வேண்டும் என துடித்துக்கொண்டிருப்பவர்கள். சாதாரணமாக இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் பைனான்ஸியர்களை அணுகுவார்கள். அவர்களும் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து பணத்தை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவார்கள். தயாரிப்பாளர் அதற்குப் பின்னர் படத்தை தயாரிப்பார். ஆரம்பிக்கும்போதே படத்தை திரையிடும் காலத்தினையும் தீர்மானித்துவிடுவார்கள். எல்லாமே பக்காவாக பிளான் பண்ணப்பட்டுத்தான் நடந்துகொண்டிருக்கின்றது. இதில் குறிப்பிட்ட திகதியில் படம் வெளிவராவிட்டால் படத்தின் தயாரிப்பளருக்கு சிக்கல்தான். (விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு வந்த பிரச்சனையும் அதுதான்)

இப்படி இந்திய சினிமா ஒருவரோடு ஒருவர் இணைந்த முறையில் ஒரு மாபியா ஆகவே இயங்கிக்கொண்டு வந்திருக்கின்றது இங்கே இதற்கும் கத்தி பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.
பல்லாயிரக்கணக்கான மில்லியன் முதலீட்டுடன் செயற்பட்டுவரும் லைக்கா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் திரைப்படம் ஒன்றை தயாரிக்க வரும்போது ஏற்கவே இருந்த பைனான்ஸியர், தயாரிப்பாளர் என்ற ஒன்றுக்குள் ஒன்று பின்னப்பட்ட வலையமைப்பினை இந்த பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தங்கியிருக்கத்தேவையில்லை. நேரடியாகவே எத்தனை கோடிகளையும் முதலிட அவர்கள் தயாராகவிருப்பார்கள். காரணம் அவர்களில் இருக்கும் தாராள பணப்புழக்கம். இதனால் ஏற்கனவே இருந்த நடைமுறைகள் சிறிது சிறிதாக ஆட்டம் காணத் தொடங்கும் இவ்வாறு இடம் பெற்றால் ஏற்கனவே சினிமா மூலம் கொள்ளை இலாபம் கண்டு சுவை பிடிபட்ட முதலாளிகளுடைய இருப்புக்கு அரம்பத்தில் பெரிதாக சிக்கல் இல்லாவிட்டாலும் லைக்காவின் வரவு பல புதிய பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவில் சினிமாவில் நேரடியாக முதலிட வாய்ப்புக்களை உருவாக்கிவிடும் இது முதலாளிகளில் இருப்பினை கேள்விக் குறியாக்கிவிடும். ஆகவே லைக்காவின் வரவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும அல்லது பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் குடுத்துதமிழ் சினிமாவில் முதலிட நினைக்கின்ற ஏனைய பல்தேசிய நிறுவனங்களுக்கு பயத்தினை ஏற்படுத்தவேண்டும் இதன்மூலம் அவர்களை உள்ளே வரவிடாமல் செய்யவேண்டும். இந்தப் பின்னணிதான் கத்தி படத்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கு காரணம். இதற்கு இந்தப் பிரச்சனைகளுக்கு பின்னாலிருப்பவர்கள் கண்டுபிடித்த காரணங்கள்தான் லைக்கா நிறுவனம் இலங்கை அரசுடனும் ராஜபக்ஷ குடும்பத்துடனும் மிகவும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனம் என்ற கருத்தினை முன்வைத்து பிரச்சனைகளை வலுவாக்கியதுதான்.

ஆனால் அந்தோ பாவம் தமிழ் சினிமா இரசிகர்கள். ஏற்கனவே நடிகர்களுக்காக பிரிந்துநின்று அடிபடும் அவர்களை இருபகுதியும் நன்றாக பயன்படுத்துகின்றார்கள். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி லைக்கா நிறுவனத்தின் எதிரிகளும் புகுந்து விளையாடுகின்றார்கள் ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்கு அப்பால் இந்தப் பிரச்சனைகளால் லைக்கா நிறுவனத்திற்கு இலவசமாக தங்களது நிறுவனத்தினைப் பற்றிய விளம்பரம் கிடைத்திருக்கின்றது. கத்தி பிரச்சனைக்கு முன்னர் லைக்கா பற்றி தெரிந்தும் அவர்களுடைய சேவையினை பயன்படுத்தாமல் இருந்தவர்கள் இப்போது லைக்கா நிறுவனத்தின் சிம் அட்டைகளை பாவித்து இந்தியாவுக்கு மிகக்குறைந்த செலவில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்களாம்.

ஆக மொத்தத்தில் கத்தி விஜய்கும் முருகதாசுக்கும் ஷாப்பா வேலை செய்கிறதோ இல்லையோ லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கு நல்ல ஷார்ப்பாகவே வேலை செய்கின்றது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று இதைத்தான் சொல்றது.

fb - வதீஸ் வருணன்- 

யாழ்தேவி... ஒரு உணர்வுபூர்வமான உறவுப்பாலம்



ஒரு நாட்டின் போக்குவரத்து என்பது அந்த நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். எந்தவொரு நாட்டில் போக்குவரத்து மேம்பட்டு காணப்படுகின்றது அந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாகவோ அல்லது அபிவிருத்தியினை வேகமாக எட்டுவதற்கு பயணித்துக் கொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே கருதமுடியும். 

இலங்கையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலமாக இருப்பது என்னவென்று கேட்டால் ஒன்று ஏ9 பிரதான வீதி மற்றையது யாழ்தேவி புகையிரதம். இந்த இரண்டு போக்குவரத்து சேவையிலும் புகையிர சேவையானது மிகவும் புகழ்வாய்ந்தது. வடற்கிற்கும் தெற்குக்கும் இடையிலான உண்மையான உறவுப்பாலம் எதுவென கேட்டால் யாழ்தேவி புகையிரதத்தினைத்தான பலரும் கூறுவார்கள். உண்மையும் அதுதான். 

1956ம் ஆண்டு வடக்கிற்கான பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி 1990களில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் 2009 யுத்தம் முடிவுற்றதன் பின்னர் சிறிது சிறிதாக பளை வரை பயணித்த புகையிரத சேவை இன்று முதல் 13.10.2014 யாழ்ப்பாணம்வரை தனது சேவையினை 14 ஆண்டுகளிற்கு பின்னர் ஆரம்பிக்கின்றது. இந்திய அரசின் நிதியுதவியிலேயே இந்த புகையிரதசேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவையினை இன்று ஆரம்பித்து வைக்க இருக்கின்றார். 

90களின் பிற்பகுதியில் பிறந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பலரும் இன்றைக்கு பிற்பாடு புகையிரதத்தினை நேரில் பார்க்கும் வாய்ப்பினைப் பெறப்போகின்றார்கள். அது ஒரு உணர்வு பூர்வமான தருணமாக இருக்கப் போகின்றது. அத்தோடு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பிரயாணங்களை இது மேலும் இலகுபடுத்தப் போகின்றது. 

யாழ்ப்பாணத்திற்கு புகையிரதசேவை வருவதானது யாழ்ப்பாணத்திற்கு சாதகமான பல விடயங்களையும் பாதகமான பல விடயங்களையும் கொண்டுவரப் போகின்றது. இவற்றையெல்லாம் தாண்டி 2 தசாப்தங்களுக்கு மேலானா வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலாக ஒரு இடைவெளியினை இது இல்லாமல் செய்யப்போகின்றது என்பது முற்றிலும் உண்மை. 




07 அக்டோபர் 2014

மெட்ராஸ் - கொண்டாடப்படவேண்டிய படமல்ல


இது விமர்சனமல்ல ரௌத்திரம்
அண்மையில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. இதன் காரணமாக திரைப்படத்தினைப் பார்த்தேன். தமிழ் சினிமாவின் தலைவிதியை எண்ணி நான் நொந்துகொண்டேன்
தமிழ் சினிமா குட்டைக்குளிருந்து வெளியேவரமுடியாமல் வெளியே வந்துவிட்டதுபோல் மாயையை ஏற்படுத்திக் கொண்டு வந்திருக்கிறது இந்தத் திரைப்படம். மற்ற வியாபார தமிழ் சினிமாவைப்போலவே இந்திரைப்படத்திலும் கொலை, வெட்டுக்குத்து, அடிதடி, அரசியல், துரோகம் எல்லாமே அப்படியே பிடித்துவைத்த பிள்ளையார் போல குடியிருக்கிறது
புதிதாக இருப்பது, ஹீரோயிசம் காட்டாது ஒவ்வொருவரா கொலை செய்துவிட்டு இறுதியில் சிறுவர்களுக்கு பாடமெடுக்கும் கார்த்தியும் கதைக்களமான "வட சென்னையும்" மட்டும்தான்.
வழமையாக தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் பஞ்ச வனம்பேசி 100 பேரை அடித்து வீழ்த்தி பார்வையாளனுக்குள்ளும் வன்முறையை புகுத்தி வீடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் நடைமுறை இருந்துகொண்டிருந்தது. இந்தப்படத்தில் சிறிது வித்தியாசமாக கதாநாயகன் ஹீரோயிசம் காட்டாது படம் நெடுகிலும் கொலைசெய்துகொண்டு பார்வையாளர்களுக்குள் சத்தமில்லாது வித்தியாசமான வன்முறை சிந்தனையினை தூண்டி விட்டிருக்கின்றார் இயக்குனர். அட்டக்கத்தி என்ற நல்ல ஒரு திரைப்படத்தினை கொடுத்த Pa Ranjith தானா இந்த படத்தை எடுத்தது என்று மீண்டும் என்னுள்ளே கேள்வியை எழுப்ப வைத்துவிட்டது இந்தப் படம்.
*இன்று ஒரு செய்தி பார்த்தேன். சமூக மாற்றத்துக்கான விருது மெட்ராஸ் படத்திற்கு வழங்கப்போகின்றார்களாம். என்ன கொடுமையான ஒரு அறிவிப்பு இது. வன்முறைக் கலாச்சாரத்தினை வித்தியாசமான முறையில் மக்களுக்குள் புகுத்திய இப்படத்திற்கு சமூக மாற்றத்திற்கான விருது கொடுத்து தவறான முன்மாதிரியை தமிழ் சினிமாவுக்கு காட்டப்போகின்றார்கள் என்ற வருத்தம்தான் எனக்கு.
கலையினை கட்டாயக் கொலைசெய்து வியாபாரமாக மாறிவிட்ட தமிழ் சினிமாவின் முடிவு எவ்வாறு இருக்கும்?

20 செப்டம்பர் 2014

A Gun & A Ring

அண்மையில் கொழும்பில்இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே ஒரு தமிழ்த் திரைப்படம் A Gun & A Ring. அதை திரையரங்கில் சென்று பார்க்கமுடியாது போய்விட்டது காரணம் இந்தப்படம் திரையிடப்பட்ட அதேநாளிலேயே என்னுடைய குறும்படமும் வேறு ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனால் திரையரங்கில் திரைப்படத்தினை பார்க்க முடியவில்லை. சரி விடயத்திற்கு வருவோம். நான் திரையிடப்பட்ட இரண்டு முறையும் பார்கமுடியாமல் போன காரணத்தினால் இயக்குனர் தந்த இணைய முகவரியில் இந்தப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பரவலாக இந்தப்படத்தினைப் பற்றி ஏற்கனவே பலர் தமது பார்வைகளை முன்வைத்தபடியால் நான் அவற்றைப்பற்றிக் கதைக்காமல் வேறு சில விடயங்களை கதைக்கலாம் என முடிவு செய்திருக்கின்றேன்.

சும்மா சப்பைப்படங்களை ஒருபோதும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்கு தெரிவு செய்யமாட்டார்கள். ஆனால் இந்தப்படம் ஷங்காய் திரைப்படவிழாவில் திரையிடுவதற்கு முதல்முறையாக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டபோதே இந்தப்படத்தில் ஏதோ விசயம் இருக்கவேண்டும் என ஊகித்திருந்தேன். கொழும்பில் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் எந்தவொரு தமிழ்ப்படமும் இல்லையென தெரியவந்தபோது (தமிழ்நாட்டுப்படங்களை இங்கே திரையிட ஏற்பாட்டாளர்கள் விரும்பியிருந்தபோதும் இந்திய தயாரிப்பாளர்கள் விரும்பாத காரணத்தினால் சில படங்களை திரையிடமுடியாமல் போய்விட்டது) நான் இந்தத்திரைப்படத்தினை கொழும்பில் திரையிட முன்மொழிந்திருந்தேன். இதன் பிறகே அவசர அவசரமான இயக்குன லெனின் அவர்களை தொடர்பு கொண்டு திரைப்படத்தை வாங்கி கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவினுடைய ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்திருந்தேன். அவர்களுக்கும் படம் பிடித்துப்போக படத்தினை தணிக்கைக்கு அனுப்பி தணிக்கையும் கிடைத்தபடியால் இலங்கைப் பார்வையாளர்களுக்கு இந்த அருமையான படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதற்கு காரணமாகவிருந்த அனோமா ராஜகருணா, அசோக ஹந்தகம மற்றும் பிரசன்ன விதானகே ஆகியோருக்கு நன்றி கூறவேண்டும்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது படத்தினுடைய திரைக்கதை கதாபாத்திரங்களின் தெரிவு இசை மற்றும் இயக்கம். ஒளிப்பதிவு சரியில்லை என பல தமிழ் பார்வையாளர்கள் கூறியபோதும் நான் இந்தப்படத்தினைப் பார்க்கும்போது ஒளிப்பதிவு இந்தப் படத்தின் கதையினை எந்தஒரு இடத்திலும் சிக்கலாக்கவில்லை ஆகவே எனக்கு ஒளிப்பதி தொடர்பில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பொதுவாக சர்வதேச திரைப்படவிழாக்களில் ஒரு படத்தினை தெரிவு செய்யும் போது அந்தப் படத்தின் கதையின் நேர்மை மிகமுக்கியமான இடத்தில் இருக்கின்றது. இந்தப் படம் உலகலாவிய ரீதியில் வெளிவரும் தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கின்றது. காரணம் இந்தப்படத்தின் கதையில் இருக்கின்ற நேர்மை. இயக்குனர் கதையினை சிக்கலான திரைக்கதையினூடு சொல்லமுற்படும்போது அதை கவனமாக கையாண்ட விதம் ஆகிய இரண்டையும் முக்கியமாக கூறலாம். ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒவ்வொரு பின்னணி. சில பாத்திரங்களின் பின்னணியை இயக்குனர் கூறும்போதும் சில பாத்திரங்களின் பின்னணி கூறப்பட்டிருக்கவில்லை. அப்படி கூறவும் தேவையில்லை. பார்வையாளனாகிய என்னை அவற்றை ஊகிக்க விடுவது இன்னும் சாலச் சிறந்தது. மற்றையது கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிகப்பொருத்தமானவர்களை தெரிவு செய்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

அடுத்தது இசை. இந்தப் படத்திற்கு இசை மற்றுமொரு பலம். இந்தப் படத்தின் கதையினை இன்னும் ஆழமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பதில் இசை முக்கிய இடத்தில் இருக்கின்றது. திரைக்கதைக்கு தேவையான இடத்தில் இசையினை சரியாக பயன்படுத்தியிருக்கின்றார் இயக்குனர்.


இறுதியாக படத்தில் சொல்லப்பட்ட அரசியல் சொல்லப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு சில முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி தரமான ஒரு தமிழ்ப் படமாக இந்தப் படத்தினைக் கருதலாம். அந்தவகையில் இந்தப் படத்தினை உருவாக்கிய இயக்குனர் லெனின் அவர்களும் இந்த பணத்தினை செலவு செய்து உருவாக்கிய விஷ்ணு முரளியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இந்த கன் அன் ரிங் திரைப்படம் இருக்கின்றது என்பதனை மிகவும் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

Official Page https://www.facebook.com/aGunANDaRing 

06 ஜனவரி 2014

என்னுடைய முதல் குறும்படம் "தவறிப் பிறந்த தரளம்"


Synopsis 

இலங்கையின் வடக்கில் 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளக்குடியமர்வுகள் இடம்பெற்ற பின்பும் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உளவில் ரீதியான தாங்கங்களிலிருந்து இன்னும் மீண்டுவரவில்லை. யுத்தகாலத்தில் ஏற்பட்ட சிறுவயதுத் திருமணங்கள் பல ஆயிரக்கணக்கான சிறுவர்களை இந்த உருவாக்கியிருந்தது. அப்படியான சிறுவயது திருமணம் மூலம் பிறந்த ஒரு சிறுவன் போரின் உளவியல் தாக்கங்களிலிருந்து விடுபடாமல் பெற்றோருடன் வசித்துவருகின்றான். இதேவேளை அந்தச் சிறுவனுடைய பெற்றோருக்கிடையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக எவ்வாறு சிறுவன் பாதிக்கப்படுகின்றான் அதிலிருந்து வெளிய வருகின்றான் என்பதையும் இந்தக் குறும்படம் கூறமுயற்சி செய்கின்றது.


As resettlement initiatives take place in the North of Sri Lanka, following the end of the war in 2009, the children who were affected psychologically due to the war have still not recovered from their trauma. Additionally, child marriages that took place during war-time gave birth to many children in broken homes. This film follows the story of a young boy, who suffers from Post Traumatic Stress Disorder (PTSD) after the war. He is the only child of young parents who were forced into marriage as children. This short film explores how he is affected by marital problems between his parents and how he attempts to escape his living hell.




Cast and Crew

அம்மா - பிரியா
மகன் - பிரகாஸ்
அப்பா - தர்மலிங்கம்
பெண் - தனுசியா

இளைஞர்கள் - சுலக்ஷன்
                         நில்ருக்ஷன்
                         என்.சுலக்ஷன்

எழுத்து இயக்கம் - வதீஸ் வருணன்

ஒளிப்பதிவு - சமந்த தசநாயக்க

படத்தொகுப்பு ஒலிச்சேர்க்கை - சசங்க சஞ்சீவ

தயாரிப்பு - வதீஸ் வருணன் | விப்லன் ஒணோராஜ்