A Promised Land

20 செப்டம்பர் 2014

A Gun & A Ring

அண்மையில் கொழும்பில்இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே ஒரு தமிழ்த் திரைப்படம் A Gun & A Ring. அதை திரையரங்கில் சென்று பார்க்கமுடியாது போய்விட்டது காரணம் இந்தப்படம் திரையிடப்பட்ட அதேநாளிலேயே என்னுடைய குறும்படமும் வேறு ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனால் திரையரங்கில் திரைப்படத்தினை பார்க்க முடியவில்லை. சரி விடயத்திற்கு வருவோம். நான் திரையிடப்பட்ட இரண்டு முறையும் பார்கமுடியாமல் போன காரணத்தினால் இயக்குனர் தந்த இணைய முகவரியில் இந்தப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பரவலாக இந்தப்படத்தினைப் பற்றி ஏற்கனவே பலர் தமது பார்வைகளை முன்வைத்தபடியால் நான் அவற்றைப்பற்றிக் கதைக்காமல் வேறு சில விடயங்களை கதைக்கலாம் என முடிவு செய்திருக்கின்றேன்.

சும்மா சப்பைப்படங்களை ஒருபோதும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்கு தெரிவு செய்யமாட்டார்கள். ஆனால் இந்தப்படம் ஷங்காய் திரைப்படவிழாவில் திரையிடுவதற்கு முதல்முறையாக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டபோதே இந்தப்படத்தில் ஏதோ விசயம் இருக்கவேண்டும் என ஊகித்திருந்தேன். கொழும்பில் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் எந்தவொரு தமிழ்ப்படமும் இல்லையென தெரியவந்தபோது (தமிழ்நாட்டுப்படங்களை இங்கே திரையிட ஏற்பாட்டாளர்கள் விரும்பியிருந்தபோதும் இந்திய தயாரிப்பாளர்கள் விரும்பாத காரணத்தினால் சில படங்களை திரையிடமுடியாமல் போய்விட்டது) நான் இந்தத்திரைப்படத்தினை கொழும்பில் திரையிட முன்மொழிந்திருந்தேன். இதன் பிறகே அவசர அவசரமான இயக்குன லெனின் அவர்களை தொடர்பு கொண்டு திரைப்படத்தை வாங்கி கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவினுடைய ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்திருந்தேன். அவர்களுக்கும் படம் பிடித்துப்போக படத்தினை தணிக்கைக்கு அனுப்பி தணிக்கையும் கிடைத்தபடியால் இலங்கைப் பார்வையாளர்களுக்கு இந்த அருமையான படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதற்கு காரணமாகவிருந்த அனோமா ராஜகருணா, அசோக ஹந்தகம மற்றும் பிரசன்ன விதானகே ஆகியோருக்கு நன்றி கூறவேண்டும்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது படத்தினுடைய திரைக்கதை கதாபாத்திரங்களின் தெரிவு இசை மற்றும் இயக்கம். ஒளிப்பதிவு சரியில்லை என பல தமிழ் பார்வையாளர்கள் கூறியபோதும் நான் இந்தப்படத்தினைப் பார்க்கும்போது ஒளிப்பதிவு இந்தப் படத்தின் கதையினை எந்தஒரு இடத்திலும் சிக்கலாக்கவில்லை ஆகவே எனக்கு ஒளிப்பதி தொடர்பில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பொதுவாக சர்வதேச திரைப்படவிழாக்களில் ஒரு படத்தினை தெரிவு செய்யும் போது அந்தப் படத்தின் கதையின் நேர்மை மிகமுக்கியமான இடத்தில் இருக்கின்றது. இந்தப் படம் உலகலாவிய ரீதியில் வெளிவரும் தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கின்றது. காரணம் இந்தப்படத்தின் கதையில் இருக்கின்ற நேர்மை. இயக்குனர் கதையினை சிக்கலான திரைக்கதையினூடு சொல்லமுற்படும்போது அதை கவனமாக கையாண்ட விதம் ஆகிய இரண்டையும் முக்கியமாக கூறலாம். ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஒவ்வொரு பின்னணி. சில பாத்திரங்களின் பின்னணியை இயக்குனர் கூறும்போதும் சில பாத்திரங்களின் பின்னணி கூறப்பட்டிருக்கவில்லை. அப்படி கூறவும் தேவையில்லை. பார்வையாளனாகிய என்னை அவற்றை ஊகிக்க விடுவது இன்னும் சாலச் சிறந்தது. மற்றையது கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிகப்பொருத்தமானவர்களை தெரிவு செய்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

அடுத்தது இசை. இந்தப் படத்திற்கு இசை மற்றுமொரு பலம். இந்தப் படத்தின் கதையினை இன்னும் ஆழமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பதில் இசை முக்கிய இடத்தில் இருக்கின்றது. திரைக்கதைக்கு தேவையான இடத்தில் இசையினை சரியாக பயன்படுத்தியிருக்கின்றார் இயக்குனர்.


இறுதியாக படத்தில் சொல்லப்பட்ட அரசியல் சொல்லப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு சில முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி தரமான ஒரு தமிழ்ப் படமாக இந்தப் படத்தினைக் கருதலாம். அந்தவகையில் இந்தப் படத்தினை உருவாக்கிய இயக்குனர் லெனின் அவர்களும் இந்த பணத்தினை செலவு செய்து உருவாக்கிய விஷ்ணு முரளியும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இந்த கன் அன் ரிங் திரைப்படம் இருக்கின்றது என்பதனை மிகவும் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

Official Page https://www.facebook.com/aGunANDaRing 

06 ஜனவரி 2014

என்னுடைய முதல் குறும்படம் "தவறிப் பிறந்த தரளம்"


Synopsis 

இலங்கையின் வடக்கில் 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளக்குடியமர்வுகள் இடம்பெற்ற பின்பும் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உளவில் ரீதியான தாங்கங்களிலிருந்து இன்னும் மீண்டுவரவில்லை. யுத்தகாலத்தில் ஏற்பட்ட சிறுவயதுத் திருமணங்கள் பல ஆயிரக்கணக்கான சிறுவர்களை இந்த உருவாக்கியிருந்தது. அப்படியான சிறுவயது திருமணம் மூலம் பிறந்த ஒரு சிறுவன் போரின் உளவியல் தாக்கங்களிலிருந்து விடுபடாமல் பெற்றோருடன் வசித்துவருகின்றான். இதேவேளை அந்தச் சிறுவனுடைய பெற்றோருக்கிடையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக எவ்வாறு சிறுவன் பாதிக்கப்படுகின்றான் அதிலிருந்து வெளிய வருகின்றான் என்பதையும் இந்தக் குறும்படம் கூறமுயற்சி செய்கின்றது.


As resettlement initiatives take place in the North of Sri Lanka, following the end of the war in 2009, the children who were affected psychologically due to the war have still not recovered from their trauma. Additionally, child marriages that took place during war-time gave birth to many children in broken homes. This film follows the story of a young boy, who suffers from Post Traumatic Stress Disorder (PTSD) after the war. He is the only child of young parents who were forced into marriage as children. This short film explores how he is affected by marital problems between his parents and how he attempts to escape his living hell.




Cast and Crew

அம்மா - பிரியா
மகன் - பிரகாஸ்
அப்பா - தர்மலிங்கம்
பெண் - தனுசியா

இளைஞர்கள் - சுலக்ஷன்
                         நில்ருக்ஷன்
                         என்.சுலக்ஷன்

எழுத்து இயக்கம் - வதீஸ் வருணன்

ஒளிப்பதிவு - சமந்த தசநாயக்க

படத்தொகுப்பு ஒலிச்சேர்க்கை - சசங்க சஞ்சீவ

தயாரிப்பு - வதீஸ் வருணன் | விப்லன் ஒணோராஜ்








17 மார்ச் 2013

பாலாவின் பரதேசி!



இயக்குனர் பாலா மற்றும் அவருடைய உயிரை உலுக்கும் படங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் கேட்டறிந்திருந்தாலும் தியட்டரில் பார்த்த அவருடைய முதற்படம் “பிதாமகன்”. உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் பார்த்தேன். அதன் பின்னரே தேடிவாங்கி "சேது" மற்றும் "நந்தா" படங்களை பார்த்திருந்தேன். பிதாமகன் படம் பார்த்ததிலிருந்து அதற்குப் பிறகு வெளிவந்த நான்கடவுள், அவன் இவன் மற்றும் தற்போது வெளிவந்திருக்கும் பரதேசிவரை தியட்டரிலேயே பார்த்திருக்கின்றேன். அதுவும் பாலாவின் படங்களை நண்பர்களுடன் சென்று பார்க்காமல் தனியாகவே பார்ப்பது வழக்கம். இந்த படங்கள் எல்லாமே ஒருவகையின் என்னைப்பாதித்ததுண்டு.

பாலா போன்ற கலைப்பட இயக்குனர்கள் உண்மைகளை எடுத்து ஜதார்த்தமாகவும் சிலஇடங்களில் ஜதார்த்தத்தைதாண்டி சில காட்சிகளை அமைத்து அதனுடைய தாக்கத்தினை பார்வையாளர்களுக்கு வழங்கிவிடுவார்கள். இவர்களுடைய படம் முடிவடையும்போது பார்வையாளர்களுடைய மனதை கலங்கடித்துவிடும். அந்தவகையில் நேற்றுப் பார்த்த பரதேசி படம் என்னை மிகவும் Disturb பண்ணிவிட்டது. 
தேயிலைத்தோட்டத்து வாழ்க்கையின் ஆரம்பத்தை அல்லது அவர்கள் வெள்ளையர்களின் தேயிலைதோட்டங்களில் வேலை செய்வதற்கு தங்களது சொந்த ஊரிலிருந்த எவ்வாறு ஏமாற்றி அழைத்து வரப்பட்டார்கள் அங்கே எவ்வாறு வேலைவாங்கப்பட்டார்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை தனக்கே உரிய வன்முறைப்பாணியில் இந்தப்படத்தில் சொல்லியிருக்கின்றார் இயக்குனர் பாலா. 

இந்தப் படத்தில் நடித்த அதர்வா, வேதிகா, தன்ஷிகா உட்பட பெரும்பாலும் படத்திலே இருந்த எல்லோரும் தங்களது பாத்திரங்களை வெகுசிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். "நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு" இது இயக்குனர் பாலாவின் எல்லாப்படங்களிலுமே இருக்கின்ற ஒரு சிறப்பு.
பின்ணணி இசைதான் படத்தினுடைய மிகப்பெரிய பிரச்சனையே. பின்ணணி இசை இல்லாமலேயே இந்த படத்தினை வெளியிட்டிருக்கலாம் என்று படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது தோன்றியது எனக்கு.
சில இடங்களில் பின்ணணி இசை காட்சியுடன் ஒட்டாமலேயே வேறு ஒரு திசையில் பயணிக்கிறது. ஜீவி இப்படியான படங்களுக்கு பின்ணணி இசைவழங்குவதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என தோன்றுகிறது. அத்தோடு வெள்ளையர்களால் கொடுமைப்பட்டதை இன்னும் கூடுதலாக காட்டியிருக்கலாம்.  மொத்தத்தில் எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய உயிரினை உலுக்கும் இயக்குனர் பாலாவின் படம் பரதேசி.



அண்மையில் இயக்குனர் பாலா நடிகர்களை தாக்குவதுபோலவும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுபோலவும் வீடியோக்கள் வெளிவந்து சர்ச்சையினை தோற்றுவித்திருக்கினறது. நானும் அந்த வீடியோவை பார்த்தேன் ஆனால் வீடியோவில் காட்டப்பட்டவை காட்சியில் வந்திருப்பவையே ஆகவே ஒரு காட்சியை எப்படி நடிக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு காட்டும்போது எடுக்கப்பட்டவீடியோக்கள்தான் அவை. மேலும் திரைப்படங்களில் பயன்படுத்தம் அந்த தடிக்களால் அடிக்கும்போது வலி ஏற்படாது சத்தம் மட்டுமேவரும் சோ அதைப்பற்றி பெரிதாக வெளியில் இருப்பவர்கள் அலட்டிக்கொள்ளவோ அல்லது அதை தூக்கிப்பிடித்துக்கொண்டு மனிதஉரிமை மீறல் என்று கூக்குரலிடவோ தேவையில்லை என்பதே இந்தத்துறைக்குள் உதவி இயக்குனராக இருக்கும் என்னுடைய கருத்து.


என்னைப் பொறுத்தளவில் பாலா போன்ற இயக்குனர்கள் அவ்வாறுதான் இருப்பார்கள். தாங்கள் நினைப்பதுபோல நடிகர்கள் நடிக்கவில்லையென்றால் பேச்சு ஏச்சுக்கள் வாங்கவேண்டி வரும் சிலவேளைகளில் அடியும் வாங்கவேண்டிவரும். ஏன் சிலவேளைகள் உதவி இயக்குனர்கள்தான் கெட்டவார்த்தை திட்டுக்களையும் அடிகளையும் வாங்கவேண்டிவரும். இதை நான் இங்கு ஏன் சொல்கின்றேன்என்றால் எல்லாம் என்னுடைய அனுபவம்தான். இலங்கையின் சிங்கள இயக்குனர் அசோக ஹந்தகமகூட நடிகர்கள் சரியாக நடிக்கவில்லையென்றால் நடிகர்களுடன் கடுமையாக நடந்துகொள்வார். சிலவேளைகளில் எங்களுடனும் கடுமையாகத்தான் நடந்துகொள்வார். இவ்வாறான இயக்குனர்கள் அவர்களுக்கு தேவையான நடிப்பை எவ்வாறாயினும் நடிகர்களை கஷ்டப்படுத்தியாவது பெறவே முயற்சிப்பார்கள் என்பதே உண்மை. ஆகவே அதைப்பற்றி வெளியிலுள்ளவர்கள் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே சாலச்சிறந்தது.

02 பிப்ரவரி 2013

மதங்கள்

"மொழிதான்" ஒரு இனத்தின் அடையாளம். "மதம் அல்ல" என்பதை முதலில் எல்லோரும் புரிந்து புரிந்துகொள்ளுங்கள்.

"மக்களுக்காக உருவாக்கப்பட்ட மதங்கள்" என்பது இப்போது "மதங்களுக்காக மக்கள்"என்ற நிலையில் வந்துநிற்கின்றது. இது ஆரோக்கியமான ஒரு எதிர்கால சமூகத்திற்கு சவாலாக மாறிவிட்ட/மாறப்போகும் ஒரு பிரச்சனை.

மதங்களை கோவில்களுக்குள்ளும் தேவாலையங்களுக்குள்ளும் பள்ளிவாசல்களுக்குள்ளும் இல்லாமல் வீதிக்கும் பொதுவெளிக்குள்ளும் கொண்டுவருவதே இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்.  புரிந்துகொள்ளுங்கள்.

24 ஜனவரி 2013

விஸ்வரூபமும் பொதுபலசேனாவும் & முஸ்லிம்களும்


ஒரு படத்தை தடை செய்வதையோ காட்சிகளை தணிக்கை என்ற ரீதியில் அகற்றுவதையோ சினிமாத்துறைக்குள் இருப்பவன் என்ற ரீதியல் மட்டுமல்லாது பொதுவான பார்வையாளனாகவும் கண்டிக்கின்றேன் வன்மையக எதிர்கின்றேன். ஒரு திரைப்படத்தை உருவாக்க ஒரு இயக்குனர் எவ்வளவு கஷ்டங்களைப்படவேண்டியிருக்கிறது ஆனாலும் சில மலினமான விடயங்களுக்காகவும் உப்புச்சப்பில்லாத காரணங்களையும் முன்நிறுத்தி அதனை முடக்க நினைப்பது முட்டாள்த்தனம்.

படம்பார்த்த ஒரு "குழு" படத்தை தடைசெய்ய கோருகிறார்கள் என்றவுடன் எந்தவித சிந்திப்புக்களும் இல்லாது படத்தை தடைசெய்யவேண்டும் எனக் கோருவது எம்முடைய இந்த உலகத்தில் இன்னமும் "சுயபுத்தியுடன்" செயற்படாது "சொல்புத்தியில்" இயங்கும் சிலரும் வாழ்கின்றார்கள் என்பதை நினைவுபடுத்த வைக்கின்றார்கள். உண்மையான முஸ்லிம்/உண்மையான கிறீஸ்வதன்/உண்மையான ஹிந்து ஒருபோதும் படைப்புக்களுடாக தான் சார்ந்த மதம்மீது தொடுக்கப்படும் விமர்சனங்களுக்காக அந்த படைப்பையே தடைசெய்ய  கோரமாட்டான்.

அந்தவகையில் நேற்று தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்ட கமல் ஹாசனுடைய விஸ்வரூபம் படம் இன்று இலங்கையிலும் மறு அறிவித்தல்வரை   தடை செய்திருப்பதானது நல்ல சினிமாவை சமூகத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை முடக்கும் நடவடிக்கைகளில் ஒன்று.

"இலங்கை அரசு படங்களை தடை செய்வதென்பது புது விடயமல்ல 2006ம் ஆண்டளவில் இலங்கையின் திரைப்பட நெறியாளர் அசோக ஹந்தகம இயக்குனரது “அக்ஷரய” என்ற ஒரு திரைப்படம் இலங்கையின் நீதித்துறைக்கு எதிராக எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி இலங்கை அரசங்கத்தினால் தடைசெய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது இயக்குனரை சிறையில் அடைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதே அரசாங்கம் அண்மையில் இலங்கையில் நீதித்துறையினை குற்றம்சாட்டியதோடு மட்டுமல்லாது நீசியரசரையும் பதவியிலிருந்து தூக்கிவீசியிருந்தது. இன்று அந்த “அக்ஷரய” திரைப்படம் வெளிவந்திருக்குமானால் அரசாங்கத்தால் அமோகமாக வரவேற்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை. அதை இன்றைய பத்திரிகை ஒன்றின் பேட்டியில் அன்று படத்தை தடைசெய்த அமைச்சரே அன்று தான் எடுத்த முடிவு பிழையானதொரு முடிவு என்று கருத்து தெரிவித்திருக்கின்றார்"

இந்த சம்பவத்தினை நான் ஏன் இங்கு குறிபிட்டேன் என்றால் படைப்புக்குள்ளும் தனக்கு சாதமானவற்றை தேடும் குறுகிய மனப்பாங்குடன் பல சமூகங்கள் மட்டுமல்லஅரசாங்களும் செயற்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது நாளை (25.01.2013) கொழும்பில் இந்த படத்துக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்களாம். குறைந்தது இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக "பொது பலசேனா" செய்யும் அட்டூழியங்களுக்காக போராடாமல் மௌனியாக இருந்துகொண்டு வெறும் அறிக்கைகளைவிடும் இவர்கள் "கமலின் படைப்புக்கு" எதிராகப் போராட வெளிக்கிடுவது முஸ்லிம்களையும் அவர்களது சமூகத்தையும் நோக்கி மேலும் கேள்விகள் விமர்சனங்கள் கேட்கப்படுவதை அதிகரிக்க செய்யுமே தவிர குறைக்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை

22 ஜனவரி 2013

தற்போதைய சூழலும் தேசியமட்ட பிரச்சினையும்...!

இலங்கையின் செய்தி இணையத்தளமான தமிழ்மிரரில் வெளிவந்த என்னுடைய ஆக்கத்தின் மீள்பதிவே இது.


விடுதலைப் போராட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டால் அந்த குழு சார்ந்த மக்களுடைய அபிலாசைகள், கோரிக்கைகள் வென்றவர்களால் செவிசாய்க்கப்படாது. இது மன்னர் காலங்களில் இருந்தே கடைப்பிடித்து வந்த ஒரு நடைமுறை. ஆனால் வெற்றிபெற்ற கில்லாடி ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தங்களது செயற்றிட்டங்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்துச் செல்வார்கள். ஆனால் அந்த அபிவிருத்தி திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சிறிய புள்ளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய வீடுகள் சாதாரணமானவையாகவோ ஓலைக்குடிசைகளாகவோ அல்லது தறப்பாளால் மூடப்பட்டவையாகவோ அல்லது தகரங்களினால் வேயப்பட்டதாகவே காணப்படும். 

ஆனால் அவர்களுடைய குடிசைகளை சூழ இருந்த சாதாரண செம்மண் பாதைகள் பிரதான பாதைகளாக அபிவிருத்தி அடையும். புதிய புதிய பிரமாண்டமான கட்டடங்கள் கட்டப்படும். 24 மணிநேர மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். அவர்களுடைய வாழ்க்கையை  மேம்படுத்துவதே தங்களது உச்ச குறிக்கோளென கூறிக்கொண்டு அந்த மக்களுடைய குறைந்தபட்ச வருமானத்தையும் பிடுங்கும் நோக்கில் அவர்களைச் சூழ புதிது புதிதாக லீசிங் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் முளைக்கும். அம்மக்களோ இண்ஸ்டோல்மெண்டில் ரிவி பெட்டி வாங்கி தங்களது ஆஸ்த்தான நாயகர்கள் எதிரிகளை பறந்து பறந்து பந்தாடும் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்த்து புல்லரித்துப்போவார்கள்.

இவற்றையெல்லாம் அப்பிரதேசத்தால் பயணம் செய்பவர்களும் பார்த்து பூரித்துப்போவார்கள். இந்த புல்லரிப்பையும் பூரிப்பையும்தான் ஆள்பவர்களும் எதிர்பார்த்திருப்பார்கள். ஆகவே அவர்களும் பூரிப்படைவார்கள்.

இந்தப் புல்லரிப்புக்களுக்கும் பூரிப்புக்களுக்கும் இடையில் பாதிக்கப்பட்ட இனக்குழுவைச் சார்ந்த பாதிக்கப்படாத மக்கள் - பாதிப்புக்குள்ளாகாத பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்களும் பாதிப்படையாதவர்களும் (பெரும்பான்மையானோர்) சாதிப் பிரச்சினையை வீட்டுக்குள்ளும் உரிமைப் பிரச்சினையை வெளியிலுமாக காட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களைச் சுற்றி கொலை, கொள்ளை, வன்புணர்வு, பால்நிலை சமத்துவமின்மை, பிரதேசவாதம் போன்ற பல கொடிய விடயங்கள் சிறிது சிறிதாக ஆரம்பித்து பூதாகரமாக பெரியளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்.

இவற்றையெல்லாம் பார்த்து, கேட்டு “எங்கட கலாசாரம் நாசமாக போகுது” என்று கூக்குரல் இட்டுக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு சமூகப் பிரச்சினைகள் அதிகரிக்க அதிகரிக்க தேசிய மட்டத்தில்
இனப் பிரச்சினைக்காக குரல்கொடுக்கும் தன்மையில் பாரிய மாற்றமொன்று ஏற்படும். இது ஆரோக்கியமான ஒன்று அல்ல.

இனப்பிரச்சினை காணப்படுகின்ற இலங்கை போன்ற நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் மத்தியில் மேலே குறிப்பிட்டது போன்ற சமூகப்பிரச்சினைகள் ஏற்படுவது சிறந்ததன்று. ஏனென்றால் சமூகப்பிரச்சினைகளை மூடி மறைத்துக்கொண்டு தேசிய மட்டத்தில் பிரச்சினையை கதைப்பதற்கோ தீர்ப்பதற்கோ செல்லமுடியாது. அப்படிப் போனால் மீண்டும் ஆரம்ப புள்ளிக்கே வந்து நிற்கவேண்டிவரும் (இப்போது நிற்பதுபோல).

தற்போதைய சூழலுக்கு ஏற்ப உலக அரசியலை விளங்கிக்கொண்டு இலங்கைத் தமிழர்களுடைய உரிமை பிரச்சினையை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னர் சமூகப் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய கட்டாயம் மிகப்பெரிய சவாலாக இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. ஆகவே சமூகப் பிரச்சினைகள் தோன்றும் மூல காரணியை கண்டுபிடித்து அதை கேள்வி கேட்கவேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கின்றது.

http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/57399-2013-01-21-13-25-43.html

21 ஜனவரி 2013

“சித்தார்த்தனும்” “கௌதம புத்தரும்”



எதிர்வரும் வாரம் முதல் இலங்கையின் திரையரங்குகளில் “சித்தார்த்த” என்ற சிங்களப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. யார் இந்த கௌதம சித்தார்த்த என்றால் கி.மு 500ம் ஆண்டுகளில் நேபளத்தின் லும்பினி எனுமிடத்தையாண்ட அரசனின் புத்திரன். தன்னுடைய வாழ்க்கையில் பெறக்கூடிய அதியுச்ச இன்பங்களையெல்லாம் உட்சபட்சமாக அனுபவித்த அரசிளங்குமாரன். அதன் பின்னரே அவனுக்கு ஆசைகளின் மேல் வெறுப்பு ஏற்பட்டு அரண்மனை சொகுசு வாழ்க்கையினைவிட்டு வெளியேறி துறவு பூண்டு அரசமரத்தின் கீழ் ஞானம் அடைந்து கௌதம புத்தரானவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. இது தொடர்பான தகவல்களை  http://ta.wikipedia.org/s/58x  இந்த விக்கிபீடியா முகவரியில் விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த சித்தார்த்தரை பற்றிய திரைப்படமே வெளிவரவிருக்கின்றது. இது தொடர்பாக இந்த திரைப்படத்தினுடைய இயக்குனர் அண்மையில் ஊடகமொன்றுக்கு பேட்டிகொடுத்திருந்தார். அதில் அவர் இந்த சித்தார்த்த திரைப்படத்தினுடைய கதையினை இந்தியாவில் இருக்கின்ற ஒரு இயக்குனரிடம் காட்டியதாகவும் அதற்கு அவர் இதை நல்ல ஒரு திரைக்கதை எழுத்தாளரிடம் கொடுத்த எழுதும்படியும் கூறியிருக்கின்றார். அதன்பிரகாரம் பொலிவூட் திரைக்கதை எழுத்தாளரினைக் கொண்டு சித்தார்த்த திரைக்கதை எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்த எழுத்தாளர் எழுதிய திரைக்கதை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறி மீண்டும் திரைக்கதையினை இயக்குனரும் அவருடைய குழுவினரும் இங்கேயே எழுதி அதனையே படமாக்கியிருக்கின்றார்கள்.

உண்மையில் அந்த பொலிவூட் எழுத்தாளர் எழுதிய திரைக்கதை உண்மையில் சித்தார்த்தருடைய வாழ்க்கையினை சரியான முறையில் சொல்லியிருந்திருக்க வேண்டும். ஆனால் அது இவர்களுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனென்றால் இலங்கையை பொறுத்தளவில் பிறந்த நாளிலிருந்தே புத்தர் ஞானமடைந்தவர் என்பதாகவே இலங்கை பௌத்தர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே “சித்தார்த்த” திரைப்படத்தினுடைய கதை நிற்சயமாக இலங்கையில் வாழுகின்ற பௌத்தர்களை திருப்பத்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை இயக்குனரின் பேட்டியிலிருந்து ஊகிக்கலாம். அதுமட்டுமல்லாது இந்த திரைப்படத்தினை 30ஆயிரம் பௌத்த துறவிகளுக்கு இலவசமாக திரையிட்டுக் காட்டப்போகின்றார்களாம். ஆகவே 30 ஆயிரம் பௌத்த துறவிகளும் 30 ஆயிரம் விகாரைகளில் இதைப்பற்றி சொன்னார்களானால் படம் நிற்சயம் இலங்கையில் சுப்பஹிட்ஸ் ஆகிவிடும். அடுத்த 3 மாதத்திற்கு இலங்கையின் திரையரங்குகளில் “சித்தார்த்த” தான்.