A Promised Land

12 மார்ச் 2009

பேய்க்கதைகள் (நாங்களும் சொல்லுவோமல்லே) -1

எல்லாருடைய மாடும் ஓடுதெண்டு கந்தையருடைய பேத்த கண்டும் ஓடிச்சுதாம்" இது எங்கட ஊரில நான் கேள்விப்பட்ட பழமொழி. அதே போலத்தான் தற்போது வலைப்பதிவுகளில் பிரபல்யமான ஆவிகதைகளை பற்றி நானும் எழுதலாமென யோசித்தேன்.
முதலிலேயே சொல்லுறன் எனக்கு இந்த ஆவி பேய் பிசாசு முனி .................[வேற ஏதும் இருந்தால் இடைவெளியில போட்டுக் கொள்ளுங்க]போன்றவற்றில் நம்பிக்கையில்லை. நாங்க சிங்கமெல்லே நள்ளிரவு 12 மணிக்கும் சுடலையை கடந்து செல்லுவோமெல்லோ. வேணுமெண்டால் என்னைப்பார்த்துதான் இவைகளை பயப்பட வேண்டும். இங்கே நான்கூறப்போகும் சம்பவங்கள் எனது நண்பர்களுக்கு நிகழ்ந்தவையாக அவர்கள் எனக்கு கூறிய உண்மைச் சம்பவங்கள்.

எனது நண்பர் ஒருவர் மலையகத்தில் தோட்டப் பாடசாலையொன்றில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். வார இறுதி நாட்களில் கொழும்புக்கு வந்து விடுவார். இப்படித்தான் ஒருநாள் கொழும்பில் நின்றபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இவரோடு பாடசாலையில் கடமையாற்றும் இன்னொரு ஆசிரியருடைய தம்பி திடீரென்று விபத்தொன்றில் இறந்து விட்டதாக அந்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெரிவிக்கப்பட்ட சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இருக்கும். இவரும் அந்த ஆசிரியரின் தம்பியின் மரணவீட்டில் கலந்து கொள்வதற்கென அவசரம் அவசரமாக புறப்பட்டார்.

அந்த ஆசிரியருடைய வீடு மலையகத்தில் உள்ள நகரிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் உள்ளாக மலையில் இருந்தது. நண்பர் நகரத்தை மாலை ஏழு மணியளவில் சென்றடைந்துள்ளார். நகரத்திலிருந்து மரண வீட்டுக்கு செல்வதற்கு ஒரேயொரு பேரூந்து மாத்திரமே இருந்தது. அதுவும் வேறு ஒருபாதையால் செல்லும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறங்கி ஏறத்தாள இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்லவேண்டும். நண்பரும் சரியென பேரூந்தில் ஏறி அமர்ந்து விட்டார். சுமார் 7.30 மணியளவில் குறிப்பிட்ட அந்த இடத்தில் நடத்துனரால் குறிப்பிட்ட வழியை காண்பித்து நண்பரை இறக்pவிட்டார்களாம். சரியான இருட்டு ஒருபுறம் மெதுவாக மழையும் தூறிக்கொண்டிருந்தது. நண்பருக்கும் புது அனுபவம். தட்டுத் தடுமாறி ஒற்றையடிப்பாதையால் நடந்து சென்று கொண்டிருக்கிறார். பாதையங்கும் சனநடமாட்டம் இல்லாமல் காரிருள் சூழ்ந்து கிடந்தது. நண்பருக்கும் ஒரு சிறு பயம் மனதுக்குள் இருந்தது. வழியிலே பேச்சுக்கு யாரும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். ஒரு அரைக் கிலோமீற்றர் சென்றிருப்பார் பாதையாரத்தில் அரிக்கன் லாம்புடன் உடலெல்லாம் போர்த்திய படி ஒரு மனிதர் நிண்டுகொண்டிருந்தார். நண்பரும் அவரை அணுகி மரணவீட்டுக் சென்று கொண்டிருப்பதாகவும் பாதை சரிவர தெரியவில்லையெனவும் உங்களுக்கு தெரிந்தால் சரியாக கூறும்படி கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த மனிதர் எனக்கு நன்றாக தெரியும் நான்போகும் பாதையில் தான் அந்த மரணவீடு இருக்கிறது என்றும் தன்னுடன் வரும்படியும் கூறியிருக்கிறார். நண்பருக்கும் நல்லதாக போய்விட்டது என்று எண்ணி அவரை பின்தொடர்ந்து சென்றிகொண்டிருக்கிறார்.

ஒரு பதினைந்து நிமிட நடைக்கு பின்னர் பதையிலிருந்து சற்று தூரத்தில் வெளிச்சம் தெரிந்த வீட்டை காட்டிய அந்த மனிதர் அதுதான் குறிப்பிட்ட ஆசிரியரின் வீடு எனவும் அங்கேதான் நீங்கள் செல்லவேண்டும் னெ கூறிசென்றுவிட்டார். நண்பரும் அவருக்கு நன்றிகூறி அந்த
மரணவீட்டை சென்று அடைந்தார். அங்கே இவருடைய சக ஆசிரியரை கண்டு துக்கம் விசாரித்துவிட்டு கதிரையில் அமர்ந்த போது மரண வீட்டுகாக அச்சடிக்கப்பட்ட துண்டுபிரசுரம் ஒன்றை ஒருவர் இவருக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கிப் பார்த்த நண்பர் அப்படியே உறைந்து விட்டாராம். அந்த துண்டுபிரசுரத்தில் இருந்த மரணமான ஆசிரியரின் தம்பியின் புகைப்படமும் இவரை ஒற்றையடிபாதையினால் கூட்டிவந்த மனிதருடைய படமும் ஒன்றாக இருந்ததே நண்பருடைய அதிர்ச்சிக்கு காரணமாகும். நண்பர் சத்தம் போடாமல் சக ஆசிரியரின் காதில் மெதுவாக இதை சொல்லியிருக்கிறார். அவம் சற்று நேரம் அதிச்சியடைந்து பின்னர் நிதானமடைந்தாராம். இறந்தவனுடன் பதினைந்து நிமிடம் நடந்து வந்ததை நினைக்கும் போது ஒரு திரில் அனுபவமாக இருக்கிறது என கதைக்கும்போது நண்பர் இப்போதும் எமக்கு கூறுவார்.

11 மார்ச் 2009

மலையக பெண்களுக்கு விடிவு கிட்டுமா...


அண்மையில் என்னுடைய அலுவலக பணிp நிமித்தம் ஹட்டன் நகருக்கும் பின்னர் அக்கரபத்தன நகருக்கும் சென்றேன். நாங்கள் புதிதாக தொடங்கவிருக்கும் பெண்களும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் என்ற தொனிப் பொருளை கொண்ட நிகழ்ச்சிக்கு தேவையான தகவல்களை திரட்டுவதே அந்த பயணத்தின் நோக்கம். மலையகத்தை சார்ந்த பெண்களே குடும்ப மற்றும் சமூக வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.

அங்கு சென்று கதைக்க போதுதான் எங்களுக்கு இன்னுமோர் விடயமும் தெரிய வந்தது. அதாவது பெண்களின் தோட்ட சம்பளத்தை ஆண்களே பெற்றுக் கொள்ளும் துரதிஸ்டவசமான நிலை. பல பெண்களோடு கதைத்த போது அவர்கள் கூறியது எங்ளுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரியாது. ஆம்பிளைங்கதான் எங்களுடைய சம்பளத்தையும் சேர்த்து எடுப்பார்கள். கேட்ட பொழுது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இதைப்பற்றி சில ஆண்களையும் கேட்ட போது அவர்களும் பெண்களுடைய சம்பளத்தை பரம்பரை பரம்பரையாக ஆண்கள் நாங்கள்தான் எடுத்திட்டு வாறோம். பெண்கள் சம்பளம் எடுக்க போகின்றது இல்லை. இவ்வாறு கிடைத்தது பதில். மலையகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடும் சில சமூக சேவையளர்களும் இதே பதிலை எமக்கு கூறியது மேலும் எமக்கு அதிர்ச்சியாகவிருந்தது. ஏன் பெண்களை அவர்களே உழைத்து பெறும் சம்பளத்தை பெற்றுக்கொள்ள அனுப்பக்கூடாது என திரும்பவும் கேட்டால் ஒரே பதிலைத்தான் அர்களிடமிருந்தும் பெற்றுகொள்ள முடிந்தது.

பெரும்பாலனா ஆண்கள் சம்பளத்தை எடுத்துக் கொண்டு நகர்ப்புற மதுபானசாலைகளை நோக்கித்தான் செல்வார்களாம். வீட்டில் மனைவி சம்பளத்தை பற்றி கேட்டால் பெரிய ரணகளத்தையே உருவாக்கி விடுவார்களாம் நம்முடைய குடிமக்கள். அதைவிட பெரிய சம்பவம் என்னவென்றால் மலையகத்திற்கு விடிவை பெற்றுதருவோம் என மேடைகளில்; வீராவேசப் பேச்சுகளை பேசும் அரசியல்வாதிகளும் கூட தங்களுடைய வெற்றிக்காக மதுபானத்தை வாரியிறைப்பதும் தாரளாமாக கடந்த தேர்தல்களிலும் நடந்திருக்கிறது.

வன்முறைகளை பற்றி பொலிஸில் ஏன் முறைபாடு செயவதில்லையென்றால் குடும்ப கௌரவம் போய்விடும் எனும் பயம்தான் காரணமென பெரும்பாலானவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு பலவாறான பிரச்சனைகளை நாளுக்கு நாள் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் மலையகமும் அங்கு வாழும் பெண்களும். இவற்றிலிருந்து விடுபட அவர்கள் தெளிவடைய வேண்டும்.

14 பிப்ரவரி 2009

ஊடகத்துறையில் பத்திரிகைகள் (இலங்கையில்)



இன்றைய இயந்திர உலகத்தில் மிகவும் முக்கியமான எல்லோராலும் விரும்பப்படும் துறையாக ஊடகத்துறை விளங்குகிறது. அதிலும் பத்திரிகைத்துறை என்பது கல்வியறிவு உள்ள எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு துறை ஆகும்.அதனாலேயே பத்திரிகைத்துறையை பற்றி நான் இங்கே எழுத தலைப்பட்டுள்ளேன்.

ஆரம்ப காலத்தில் அரசியலின் மற்றும் ஒரு கருவியாக இருந்த பத்திரிகைத்துறை நாளடைவில் மருகி இப்பொழுது பெரும்பாலும் மக்களுக்காகவே நடாத்தப்படும் ஒரு துறையாக காணப்படுகிறது.இந்த பத்திரிகைத்துறை இவ்வளவு வளர்ச்சி பெற்றதற்கு காரணம் மக்களின் படிப்பறிவு/எழுத்தறிவு வளர்ச்சியை கூறலாம்.

தொலைக்காட்சி,வானொலி ,இணையம் போன்ற மக்கள் தொடர்பு ஊடகங்கள் இன்று எவ்வளவோ இருந்தாலும் பத்திரிகைகளுக்கு மக்களிடத்தில் உள்ள முக்கியத்துவம் இன்றும் குறையவில்லை.மாறாக அதிகரித்து உள்ளதென கூறலாம் .இதற்கு காரணம் மக்களின் மனச்சாட்சிகளாக திகழ்பவை இந்தப் பத்திரிகைகள் தான் என்பதை கூறினால் அது மிகையாகாது.அதற்காக ஊடகத்துறையில் உள்ள ஏனையவற்றை குறைத்தும் மதிப்பிட முடியாது என்பதையும் இங்கே சுட்டிககாட்டப்பட வேண்டியுள்ளது.

இன்று பல நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கவும் கூட இந்த பத்திரிகைகளால் தான் முடியும் என்பதும் இந்தப் பத்திரிகைத் துறைக்கான முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.மேலும் இன்றைய நிலையில் பத்திரிகைகளுக்கு சமூக,இன,மொழி நோக்கு ஒரு புறம் இருந்தாலும் கூட மற்றைய தொழில்களை போல இதுவும் ஒரு முக்கிய தொழிலாக மாறிவிட்டது. ஆனாலும் இதற்கு ஒரு சமூகக் கடமை இருக்கின்றது என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.அத்துடன் பத்திரிகைகளின் மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மைக்கு பாதகம் இல்லாமல் செய்திகளை வெளியிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

இவ்வளவு பெருமை பெற்ற இந்தத் துறைக்கு எதிராக இன்று செய்தித்தணிக்கை, அலுவலக்கங்கள் மீது தாக்குதல், உண்மையை கூறினால் தடை,சிறை, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்,கொலை, அடக்குமுறை,வாய்ப்பூட்டு, போன்ற இன்னும் பல தண்டனைகளும், கண்டனங்களும், தாக்குதல்களும்,இவைக்கு எதிராக இன்று காத்துக்கொண்டு நிற்கின்றது.இதனாலேயே பத்திரிகையில் வேலை என்றதும் இலங்கையில் பலர் தலை தெறிக்க ஓடுவதும் இலங்கையில் பத்திரிகைத்துறைக்கான எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கி உள்ளது.

பத்திரிகைத்துறையானது துணிச்சல் மிகுந்த,சவாலான,மகிழ்ச்சியான பணித்தான் ஆனாலும் இலங்கையை பொறுத்த வரையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பணியாற்றும் ஒரு துறையாக மாறியிருக்கிறது.

காதல்

உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்…!

உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது…!

உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது…!

உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை…!

உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்…!

உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்…!

உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்…!

இன்று காதலர் தினத்தை கொண்டாடும்
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
http://flashman.blogspot.com/2007/10/blog-post.html

06 பிப்ரவரி 2009

புகைப்படம் சொல்லும் உண்மை

இன்றைய சூழலில் சஞ்சிகைகளின் பங்களிப்பு

இன்றைய காலப்பகுதி இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். வடக்கில் தமிழ் மக்கள் அன்றாடம் மடிந்துகொண்டிருக்க தெற்கிலோ ஊடகங்களின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு பல வாய்ப்பூட்டுக்கள் போடப்பட்டு ஒரு இக்கட்டாநிலை காணப்படும் இந்த சூழ்நிலையில் ஊடகத்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் சஞ்சிகைகளின் பணியானது மிகமுக்கியமானதாக கருதப்படுகின்றது.

பொதுவாக ஊடகம் எனும்பொழுது அவை மக்களுக்காக செயற்படும் ஒன்றாக அன்றிலிருந்து இன்றுவரை காணப்படுகின்றது. ஊடகத்திலும் குறிப்பாக பத்திரிகைகள் சஞ்சிகைகளை நாம் பார்த்தோம் என்றால் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இவை பிரதான பங்கு வகிக்கின்றது. எழுத்து என்பது ஒவ்வொரு இனத்துக்கும் அவ்வினத்தின் மொழியினுடைய வளர்ச்சிக்கும் முக்கியமானதொன்று. ஒவ்வொரு இனத்தினுடைய வரலாறுகளையும் கலாச்சாரம் பண்பாடுகளையும் அவற்றினுடைய தனித்துவங்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லக்கூடிய உன்னதமான பணியினைச் செய்யக்கூடய ஒன்றாக இந்த ஊடகப்பணி காணப்படுகின்றது. இதிலும் சஞ்சிகைகளுக்கு முக்கியமானதொரு இடமுண்டு.

இன்று இலங்கையில் சுமார் 15 சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பல சஞ்சிகைகள் தொடர்ச்சியாகவும், சில தடங்கல்கள் தாமதங்களுடன் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அவை பற்றி எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்கான முதற்காரணமாக இவைகள் மக்களை சென்றடையும் வழிமுறைகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இரண்டாவது பல சஞ்சிகைகள் தங்களுக்கென்று எல்லைகளை வகுத்துக்கொண்டு அந்த வட்டங்களுக்குள் உள்ள வாசகர்களை திருப்திபடுத்த முயல்வதே ஆகும்.இவ்வாறான பல காரணங்களுக்காக நாட்டிலுள்ள ஏனைய தமிழ் பேசும் மக்களின் கைகளை அவை சென்றடைவதில்லை.

ஜனரஞ்சகத் தன்மையையும் தாண்டி காலத்தின் கண்ணாடியாக சஞ்சிகைகள் இருக்கவேண்டும் .அந்தந்தக் காலங்களில் நடப்பவற்றை எதிர்காலத்தில் உள்ளவர்களும் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இந்த சஞ்சிகைகள் வழங்க வேண்டும் என்பதே என்னுடைய அவா. இற்றைக்கு 2000ம் வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் குறள்பாக்களை ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்காமல் வெறுமனே பாடிவிட்டு போயிருந்தால் இன்று எங்களுக்கு திருக்குறள் என்ற ஒன்று இல்லாமலேயே போயிருக்கும். அதே போலத்தான் மற்றமற்ற வரலாறுகளுக்கும் எமக்கு கிடைத்திருக்காது.

எனவே இன்றைய பதற்றமான சூழ்நிலையில் கொலைகள் அச்சுறுத்தல்கள் சவால்கள் இவையெல்லாவற்றையும் தாண்டி வெறுமனே இந்தியாவில் வெளியிடப்படும் சஞ்சிகைளைப் போலஅல்லாது தமிழ் பேசும் மக்களின் முகவரியாக தனித்துவமாக இவை அமையவேண்டும். அதே போல நாங்களும் அவற்றிற்கு எமது பங்களிப்புக்களை செலுத்தி இவற்றின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க வேண்டும். இந்தியாவிலிருந்த வெளிவரும் சஞ்சிகைகளை பலமடங்கு பணம் செலவு செய்து ஓடர் கொடுத்து வாங்கிப் படிக்கும் எங்களுக்கு சராசரி விலைகளில் கிடைக்கும் உள்ளுர் சஞ்சிகைகளை வாங்குவதற்கு தயக்கமாக இருக்கிறது. முதலில் இந்தியா மோகத்திலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.எங்களுடைய உள்ளுர் படைப்புக்களுக்கு நாம் ஆதரவளிப்போம். உள்ளுர் படைப்புக்களின் வளர்ச்சிக்கு நாங்களே பங்களிப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் அழிவடைந்துவரும் தழிழரின் வரலாறுகள் தமிழ் மொழியின் சிறப்புக்கள எதிர்காலத்தில் நிலைத்திருக்கும்.

28 ஜனவரி 2009

வானொலி நாடக எழுத்தாளர்களுக்கான சந்தர்ப்பம்

யங் ஏசியா தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்கவுள்ள வானொலி நாடக நிகழ்ச்சித்தொடருக்கான நாடக எழுத்தாளர்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் திறந்த போட்டிக்கான விண்ணப்பமும் கோரப்படுகிறது.

வானொலி நாடக பிரதி எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். நீங்கள் விரும்பும் தலைப்பில் வானொலி நாடகத்திற்கு பொருத்தமான கதையொன்றினை 1500 – 2000க்கு இடைப்பட்ட சொற்கள் கொண்டதாக சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தெளிவான கையெழுத்தில் எழுதி யங் ஏசிய டெலிவிஷன் நிறுவன முகவரிக்கு அனுப்பவும்.

இந்தப் போட்டியில் தெரிவு செய்யப்படும் 8 பேருக்கு வானொலி நாடக எழுத்தாக்கம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நாம் வழங்குவதோடு இந்த பயிற்சிப்பட்டறையில் தெரிவுசெய்யப்படும் 6 பேருக்கு சுமார் 2 வருடங்கள் முழுநேர வானொலி நாடக எழுத்தாளராக யங் ஏசியா டெலிவிஷன் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படும்.

வானொலி நாடக கதையுடன் உங்களது சுயவிபரக் கோவையை 2009 பெப்ரவரி 20ம் திகதிக்கு முன் “வானொலி நாடக பிரதியாக்கல் போட்டி”, யங் ஏசியா டெலிவிஷன், இல 713, டி. பி. விஜேசிங்க மாவத்தை, பெலவத்தை, பத்தரமுல்லை எனும் முகவரிக்கு எழுதியனுப்பவும்.