A Promised Land

04 மே 2018

நில் கவனி!

மூன்று தசப்பதங்களாக ஒட்டுமொத்த இலங்கையையும் ஆட்டிப்படைத்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மோதம் 18 ஆம் திகதியன்று தமிழ் எதிர்காலத்தையும் அரசியல் அபிலாசைகளையும் படு பாதாளத்தில் தள்ளி முடிவுக்கு வந்ததுடன், மறுபுறத்தில் பிரிவினைவாத பயங்கரவாத யுத்தத்தினை வெற்றி கொண்டது இந்நாட்டின் சிங்கள பௌத்தர்களின் அதீத அர்ப்பணிப்பினாலே என்றும் அதற்கு வழிவகுத்தது மகிந்த ராஜபக்ஷவே என்ற கருத்தும் அன்று இந்நாட்டில் மிக ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த யுத்த வெற்றி மயக்கத்தில் முழுநாடுமே சிங்கள இனவாதத்தின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதற்கு மகிந்த ராஜபக்ஷ எடுத்த முயற்சிகள் நூற்றுக்கு நூறு வீதம் கைகொடுத்ததனாலேயே யுத்த களத்தில் யுத்தத்தை வென்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை 2010 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடையச் செய்து சிறையில் அடைத்து சகல உரிமைகளையும் பறித்து ஜம்பர் அணிய வைப்பதற்கு தென்னிலங்கை சமூகத்தின் அமோக ஆதரவு மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தது.
இந்தப் பின்னணியில் யுத்த வெற்றியின் மயக்கத்தில் கிடக்கும் தென்னிலங்கை சமூகத்தின் ஆதரவை சகாவரமாக பெற எண்ணிய மகிந்த ராஜபக்ஷ தமது தரப்பைத் தவிர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் சின்னாபின்னமாக்கி, நீதியரசரை தூக்கி எறிந்து நீருக்காக போராட்டம் நடத்திய தமது சொந்த மக்களையே வெடிவைத்துக் கொன்று நாட்டை ஏகாதிபத்திய பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் 18ஆவது சீர்திருத்தத்தினை மேற்கொண்டு சாகும்வரை இந்த நாட்டின் மன்னனாக இருப்பதற்கு திட்டம் வகுத்தார். அதன் பலனாகவே இரண்டு வருடங்கள் தமக்கான ஆட்சி அதிகாரம் இருக்கும் போதே அவற்றை மிக உச்சக்கட்டமாக உபயோகப்படுத்தி தமது பலத்தை உயிர் இருக்கும் வரை தம்வசம் ஆக்கிக் கொள்வதற்காக 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி தேர்தலை பிரகடனப்படுத்தினார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக களறங்கிய தெற்கின் சிங்கள பெரும்பான்மையினரின் யுத்த வீரனான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு கதிகலங்கியிருந்த தென்னிலங்கை அரசியல் சமூகத்திற்கு, மகிந்தவுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது தமது சிரத்தையே தம் கரங்களால் சிதைத்துக் கொள்வதற்கு சமமாகும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.
மிக மோசமான பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் தானும் தான் சார்ந்த ஒட்டுமொத்த சொந்தங்களும் விபரிக்க முடியாத விபரீதங்களுக்கு முகம்கொடுக்க நேரிடுவதும் நிச்சயப்படுத்தப்பட்ட பின்னணியிலேயே மகிந்த ராஜபக்கவுக்கு எதிராக எதிர்த்துப் போட்டியிட மன உறுதிமிக்க மைத்ரிபால சிறிசேன களமிறங்கினார்.
அவ்வாறு அன்று அவர் மகிந்த ராஜபக்ஷவை விட்டு வெளியேறும்போது மகிந்தவின் பெயரைக் கேட்டதுமே அஞ்சி நடுங்கும் பின்னணியில் அவரது கட்சியின் எவருமே மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மையாக இருந்தது. அதனால் அவரது சொந்த குடும்பத்தை சேர்ந்தவகளைத் தவிர அவருக்கு ஆதரவு வழங்க முன்வந்த ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவிலேயே அவர் வெற்றிபெற வேண்டியிருந்தது. அதன் பலனாகவே 2015 ஆம் ஆண்டு சிங்கள அடிப்படைவாதத்தை அடித்தளமாகக் கொண்டு இனவாத பரப்புரையும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த மகிந்த ராஜபக்ஷ பெற்ற 5768090 வாக்குகளைவிட 6217162 வாக்குகளைப் பெற்று மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அத்தேர்தலில் தோல்வியென்பது மரணமே என்பதை நிச்சயிக்கப்பட்டிருந்த பின்னணியில் மைத்ரிபால சிறிசேன அவர்கள் களமிங்காது விட்டிருப்பின் இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒன்று இருந்த இடம் இல்லாது போயிருக்கும் என்பது திண்ணம், யுத்தம் முடிவடைந்து 06 ஆண்டுகள் கடந்தும் அந்த யுத்த அகதிகளை அடிமைகளாக நடத்திவந்த, தமிழ் சமூகத்தை தரைமட்டமாக்குவதற்கான உச்சக்கட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பின்னணியில் இன்று தமிழ் சமூகம் அனுபவித்துவரும் சுதந்திரமும் மீளப் பெறப்பட்டுவரும் உரிமைகளும் திரும்பக் கிடைக்கப் பெற்றுவரும் அவர்களது சொந்த நிலங்களும் நிம்மதியான வாழ்க்கையும் நிறைவேறாத கனவாகவே இருந்து வந்திருக்கும் என்பது உறுதியாகும்.
பேருவளையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் இனவெறியாட்டம் நாடெங்கும் பரவி இந்நாட்டு முஸ்லிம் மக்களை, உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள் விழுந்திருக்கும் படுகுழியை விட படுபாதாளத்தில் தள்ளுவதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்பட்டிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. யுத்த களத்தில் தமிழர்களுக்கு எதிராக தயவு தாட்சணையின்றி ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகள் தென்னிலங்கையில் உரிமைக்காக வாய்திறக்கும் ரத்துப்பஸ்வல சிங்களவர்களைப் போன்று கொன்று குவித்து அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அந்தவகையில் 2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றியவர் வெற்றி நிச்சயம் என்ற மன உறுதியுடனும் கறை படியாத தூய்மையான அரசியல் பின்னணியினை மாத்திரம் தமது பக்கபலமாகக் கொண்டு களமிறங்கிய மைத்ரிபால சிறிசேன அவர்களே என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.
அன்று தமக்கென எந்தவிதமான வாக்கு வங்கியும் இன்றி பிறரை நம்பி களமிறங்கிய மைத்ரிபால சிறிசேன அவர்கள், அன்று இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றிய நன்றியை மறவாத சுமார் 18 இலட்சம் வாக்காளர்கள் இன்று பலத்த இனவாத கோசங்களுக்கு மத்தியிலும் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்களுக்கு பக்கபலமாக இருக்கின்றார்கள் என்பது கடந்த மூன்றாண்டு காலத்தில் ஜனாதிபதியாக அவர் பெற்ற மகத்தான வெற்றியாகும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்த 18 இலட்சம் வாக்குகளானது முற்றுமுழுதாக மைத்ரிபால சிறிசேன எனும் தனிமனிதனுக்கு கிடைத்த வாக்குகளேயாகும். அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமது குடும்பத்தின் சொந்த வாக்குகளை மாத்திரம் தனதாக்கிக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 18 இலட்சம் வாக்காளர்களின் நம்பிக்கைளை வென்றிருப்பதுடன் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அவரால் முன்னெடுக்கப்படும் நாட்டு மக்களின் நலனுக்கான நடவடிக்கைகள் இத்தொகையினை இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்கச் செய்யுமென்பதில் ஐயமில்லை.
30 ஆண்டுகால யுத்தம் எமது நாட்டை நாசப்படுத்தியதை விட மிகப் பாரதூரமாக எமது நாட்டை நாசப்படுத்தி வருவது அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்படும் இலஞ்சமும் ஊழலும் மோசடிகளும் திருட்டுமே ஆகுமென்பதை மிகத் தெளிவாக உணர்ந்த ஜனாதிபதி அவர்கள் அவற்றை ஒழிப்பதற்கு இலங்கை வரலாற்றில் இதுவரை எந்த அரச தலைவரும் எடுக்காத பல துணிவுமிக்க முடிவுகளை எடுத்துவரும் பின்னணியிலேயே, அந்த நிலை நீடிக்குமாயின் இந்த நாட்டை சூறையாடுவதை அரசியல் என அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் திருட்டு அரசியல்வாதிகளுக்கு விமோசனம் இல்லையென்பதை நன்றாக உணர்ந்த திருட்டுக் கும்பலின் கொதிப்பையும் கொந்தளிப்பையுமே நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றது.
இந்த நாட்டை இனவாதிகளுக்கும் மனித கொலைகளுக்கும், திருட்டுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும், ஏமாற்று வித்தைகளுக்கும், தம்மைத் தாமே மன்னர்களாக வர்ணித்தக் கொள்ளும் குடும்ப ஏகாதிபத்தியத்திற்கும் அடிமைப்படுத்துவதா அல்லது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி மைத்ரிபால சிறிசேன அவர்களை வெற்றிபெறச் செய்து நாட்டை விடிவுப் பாதையில் முன்னெடுத்து வருகையில் முகம்கொடுக்க நேர்ந்திருக்கும் சந்தர்ப்பவாதிகளின் சூழ்ச்சி வலையில் நாட்டையும் நமது எதிர்காலத்தையும் சிக்க வைப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்களே?

கருத்துகள் இல்லை: