A Promised Land

09 மார்ச் 2010

தமிழ் அரசியல் தலைவர்களும் கூட்டமைப்பும்....

இம்முறை பாராளுமன்ற தேர்தல் இடம் பெறப்போவதாக அறிவித்த நாளில் இருந்து பரபரப்புக்களுக்கு பஞ்சமில்லை. இதில் பத்திரிகைகளில் அனேகமாக தமிழ் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய செய்திகளையே அதிகமாக தாங்கி வருகின்றன. இம்முறை தமிழ் பிரதேசங்ககளில் போட்டியிடுவதற்கு பல கட்சிகளும் சுயேட்சையாக ஏராளமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றார்கள்.

2004 ம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை வடகிழக்கில் பெற்று அமோக வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றியினை இல்லாமல் செய்வதற்காகவே இவ்வாறு ஏராளமானோர் வடகிழக்கில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்கள்(போட்டியிட வைக்கப்படுகின்றார்கள்) போலத்தான் எனக்கு புலப்படுகின்றது. காசு கொடுத்து அரசு சுயேற்சை குழுக்களை போட்டியிட வைக்கின்றது என யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்ணணி வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட அண்மையில் யாழ்நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதேபோல மற்றுமொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரன் அண்மையில் தமிழ் வாரவெளியீடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்யுமாறு சுயேற்சை வேட்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இவர்களுடைய கருத்துக்களையும் உதாசீனம் செய்துவிட முடியாது.

இன்னுமொரு முக்கியமான விடயம்தான் கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு தமிழ் தேசியகூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பலரை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றியமை. இது பல மட்டங்களில் பெரும் சர்ச்சையை அண்மையில் கிளப்பிவிட்டிருந்தது. இதன் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்ணணி என்ற பெயரில் வடகிழக்கில் போட்டியிடுகின்றார்கள். இதன் மூலம் தற்போதைக்கு அந்த விவகாரம் அப்படியே தணிந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இவர்களுக்கும் இடையே ஊடக அறிக்கை மூலமான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றமையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது விழுந்திருக்கும் இன்னுமொரு குற்றச்சாட்டுதான் தமிழ் மக்களுடைய ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக இருந்த கொள்கைகளை கைவிட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகாளால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் பேசுவதற்கு தயார் என்று அறிவித்திருப்பதாக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்ணணி தெரிவிக்கின்றது. ஒஸ்லோ பிரகடனத்தை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்று விவாதிப்பதற்கா நேரம் இதுவல்ல. உலக அரங்கில் இலங்கை தமிழர்களுடைய அரசியல் ஸ்திரத்தினை தெளிவாக நிரூபிக்க வேண்டிய காலம் இது. 2004ம் ஆண்டு உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் தங்களுடைய அரசியல் பலத்தினை நிரூபிக்க வேண்டியமை எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ அதைவிடவும் தற்போது நிரூபிக்க வேண்டிய தேவையிருப்பதாக நான் கருதுகின்றேன்.

மற்றையது பிராந்தய வல்லரசு அயல்நாடு என்பதையும் கடந்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்று வரும்போது இந்தியாவின் செல்வாக்கானது மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. என்னை பொறுத்தவரையில் தமிழ் Nசிய கூட்டமைப்பு இதனை தெளிவாக புரிந்துகொண்டுள்ளது போன்றுதான காணப்படுகின்றது. சுட்டமைப்பானது ஈழப்பிரச்சனை தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எதனையோ எதிர்பார்ப்பது அல்லது இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு முயற்சிக்கினறது போலத்தான் புலப்படுகின்றது. இதன் ஒரு நடவடிக்கையாகத்தான் புதுடில்லியில் அர்களுடைய காரியாலயம் ஒன்றை நிறுவது தொடர்பான திட்டம் என்றுகூட கூறலாம். கடந்த நாட்களில் கூட இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதியுடனும் அரசியல் கட்சிகள் சிலவற்றுடனும் பேச்சு நடத்தியிருந்தார்.

எது எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் இருந்த காலப்பகுதியில் ஒன்றாக ஒற்றுமையாக(?) இருந்த தமிழ் தலமைகள் விடுதலைப்புலிகளுடைய வீழ்ச்சியின் பின்னர் இவ்வாறு பிளவுபட்டு நிற்பது தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்துக்கும் ஒரு பெரும் பின்னடைவே. எது எப்படியோ தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிளவுகள் தமிழ் மக்களுடைய அரசியல் ஸ்;திரத்தில் பாரிய தாக்கத்தினை எதிர்காலத்தில் செலுத்தப்போகின்றது என்பதுதான் உண்மை என்பதனை தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் தலமைகள் ஐக்கியப்பட்டு ஒற்றுமையாக இருப்பார்களெயனால் தமிழ் மக்களுக்கான உரிமைகள் அபிலாசைகளை பற்றி இலங்கையின் அரசியல் தலமைகளுடன் கதைப்பதற்கு இலகுவானதாகும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

04 மார்ச் 2010

தேர்தல் கூத்துக்கள்

தேர்தல் என்று ஒன்று வந்தவிட்டாலே பரபரப்புக்களுக்கு குறைவிருக்காது. கட்சி தாவல்கள் அடிதடி சண்டைகள் என்று இவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் இங்கு நான் சொல்லப்பொவது எனக்கு தெரிந்த கூத்துக்களைதான்

தேர்தலில் வேட்பாளருக்குரிய இலக்கங்களை பெறும்போது கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கூத்துக்கள். இது சம்பந்தமாக நான் சில நாட்களுக்கு முன்னமே அறியக்கூடியதாக இருந்தது. அதாவது மலையகத்தில் போட்டியிடும் ஒரு பிரபல்ய தமிழ் கட்சிக்கு எப்போது தேர்தலில் 8ம் 9ம் 10 வது இலக்கங்களை கட்டாயமாக வழங்க வேண்டுமாம். அதேபோல மற்றும் ஒரு கட்சிக்கு 2ம் 3ம் 4ம் இலக்கங்களை கட்டாயம் வழங்க வேண்டுமாம். இந்த இருகட்சிகளுக்கும் வழங்கப்படும் இந்த இலக்கங்களை தவிர்ந்து ஏனைய இலக்கங்களைத்தான் ஏனையோருக்கு தேர்தல் அலுவலகம் வழங்க வேண்டுமாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது 1வது இலக்கத்தை பெறுவதற்காக தங்களுடைய முதல் எமுத்துக்களை மாற்றிகொள்பவர்களும் வேட்பாளர்களாக எமது நாட்டில் இருக்கின்றார்கள். அதாவது ஆங்கில முதல் எழுத்தான “A” யை தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வார்களாம். இதனால் 1வது இலக்கம் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஏனென்றால் இலக்கங்கள் வழங்கும்பொது ஆங்கில எழுத்துக்களின் வரிசையிலேயே இலக்கங்கள் வழங்கப்படுவது வழமையானதினாலாகும்.

இப்படி எனக்கு தெரிந்த தேர்தல் கூத்துக்கள் இவை. ஆனால் இன்னும் எத்தனையோ கூத்துக்கள் தில்லுமுல்லுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. உங்களுக்கும் இவ்வாறான கட்சிகளின் தில்லுமுல்லுக்ள ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள் கட்சிகளின் பல விடயங்கள் தெரிந்திருப்பதில்லை. இவ்வாறான ஆக்கங்கள் மூலமாகவாவது வேட்பாளர்கள் கட்சிகள் அடிக்கும் கூத்துக்களை அவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

என்னை அடிக்கடி உறுத்தும் ஒரு கேள்விதான் தேர்தலில் ஒருவேட்பாள் மக்களின்மூலம் வராமல் ஏன் கட்சி தலைவர்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பதுதான். இவ்வாறு கட்சி தலைவரினால் ஒரு வேட்பாளர் நேரடியாக தெரிவு செய்யுமிடத்து அவர் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டிய அல்லது மக்களுக்கு பதில் சொல்ல அவசியமில்லாமல் போகின்றது. அந்த வேட்பாளர் தன்னை தெரிவு செய்த கட்சிக்கோ அல்லது தலைவருக்கே பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இதன்மூலம் தள்ளப்படுகின்றார். ஆனால் எது எப்படியானாலும் மக்கள்தான் வாக்களிக்கவேண்டும். அது அவர்களுடைய ஜனநாயக கடமை என்பதோடு மட்டுமே நின்று விடுகின்றது அவர்ககளுடைய பங்கு. இதனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் தேர்தலின் பின்னர் தவிடுபொடியாகி விடுகின்றது.

04 பிப்ரவரி 2010

இலங்கை தமிழ் அரசியல் கைதிகள்

எங்களுடைய நாட்டில் என்று அவசரகால சட்டமும் பயங்கரவாத தடைச்சட்டமும் கொண்டுவரப்பட்டதோ அன்றிலிருந்து சந்தேகத்தின் பெயரில் ஒருவரை தடுத்து வைத்திருப்பதென்பது இயல்பாகி போனதொன்றாகிவிட்டது. எத்தனையோ தாய் தந்தையர் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் பல மனைவிமார் தங்களது கணவர்களையும் பிள்ளைகள் அப்பாவையும் சிறையிலே சென்று பார்பதை தவிர அவர்களுக்கு முன்னால் வேறுஒர தெரிவும் இல்லாமல் இருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பலர் விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் விசாரணைகள் இன்றி எத்தனைபேர் சிறைகளில் வாடுகின்றனர். இவர்கள்மீது முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டாக விடுதலைப்புவிகளுக்கு உதவி செய்தனர் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோயினர் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் தொடர்பான ஒரு சிறிய தொகுப்பு யா ரிவி நிறுவனத்தினால் அண்மையில் தயாரிக்கப்பட்டது. அந்த தொகுப்பையும் பாதிக்கப்பட்டவர்ளின் அழுகுரலையும் இந்த நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் இதோ இந்த காணொளியில்...

16 ஜனவரி 2010

மாற்றம் ஏற்படாது தடுக்க வேண்டும்

தலைப்பை பார்த்தவுடனேயே ஏதோ அரசியல் பதிவு என்று நினைக்கவேண்டாம். இது இயற்கையுடன் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு. அதாவது தற்போது புவியானது நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகின்றது. இதற்கு முக்கியமான காரணமாக மனிதனது செயற்பாடுகளை கூறலாம். அதிகரித்து வரும் நகர மயமாக்கல் இதற்கு முக்கியமான காரணமாகும்.
காலநிலை மாற்றத்தைால் எரிர்காலத்தில் புவியானது பாரிய சவால்களை சந்திக்க வேண்டி வரும். எனவே எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு தற்போதே சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும். அதற்கு புவியில் உள்ள ஒவ்வொருவருடைய பங்களிப்பும் முக்கியம் .

இயற்கையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு www.earthlanka.net எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது. தற்போது கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் EDEX 2010 கண்காட்சியில் Earthlanka தனது கண்காட்சி கூடத்தினை Green Zone ல் நிறுவியிருக்கின்றது. நீங்களும் EDEX 2010 கண்காட்சிக்கு சென்றால் ஏர்த்லங்காவின் Green Alliance கண்காட்சி ‍கூடத்திற்கு சென்று மேலதிக விபரங்களை பெற்று கொள்ளலாம்.
உங்களது கருத்துக்களை அவர்களுடைய கீழ்வரும் வலைப்பதிவிற்கு சென்று பதியலாம். உங்களுடை பெறுமதியான கருத்துக்கள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றகண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பிவைக்கப்படும்.
வலைப்பதிவு இங்கே அழுத்தவும்
www.earthlanka.com
Join Earthlanka Fan Club on Facebook "One Earth" Click Here

12 ஜனவரி 2010

பிணையில் விடுதலையானார் ஊடகவியலாளர் திசநாயகம்

2008ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடந்தவருடம் இலங்கை மேல்நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகம் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மேல் முறையீட்டு மனுவானது இன்னும் விசாரணையில் இருக்க அவரால் தாக்கல் செய்யப்பட்ட பிணைமனுவின் தீர்பின் ஊடாகவே இவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்காக குரல்கொடுத்த இவரது விடுதலையானது மகிழ்ச்சி அளித்தாலும் ஏனைய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே எனது கோரிக்கை

08 ஜனவரி 2010

எதிர்பார்பை அதிகரிக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா


பாடல்கள் மற்றும் இயக்குனர் நடிகர் என்று பல கோணங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் படம்தான் “விண்ணைத்தாண்டி வருவாயா” வாரணம் ஆயிரத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கியிருக்கும் திரைப்படம், வழக்கமக தனது படங்களுக்கு இசையமைக்கும் ஹரிஸ் ஜெயராஜை கழற்றி விட்டுவிட்டு ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடனும் லிட்டில் சுப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிஷாவும் இணையும் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பினை தோற்றுவித்துள்ளது. எங்களை ஒருகணம் சிலிர்க்கச்செய்த வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பின்னர் ஒரு அழகிய காதல்கதையுடன் வெளிவரும் படமென்று விண்ணைத்தாண்டி வருவாயா என்று கூறப்படுகின்றது.எதிர்பார்ப்பிற்கு இன்னுமொரு காரணம் அண்மையில் வெளியாகியிருக்கும் பாடல்கள் என்பதையும் கூறலாம். அண்மையில் பிபிசி தொலைக்காட்சியில் விண்ணைத்தாண்டி வருவாயா பாடலும் ஏ,ஆ.ரஹ்மானின் நேர்காணலும் ஒளிபரப்ப்பட்டிருந்தது. அத்தோடு பாடல் வெளியீடானது லண்டனிலேயே இடம்பெற்றது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும்.

"விண்ணைத்தாண்டி வருவாய" பாடல்களில் அந்த "ஹோசான" பாடலை குறிப்பிட்டு கூறலாம். தாமரையின் அருமையான வரிகளுக்கு தனது பாணியினிலே சிறந்த ஒரு இசையினை ரஹ்மான் வழங்கியிருக்கின்றார் என்றே கூறமுடியும். அத்துடன் அதில் கலந்திருக்கு இசை நுணுக்கம் போன்றவற்றை வைத்து பார்த்தால் நிற்சயம் இந்தப் பாடல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நல்ல ஒரு பெயரினையும் இந்த ஆண்டின் சிறந்த பாடல் என்ற இடத்தை பெற்றுவிடும் என்பதில் ஐய்யமில்லையென்பது என்கருத்து.

"ஹோசான" பாடலை கேட்டு மகிழ

14 டிசம்பர் 2009

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் சங்கடங்களும்

சரத்பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தில் ஏற்கனவே சூடுபிடித்துள்ள இலங்கையின் அரசியல்களம் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தல்
என அறிவித்தபின் மேலும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மத்தியில் அல்லது அவர்கள் சார்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியிலும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான நிலமை இன்னும் தெளிவில்லாமல்தான் இருக்கின்றது. ஏனென்றால் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும்தான் முதல் காரணம். தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு இரு வேட்பாளர்களும் இதுவரையும் தவறிவிட்டனர் என்றனர் என்றே கூறவேண்டும்.

சரத் பொன்சேகா இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்குதான் எங்களுடைய வாக்கை அளித்திருப்போம் என்று கூறுவோரும் இருக்கின்றார்கள். ஆனாலும் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வளவான நல்ல கருத்து இல்லையென்றுதான் கூறவேண்டும். தற்போதைய நிலையில் இரு வேட்பாளர்களும் தமிழ் மக்களுடைய வாக்கினை குறிவைத்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இதனுடைய ஒரு கட்டம்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய யாழ் விஜயம்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியினரும் தங்களுது பிரச்சாரங்களினையும் ஆரம்பித்திருக்கின்றார்கள். யுத்த வெற்றியினையே சிங்கள மக்களிடையே நடக்கும் பிரச்சாரங்களின்போது இரு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
உண்மையிலே தமிழ் மக்களுடைய நிலையோ யாருக்கு வாக்களிப்பது என்று வரும்போது இத்தேர்தலில் சங்கடமான நிலைதான். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இனவாத கருத்தினை கொண்டவர் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. அத்தோடு யாழ் மக்களுக்கு அவரைப்பற்றி ஓரளவுக்கு தெரியும்; ஏனென்றால் யாழின் கட்டளை தளபதியாக இவர் இருந்தவர்.இவரின் காலப்பகுதியில்தான் யாழில் சர்ச்சைக்குரிய விடயங்கள் பல உலக அளவில் பேசப்பட்டன. ஆனாலும் தற்போது தனது இராணுவ சீருடையினை கழைந்து அரசியிலில் நுழைந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதால் தனக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் என்றும் நம்புகின்றார். அத்தோடு தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கு இவர் முகாம் மக்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மறுபுறத்தில் சுதந்திர கட்சியின் ஆட்சியில்தான் தமிழர்கள் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது என்ற கருத்தும் காணப்படுகின்றது. ஆனாலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது ஆதரவினை சுதந்திர கட்சிக்கும் வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. ஆனாலும் சரத்பொன்சேகாவால தம்முடைய் வாக்குவங்கி உடையலாம் என்று சுதந்திரக்கட்சியின் கருதுகின்றார்கள். இதனாலேயே சரத் பொன்சேகாவிற்கு எதிரான கருத்துக்களையும் சரத் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்ற கருத்தினையும் மக்கள் மத்தியில் பகிரங்கமாக சுதந்திரகட்சியின் பிரச்சார கூட்டங்களில் கூறிவருகின்றனர்.
தமிழ் கூட்டமைப்போ இது தொடர்பாக எந்த முடிவினையும் இதுவரைக்கு தெரிவிக்கவில்லை. சரத்பொன்சேகா இல்லாமல் வேறு ஒருவர் வேட்பாளராக நின்றிருந்தால் கூட்டமைப்பு தன்னுடைய ஆதரவினை ஐதேகவிற்கே வழங்கியிருக்கும் ஆனால் தற்போது அது முடியாத காரியம். மக்களுடைய முடிவு தெரியாமல் யாருக்கும் ஆதரவளக்கவில்லை தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பிற்பாடுடு அறிவிக்கின்றோம் எனமட்டுமே தற்போதைக்கு கூட்டமைப்பினரால் கூறமுடியும்.

தற்போது போட்டியிடும் பிரதான இருதரப்பினர்களிடம் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் காணப்படுகின்றது. அதேபோல சர்வதேச சமூகத்துக்கும்கூட இருக்கத்தான் செய்கின்றது. இந்த தேர்தலில் இந்தியாவும் மறைமுகமாக தற்போதைய ஜனாதிபதியே அடுத்த ஜனாதிபதியாகவும் வரவிரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் யாருக்கு என்பதை இன்னமும் சரியாக கணிப்பதற்கு சற்று சிக்கல் நிலையே காணப்படுகின்றது. யுத்தம் இலங்கையில் முடிவுற்ற நிலையிலே தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.