A Promised Land

22 மே 2020

LIFE STORY OF VATHEES VARUNAN | TAMIL | EPISODE 02

"LIFE STORY OF VATHEES VARUNAN" என்னுடை வாழ்க்கையின் ஆரம்பம் முதன் இன்றுவரை நான் பெற்ற அனுபவங்களை பதிவாக்க வேண்டுமென்பதன் வெளிப்பாடே "Life story of Vathees Varunan" உருவாகுவதற்கான மிகப் பிரதான காரணம். எனது இந்த வீடியோவில் என்னுடைய முதல் இடப்பெயர்வு, நவாலி சென்.பீற்றஸ் தேவாலைய விமானத் தாக்குதலில் உயிர்தப்பியது எவ்வாறு, பருத்தித்துறையில் எனது பாடசாலைக் காலம், பட்டத்திருவிழா, அம்மாவிடம் பச்சமட்டை அடிவாங்கியது போன்ற விடயங்களை பதிவு செய்திருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
https://youtube.com/vatheesvarunan






21 மே 2020

LIFE STORY OF VATHEES VARUNAN | TAMIL | HISTORY | EPISODE 01

"LIFE STORY OF VATHEES VARUNAN" என்னுடை வாழ்க்கையின் ஆரம்பம் முதன் இன்றுவரை நான் பெற்ற அனுபவங்களை பதிவாக்க வேண்டுமென்பதன் வெளிப்பாடே "Life story of Vathees Varunan" உருவாகுவதற்கான மிகப் பிரதான காரணம். எனது இந்த வீடியோவில் நான் பிறந்த இடம், இந்தியன் ஆமி, விடுதலைப் புலிகள், ஆயுதப் போராட்டம் தொடர்பில் நான் அறிந்து கொண்டது எவ்வாறு? முதல் இடப்பெயர்வு போன்ற விடயங்களை பதிவு செய்திருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.

18 மே 2020

"Returned" தமிழ் குறும்படம்


2015 ஆம் ஆண்டில் Youth Create & அனோமா ராஜகருணா அவர்களின் இணைத்தயாரிப்பில் நான் உருவாக்கிய "மீட்சி - Returned" குறும்படத்தினை 5 வருடங்களின் பின்னர் பொதுவெளியில் தற்போதுதான் முதன்முறையாக பகிர்கின்றேன். 

இதுவரையும் இந்த குறும்திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்த்து உங்கள் கருத்துகளை எனக்கு சொல்லுங்கள். அத்துடன் என்னுடைய யூரியூப் சணலையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். 
இந்த குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.



07 செப்டம்பர் 2018

28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்படும் மயிலிட்டி பாடசாலை



விடுவிக்கப்பட்ட பாடசாலையின் தற்போதைய தோற்றம்

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் கல்வியின் பங்கு இன்றியமையாத இன்றைய நவீன உலகில் கல்வி புகட்டும் பல பாடசாலைகள் இன்னும் பாதுகாப்பு படைகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் துன்பகரமானதொரு நிலைமையே இலங்கையின் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பகுதியில் காணப்படுகின்றது. 

ஏறத்தாள முப்பது வருட அகிம்சைப் போராட்டமும் முப்பதுவருட ஆயதப் போராட்டமும் நம்நாட்டுத் தமிழர்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் பாரியளவு தாக்கத்தை செலுத்தியிருந்தாலும் கல்வியில் அந்தளவிற்கு பெரியளவான தாக்கத்தினை செலுத்த முடியவில்லை என்பதனை வடக்கு கிழக்கின் தொடர்ச்சியான சிறந்த கல்வி பெறுபேறுகள் கட்டியம் கூறி நிற்கின்றன. 
இந்த வகையிலேயே முப்பது வருட ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களை தமது சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேறச் செய்தது மாத்திரமல்லாது அவர்களுடைய இடங்களில் பாதுகாப்பு படையினரின் முகாம்களுடன் கூடிய உயர் பாதுகாப்பு வலையங்களை உருவாக்கியிருந்தது. இந்த உயர் பாதுகாப்பு வலையங்களுக்குள் மக்களின் நிலங்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை சிக்கிக் கொண்டன. 

இந்த நிலையிலேயே அண்மையில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் உணர்வு பூர்வமான சில கோரிக்கைகளை விடுத்திருந்தார். அவற்றில் முதன்மையானது மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் விடுவிப்பு. 

யுத்த காலத்தில் பாதுகாப்பு படைகள் கைவசப்படுத்திய பொதுமக்களுடைய காணிகள் அவர்களுக்கு மீளவும் வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உடனடியாகவே அந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை அழைத்து இந்தப் பாடசாலை விடுவிப்பு தொடர்பில் கேட்டறிந்ததுடன் உடனடியாகவே இராணுவத் தளபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாடசாலையை விடுவிப்பதற்கான உத்தரவினையும் வழங்கியதுடன் அந்த நிகழ்வில் உரையாற்றும் போது இன்றும் இரண்டு வாரங்களில் மயிலிட்டி பாடசாலை விடுவிக்கப்படும் என்று அப்பகுதி மக்களின் உற்காச கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே செப்டெம்பர் 06 ஆந் திகதி மயிலிட்டி வடக்கு கலைமகள் வித்தியாலயம் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது யாழ் மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் இதுவரையும் விடுவிக்கப்படாதிருந்த பொதுமக்களின் காணிகளின் ஒரு தொகுதியும் அன்றைய தினம் விடுவிக்கப்பட இருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்திருக்கின்றமையானது எதிர்பார்ப்புக்களுடனிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் இராணுவக் கட்டளை தளபதியுடன் பாடசாலை விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடும் ஜனாதிபதி 
1818 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷனரி சபையினைச் சேர்ந்த டானியல் பூவர் என்பவரால் 33 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையை 1963 இல் அரசு பொறுப்பேற்று கொண்டாலும் தொடர்ந்தும் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரிலேயே 1975 ஆம் ஆண்டுவரை இயங்கி வந்திருந்தது. 1975 ஆம் ஆண்டு தமிழ் அரசியல் தலைவரான தந்தை செல்வா அவர்களினாலேயே இந்தப் பாடசாலைக்கு மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் எனப் பெயர் சூட்டப்பட்டது. 
931 மாணவர்களுடனும் 26 ஆசிரியர்களுடனும் இயங்கிவந்த இப்பாடசாலை 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக வேறு இடத்தில் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும் பின்னர் 87 ஆம் ஆண்டே மீண்டும் சொந்த இடத்தில் மீள் இயங்க தொடங்கியபோதும் மாணவர்களின் எண்ணிக்கை 871 ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. 

1990 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பமான உள்நாட்டுப் போர் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் திகதி மயிலிட்டி மக்கள் இடப்பெயர்வை சந்தித்ததன் காரணமான இப்பாடசாலை சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியலயத்தில் மாலை நேரப் பாடசாலையாக 123 மாணவர்களுடனும் 12 ஆசிரியர்களுடனும் இயங்கியது. மாலை நேரப் பாடசாலையாக அங்கு இயங்கியதன் காரணமாக மாணவர்களின் வரவு சரிபாதியாக வீழ்ச்சியடையவும் பின்னர் சுன்னாகம் வினைல்ஸ் தனியார் கல்வி நிலையத்தில் காலை நேர பாடசாலையாக இயங்கத் தொடங்கியது. 

தற்போதைய பாடசாலை இயங்கிவரும் நிலை
பின்னர் 1993 ஆம் ஆண்டு இப்பாடசாலை தனது தனித்துவத்தினை இழந்து மல்லாகம் மகா வித்தியலயத்துடன் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களால் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல பாடசாலைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன் அவை கூட்டுப் பாடசாலைகளாகவே தற்காலிக கொட்டகைகளில் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. 1996 ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் தற்காலிக கொட்டகைகளை அமைத்து இயங்கிவரும் இப்பாடசாலைக்கு ஜனாதிபதி அவர்களின் உத்தரவிற்கமைய தற்போது விடிவு கிடைத்திருக்கின்றது. 

தற்போது பாடசாலை இயங்கிவரும் ஒரு கட்டிடம்

மயிலிட்டி கிராமத்தின் ஒரு பகுதி ஏற்கனவே பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தும் பாடசாலை பகுதி இதுவரை விடுவிக்கப்படாதிருந்தமை காரணமாக மயிலிட்டியில் மீளக்குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பேரூந்துகளில் சுன்னாகத்திற்கு பிரயாணம் செய்தே தமது கல்வியினை தொடரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கும் தமது சொந்த ஊரிலேயே தமது காலடிக்குள் இருக்கும் பாடசாலையில் கல்வியினை தொடரக்கூடிய வாய்ப்பு கிட்டியிருப்பது அம்மக்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியினை தோற்றுவிக்கும்.  


ஆனாலும் இந்தப் பாடசாலையினை உடனடியாக மீளவும் இயங்கவைப்பதற்கு தற்போதிருக்கும் முக்கிய சவால், பாசாலைக்கு தேவையான வளங்களை உடனடியாக பெற்றுக் கொடுப்பதேயாகும். இதற்குரிய நடவடிக்கைகளை யாழ் மாவட்ட அரச அதிபரும் மீள்குடியேற் அமைச்சரும் மேற்கொள்ள வேண்டும். பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியில் அரசாங்கத்தின் பங்கு மிக்கியமானதாக காணப்படும் அதேவேளை உள்ளுரிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களுக்கும் சிறியளவேனும் பங்கு இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத ஒன்று. அதையுணர்ந்து அவர்களும் ஆக்கபூர்வமான பங்களிப்பினை இந்தப் பாடசாலை சமூகத்திற்கு வழங்கவேண்டும். 

தற்காலிக வகுப்பறை கட்டிடம்
இதேவேளை காங்கேசந்துறை, மயிலிட்டி மற்றும் பலாலி பிரதேசங்களில் இன்னும் விடுவிக்கப்படாமல் ஆறு பாடசாலைகள் காணப்படுகின்றன. காங்கேசந்துறை மகா வித்தியாலயம், காங்கேசந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலை, மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை, வசாவிளான் சி.வேலுப்பிள்ளை வித்தியாலயம், பலாலி மேற்கு அமெரிக்கன் மிஷன் வித்தியாலயம் மற்றும் சித்திவிநாயகர் வித்தியாலயம் ஆகியனவே வலிகாமம் வடக்கு பிரதேத்தில் இன்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படும் பாடசாலைகளாகும். 

இதற்கு முன்னர் இருந்த எந்த அரச தலைவரும் தமிழ் மக்கள் மீது கொண்டிருக்காத கரிசனையை தற்போதைய அரச தலைவர் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி இலங்கையின் முழு சிறுபான்மை மக்களுக்குமே வரப்பிரசாதம். மூன்று தசாப்த கோர யுத்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு அபிவிருத்தி மிகவும் அத்தியாவசியம். ஆகவே தமது குறுகிய சுய இலாபங்களுக்காக அடையாள அரசியலை மட்டுமே முன்னெடுத்து பிரச்சினைகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட முயற்சிக்கும் பிரிவினரின் கபடத்தனங்களை இனங்கண்டு அடையாள அரசியலுடன் இணைந்த அபிவிருத்தியினையும் முன்னெடுக்க தேவையான அழுத்தங்களை மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் வழங்கவேண்டிய பொறுப்பு தமக்கு இருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டிய தருணம் இதுதான் என்பதை தமிழ் மக்கள் புரிந்து செயற்பட வேண்டும்.  

(கடந்த 06 ஆம் திகதி யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த எனது கட்டுரை)

21 ஆகஸ்ட் 2018

புத்தெழுச்சிபெறும் வடக்கு - மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி


யாழ் குடாநாட்டின் மயிலிட்டி மீன்பிடித் துறைமுத்தினை மீண்டும் முழுஅளவில் இயங்க வைப்பதற்கான முதற்கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் இம்மாதம் 22 ஆம் திகதி ஜனதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது.

80 களில் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் மூன்;றில் ஒருபகுதியினை பெற்றுக்கொடுத்த முன்னணி மீன்பிடித் துறைமுமாக இருந்த மயிலிட்டி உள்நாட்டு போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அரச படைகளிடம் சிக்கியது. பலாலி விமானப் படைத்தளத்தை சுற்றி முப்படைகளின் முகாம்கள் வேரூன்ற ஆரம்பித்ததிலிருந்து வலி வடக்கு பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டமையினால் பலாலி மயிலிட்டி வளலாய் காங்கேசந்துறை, ஊறணி, தெல்லிப்பளை போன்ற யாழ் குடாநாட்டின் கரையோர பாரம்பரிய வசிப்பிடங்களிலிருந்து அப்பகுதி மக்கள் வெளியேற நிப்பந்திக்கப்பட்டனர். 

அவ்வாறு வெளியேறிய மக்கள் பல காலங்கள் வழிமேல் விழிவைத்து காத்திருந்த போதிலும் நீண்ட காலமாக அவர்களது பூர்வீக இடங்களுக்கு திரும்பும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆயினும் தாம் இழந்த நிலத்தினை மீளப்பெறும் முயற்சியில் உறுதியாக இருந்த அம்மக்களுக்கு 26 ஆண்டுகள் கடந்த நிலையிலேயே விமோசனம் கிடைத்தது. நாட்டின் பாதுகாப்பை பொறுத்த வரையில் கேந்திர முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாக இப்பிரதேசம் விளங்கியதால் இப்பிரதேசத்தை விடுவிப்பதற்கு படைத்தரப்பினை இணங்கவைப்பது மிகக் கடினமான காரியமாகவே இருந்தது. ஆயினும் மக்களின் சொந்த நிலங்களை மீண்டும் அவர்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக 27 ஆண்டுகளின் பின்னர் கடந்த வருடம் நடுப்பகுதியில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் மக்களின் உபயோகத்திற்காக பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பு கிட்டியது. 

ஆயினும் பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் இருந்துவந்த அத்துறைமுகத்தை இயங்கவைக்க வேண்டுமாயின் முற்றுமுழுதாக புனரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை உணர்ந்த அரசாங்கம் அப்பணியினை மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுப்பதற்கு தீர்மானித்தது. இவ் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முற்றாக சேதமடைந்திருக்கும் துறைமுகத்தின் இறங்குதுறை மற்றும் ஐஸ் களஞ்சியம், எரிபொருள் களஞ்சியம் உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகளையும் செய்வதுடன் இப்பணிகளின் முதற்கட்டமாக தற்போதைய துறைமுகப் படுக்கையினை ஆழப்படுத்தல், 80 மீற்றர் நீளமான துறைமுக மேடைய அமைத்தல், வலை தயாரிக்கும் நிலையம், தகவல் பரிமாற்று நிலையம், மீனவ சனசமூக நிலையம், கண்காணிப்பாளர் அலுவலகம், மீனவர் சங்கக் கட்டிடம், நீர் மற்றும் மின்சார வசதி, மலசலகூட வசதி, சமிஞ்ஞை விளக்கு கோபுரங்கள் ஆகியன உருவாக்கப்பட இருக்கின்றன. 

அதன் இரண்டாம் கட்டமாக தற்போதைய துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் மீன் ஏலவிற்பனை நிலையம், கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் செயற்திட்டம், நிர்வாக கட்டிடம், மின் பிறப்பாக்கிகள், ரேடார் கட்டுப்பாட்டுப் பிரிவு, உணவகம், அலுவலகர்கள் தங்குமிட வசதி மற்றும் உள்ளக வீதிப் புனரமைப்பு ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. 
இந்நிர்மாணப் பணிகளின்போது அரச மற்றும் அரச படைத்தரப்பினர்களுடன் இத்துறைமுகத்தின் பயனாளிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் மயிலிட்டி துறைமுகத்தை இலங்கை மீன்பிடித் துறையின் ஒரு முக்கிய கேந்திர நிலையாக மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைப்பதுடன் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இழந்த வாழ்க்கையை மீளவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும். 

30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இன்னல்களை சந்தித்த சமூகத்தை விடிவைநோக்கி கொண்டு செல்வதற்கான பல வாய்ப்புகள் தற்போது ஆங்காங்கே உருவாகி வருகின்றன. அன்று தனிமனித விருப்பு வெறுப்பே நம்நாட்டின் அரசியல் என்றிருந்த நிலைமாறி மற்றவர்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் மதித்தே முடிவுகளை எடுக்க வேண்டுமென்ற சிந்தனை இன்றைய அரச தலைமைத்துவத்திடம் இருப்பதே அதற்கு காரணமாகும். அதனாலேயே பல தசாப்தங்களாக கனவாக இருந்துவந்த பல விடயங்கள் ஒவ்வொன்றாக நனவாகி வருகின்றன என்பதை தமிழ்ச் சமூகம் உணர்ந்து கொள்வது அவசியமாகும். தமிழ் சமூகத்தின் எதிர்காலம் இந்த சிந்தனை மாற்றத்திலேயே தங்கியிருக்கின்றது. 

கடல் வளம் என்பது ஒரு நாட்டுக்கு கிடைக்கும் இயற்கையின் மாபெரும் கொடையாகும். ஒரு தீவு தேசம் என்றவகையில் எமது நாட்டைச்சுற்றி வளமான கடற்பரப்பு அமைந்திருப்பது நம்மவர்களின் பாக்கியமே. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடகிழக்கு பிரதேசம் நாட்டின் மொத்த கடற்பரப்பின் பெரும்பகுதியினை கொண்டிருப்பதால் தமிழ் சமூகத்தின் இருப்பு மீது இந்த கடலின் தாக்கம் மிக அதிகமானதாக இருந்து வருகின்றது. 

அந்தவகையில் நமது நாட்டுக்கும் வடபகுதி மீனவ சமூகத்திற்கும் பொருளாதார ரீதியில் பாரிய பங்களிப்பை செய்துவந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மூன்று தசாப்தங்களின் பின்னராவது அப்பகுதி மீனவ சமுதாயத்திடம் மீண்டும் கிடைக்கப் பெறுவதன் மூலம் மிகுந்த பயனை அடையக் கூடியதாக இருக்கும். குறிப்பாக 2015 ஆம் ஆண்டுக்கு முன் சர்வதேச மீன் ஏற்றுமதியில் எமக்கு விதிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் தடை நீங்கி மீன் ஏற்றுமதிக்கான ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த நிலையில் அதனை சிறந்த முறையில் உபயோகப்படுத்திக் கொள்ள வடபுல மீனவ சமூகம் முன்வருமாக இருப்பின் அதனால் அடையக்கூடிய பயன் மிகப்பாரியதாக இருக்கும். இத்தகைய வாய்ப்புக்களை சாதகமாக்கிக் கொள்வதற்கு உள்நாட்டு அதிகாரிகளும் புலம்பெயர் தமிழ் சமூகமும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் வடபகுதியையும் அம்மக்களின் பொருளாதாரத்தையும் சிறந்த நிலைமைக்கு கொண்டுவருவதற்கு அது ஏதுவாக அமையும். 

அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்தவாறு வெறுமனே அடையாள அரசியலை முதன்மைப்படுத்துவதற்கு பதிலாக அடையாளத்துவ அரசியலுடன் இணைந்ததான அபிவிருத்தி அரசியலை முன்னெடுப்பதற்கு வடபுல தமிழ் சமூகம் முனையும் பட்சத்திலேயே இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களின் உரிய பலனை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தோடு அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பொருளாதார கட்டமைப்பு இன்றியமையாததாக அமைகின்றது என்பதை புரிந்து கொள்வதன் மூலம் தமிழ் சமூகம் தமக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களை சாதகமாக பயன்படுத்த முன்வரவேண்டும்.

(யாழ் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெறுவதை முன்னிட்டு தமிழ்மிரர் பத்திரிகையில் ஆகஸ்ட் 21வெளிவந்த  )