முதலிலேயே சொல்லுறன் எனக்கு இந்த ஆவி பேய் பிசாசு முனி .................[வேற ஏதும் இருந்தால் இடைவெளியில போட்டுக் கொள்ளுங்க]போன்றவற்றில் நம்பிக்கையில்லை. நாங்க சிங்கமெல்லே நள்ளிரவு 12 மணிக்கும் சுடலையை கடந்து செல்லுவோமெல்லோ. வேணுமெண்டால் என்னைப்பார்த்துதான் இவைகளை பயப்பட வேண்டும். இங்கே நான்கூறப்போகும் சம்பவங்கள் எனது நண்பர்களுக்கு நிகழ்ந்தவையாக அவர்கள் எனக்கு கூறிய உண்மைச் சம்பவங்கள்.
எனது நண்பர் ஒருவர் மலையகத்தில் தோட்டப் பாடசாலையொன்றில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். வார இறுதி நாட்களில் கொழும்புக்கு வந்து விடுவார். இப்படித்தான் ஒருநாள் கொழும்பில் நின்றபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இவரோடு பாடசாலையில் கடமையாற்றும் இன்னொரு ஆசிரியருடைய தம்பி திடீரென்று விபத்தொன்றில் இறந்து விட்டதாக அந்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெரிவிக்கப்பட்ட சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இருக்கும். இவரும் அந்த ஆசிரியரின் தம்பியின் மரணவீட்டில் கலந்து கொள்வதற்கென அவசரம் அவசரமாக புறப்பட்டார்.
அந்த ஆசிரியருடைய வீடு மலையகத்தில் உள்ள நகரிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் உள்ளாக மலையில் இருந்தது. நண்பர் நகரத்தை மாலை ஏழு மணியளவில் சென்றடைந்துள்ளார். நகரத்திலிருந்து மரண வீட்டுக்கு செல்வதற்கு ஒரேயொரு பேரூந்து மாத்திரமே இருந்தது. அதுவும் வேறு ஒருபாதையால் செல்லும். குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறங்கி ஏறத்தாள இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்லவேண்டும். நண்பரும் சரியென பேரூந்தில் ஏறி அமர்ந்து விட்டார். சுமார் 7.30 மணியளவில் குறிப்பிட்ட அந்த இடத்தில் நடத்துனரால் குறிப்பிட்ட வழியை காண்பித்து நண்பரை இறக்pவிட்டார்களாம். சரியான இருட்டு ஒருபுறம் மெதுவாக மழையும் தூறிக்கொண்டிருந்தது. நண்பருக்கும் புது அனுபவம். தட்டுத் தடுமாறி ஒற்றையடிப்பாதையால் நடந்து சென்று கொண்டிருக்கிறார். பாதையங்கும் சனநடமாட்டம் இல்லாமல் காரிருள் சூழ்ந்து கிடந்தது. நண்பருக்கும் ஒரு சிறு பயம் மனதுக்குள் இருந்தது. வழியிலே பேச்சுக்கு யாரும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். ஒரு அரைக் கிலோமீற்றர் சென்றிருப்பார் பாதையாரத்தில் அரிக்கன் லாம்புடன் உடலெல்லாம் போர்த்திய படி ஒரு மனிதர் நிண்டுகொண்டிருந்தார். நண்பரும் அவரை அணுகி மரணவீட்டுக் சென்று கொண்டிருப்பதாகவும் பாதை சரிவர தெரியவில்லையெனவும் உங்களுக்கு தெரிந்தால் சரியாக கூறும்படி கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த மனிதர் எனக்கு நன்றாக தெரியும் நான்போகும் பாதையில் தான் அந்த மரணவீடு இருக்கிறது என்றும் தன்னுடன் வரும்படியும் கூறியிருக்கிறார். நண்பருக்கும் நல்லதாக போய்விட்டது என்று எண்ணி அவரை பின்தொடர்ந்து சென்றிகொண்டிருக்கிறார்.
ஒரு பதினைந்து நிமிட நடைக்கு பின்னர் பதையிலிருந்து சற்று தூரத்தில் வெளிச்சம் தெரிந்த வீட்டை காட்டிய அந்த மனிதர் அதுதான் குறிப்பிட்ட ஆசிரியரின் வீடு எனவும் அங்கேதான் நீங்கள் செல்லவேண்டும் னெ கூறிசென்றுவிட்டார். நண்பரும் அவருக்கு நன்றிகூறி அந்த

மரணவீட்டை சென்று அடைந்தார். அங்கே இவருடைய சக ஆசிரியரை கண்டு துக்கம் விசாரித்துவிட்டு கதிரையில் அமர்ந்த போது மரண வீட்டுகாக அச்சடிக்கப்பட்ட துண்டுபிரசுரம் ஒன்றை ஒருவர் இவருக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கிப் பார்த்த நண்பர் அப்படியே உறைந்து விட்டாராம். அந்த துண்டுபிரசுரத்தில் இருந்த மரணமான ஆசிரியரின் தம்பியின் புகைப்படமும் இவரை ஒற்றையடிபாதையினால் கூட்டிவந்த மனிதருடைய படமும் ஒன்றாக இருந்ததே நண்பருடைய அதிர்ச்சிக்கு காரணமாகும். நண்பர் சத்தம் போடாமல் சக ஆசிரியரின் காதில் மெதுவாக இதை சொல்லியிருக்கிறார். அவம் சற்று நேரம் அதிச்சியடைந்து பின்னர் நிதானமடைந்தாராம். இறந்தவனுடன் பதினைந்து நிமிடம் நடந்து வந்ததை நினைக்கும் போது ஒரு திரில் அனுபவமாக இருக்கிறது என கதைக்கும்போது நண்பர் இப்போதும் எமக்கு கூறுவார்.