A Promised Land

18 ஜூன் 2018

"சிறுவர்களைப் பாதுகாப்போம்" தேசிய வேலைத்திட்டம்


சிறுவர்களே இன்றைய எமது சமூகத்தின் நாளைய சிறந்த பலனுக்காக விதைக்கப்படும் விதைகள். ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் சாசனத்தின் முதலாவது சரத்தின்படி ஆண் பெண் வேறுபாடின்றி பதினெட்டு வயதுக்குட்பட்ட சகலரும் சிறுவர்களேயாவார். இந்த சாசனத்தின்படி சிறுவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகவே கொள்ளப்படுகின்றது. சிறுவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்களாக இருப்பதன் காரணமாகவே அவர்களுக்கான பாதுகாப்பு இவ்வாறு சாசன ரீதியில் எழுதப்பட்டிருக்கின்றது.

ஓவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சட்டதிட்டங்களை தமது அரசியலமைப்பில் முதன்மைப்படுத்தி சிறுவர்களை பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. நம்நாட்டைப் பொறுத்தவரையிலும் சிறுவர் விவகாரத்திற்கென்று அமைச்சரவை அமைச்சொன்று காணப்படுகின்றது. அது கடந்த காலத்திலும் தற்போதும் சிறுவர்களுக்காக செயற்பட்டு வருகின்றது.

நம்நாட்டில் சிறுவர்களை தொடர்பில் பணியாற்றக்கூடிய பொறிமுறையொன்று காணப்பட்டாலும் அதற்கும் மேலதிகமாக "சிறுவர்களைப் பாதுகாப்போம்" எனும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி அலுவலகத்திகன் கீழ் செயற்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சிறுவர்கள் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பு மற்றும் கரிசனையின் காரணமாக, "சிறுவர்களை பாதுகாப்போம்" என்ற செயற்திட்டத்தினை தனது எண்ணக்கருவுக்கு அமைய உருவாக்கி தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அமைச்சராக இருந்த காலத்திலேயே இவ்வாறான ஒரு செயற்திட்டத்தினை பொலன்னறுவை மாவட்டத்தில் மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டியிருந்தவர். "புலத்திசி தருவோ" அல்லது "பொலன்னறுவை பிள்ளைகள்" என்ற பெயரில் பொலன்னறுவை மாவட்ட சிறார்களை பாதுகாத்து அவர்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தார். அதன் காரணமாகவே முழுநாட்டு சிறுவர்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் இந்த தேசிய வேலைத்திட்டத்தினை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு உருவாக்கியிருந்தார்.

சிறுவர்களைப் பாதுகாப்போம் செயற்திட்டம் நாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை தற்போது வடக்கில் முதன்முறையாக கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில்  நாளை 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.  

மூன்று தசாப்பதங்களுக்கும் மேலான யுத்தம் நம்நாட்டின் சிறார்களை மிக மோசமாக பாதிப்படைய வைத்திருந்து. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசத்தின் சிறர்கள் உடல் உள ரீதியிலும் பௌதீக ரீதியிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். வடக்கில் இறுதியுத்தம் இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிறார்கள் உடல் உள ரீதியில் மாத்திரமன்றி சமூக ரீதியிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய குடும்பத்தில் ஏதேனுமொரு இழப்பினை இந்த யுத்தம் அவர்களுக்கு பரிசாக வழங்கிவிட்டுத்தான் சென்றிருக்கின்றது.

ஆகவே இப்பிரதேசங்களின் சிறார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு அரசாங்கதிற்கு இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தை முதலில் தெரிவு செய்திருப்பது உண்மையிலேயே சிறந்ததொரு விடயம்.

இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக போரின் காரணமாக பெற்றோர்களை இழந்து சிறுவர் இல்லங்களில் தங்கி கல்வி கற்றுவரும் சிறுவர்களை பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் குறித்த சிறுவர் இலங்களை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி செயலகம் முன்வந்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் போரின் காரணமாக அங்கவீனமடைந்துள்ள சிறுவர்கள் கல்வி கற்கும்; 25 பாடசாலைகளில் அவர்களுக்கான விசேட பாதைகளையும் விசேட மலசலகூடங்களையும் ஏனைய பௌதீக வளங்களையும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்து கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு மேலதிகமாக தூய நீரின் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோய் பரவி வருவதும் கண்டறியப்பட்டிருக்கின்றது. அதன் காரணமாக சிறிநீரக நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 1000 சிறிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் சிறுநீரக நோயின் பரவலை கட்டுப்படுத்தவும் தூய நீரின் பயன்பாட்டை மக்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களுடைய சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும் இது உதவியளிக்கும்.

ஒரு ஒழுக்கமுள்ள பிரஜையினை நம்நாட்டில் உருவாக்க வேண்டுமாயின் அப்பிரஜை தனது பாலர் வகுப்பிலிருந்தே ஒழுக்கத்தினையும் சமூகம் தொடர்பான தனது பார்வையினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் பாடசாலைக் கல்வியின் அடித்தளமாக இருப்பது இந்த முன்பள்ளிக் கல்வியே. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு தேவையான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் பாதுகாப்பற்று வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களை இனங்கண்டு அவர்களை பொருளாதார மற்றும் பௌதீக ரீதியில் மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதற்கும் இந்த அமைச்சின் அனுசரணையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேபோல் சிறுவர்களுக்கு போருக்கு பிந்திய உள வள ஆலோசனைகள் பல ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும் சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய செயற்திட்டத்திற்கு சமாந்தரமாக அந்நிகழ்ச்சி இடம்பெறும் தினத்தில் அவ்வளாகத்திலேயே உள வள வளர்ச்சிக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்டரீதியான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுவதுடன் அதனை முன்னெடுப்பதற்கான நடமாடும் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டதின் கிளிநொச்சி நிகழ்வுக்கு சமாந்தரமான இன்னுமொரு முக்கியமான நிகழ்வும் கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களிடம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மிக அண்மையில் அமைந்துள்ள கனகபுரம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது பாடசாலைக்கு நிரந்த விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியையே தாம் தற்காலிக விளையாட்டு மைதானமாக பாவித்து வந்தோம். தற்போது அதுவும் இல்லாமல் போயிவிட்டது. ஆகவே எமது பாடசாலைக்கு புதிய ஒரு விளையாட்டு மைதான்தை அமைத்துத் தரும்படி கோருகின்றோம் என ஜனாதிபதியிடம் தமது விளையாட்டு மைதானக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.

மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த ஜனாதிபதி அவர்கள் அருகில் நின்ற இலங்கை விமானப்படை தளபதி கபில ஜயம்பதி அவர்களிடம்கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைத்துக் கொடுக்கும்படி உடனடியாகவே உத்தரவிட்டார்.  பாடசாலைக்கு அருகிலிருந்த அரச காணியினை கரச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடகப் பெற்று விமானப் படையினர் விளையாட்டு மைதானத்தை தற்போது அமைத்து முடித்திருக்கின்றனர்.

நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தினை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் ஜனாதிபதியின் நாளைய கிளிநொச்சி விஜயமானது கிளிநொச்சி மாவட்டத்திற்கும் மக்களுக்கும் அதிகளவு நன்மையையே வழங்கப் போகின்றது. குறிப்பாக நாட்டின் எதிர்கால நம்பிக்கையான சிறுவர்களுக்கு காத்திரமான பல நன்மை பயக்கும் விடயங்கள் கிடைக்கவிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். சிறுவர்களைப் பாதுகாப்போம் வேலைத்திட்டம் போரின் வடுக்களிலிருந்து மீள முயற்சிக்கும் சமூகத்திற்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும் அதேவேளை பிரதேசத்தின் அரசாங்க அதிகாரிகள் ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதன் மூலம் காத்திரமான உதவிகளை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.


(கடந்த 17.06.2018 யாழ் உதயன் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை)